அத்தியாயம்: 12, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1784

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلِ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏

اجْتَمَعَ ‏ ‏رَبِيعَةُ بْنُ الْحَارِثِ ‏ ‏وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَقَالَا وَاللَّهِ لَوْ بَعَثْنَا هَذَيْنِ الْغُلَامَيْنِ قَالَا لِي ‏ ‏وَلِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَلَّمَاهُ فَأَمَّرَهُمَا عَلَى هَذِهِ الصَّدَقَاتِ فَأَدَّيَا مَا يُؤَدِّي النَّاسُ وَأَصَابَا مِمَّا يُصِيبُ النَّاسُ قَالَ فَبَيْنَمَا هُمَا فِي ذَلِكَ جَاءَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏فَوَقَفَ عَلَيْهِمَا فَذَكَرَا لَهُ ذَلِكَ فَقَالَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏لَا تَفْعَلَا فَوَاللَّهِ مَا هُوَ بِفَاعِلٍ فَانْتَحَاهُ ‏ ‏رَبِيعَةُ بْنُ الْحَارِثِ ‏ ‏فَقَالَ وَاللَّهِ مَا تَصْنَعُ هَذَا إِلَّا ‏ ‏نَفَاسَةً ‏ ‏مِنْكَ عَلَيْنَا فَوَاللَّهِ لَقَدْ نِلْتَ صِهْرَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَا نَفِسْنَاهُ عَلَيْكَ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏أَرْسِلُوهُمَا فَانْطَلَقَا وَاضْطَجَعَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏قَالَ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ سَبَقْنَاهُ إِلَى الْحُجْرَةِ فَقُمْنَا عِنْدَهَا حَتَّى جَاءَ فَأَخَذَ بِآذَانِنَا ثُمَّ قَالَ أَخْرِجَا مَا تُصَرِّرَانِ ثُمَّ دَخَلَ وَدَخَلْنَا عَلَيْهِ وَهُوَ يَوْمَئِذٍ عِنْدَ ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏قَالَ فَتَوَاكَلْنَا الْكَلَامَ ثُمَّ تَكَلَّمَ أَحَدُنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْتَ أَبَرُّ النَّاسِ ‏ ‏وَأَوْصَلُ النَّاسِ وَقَدْ بَلَغْنَا النِّكَاحَ فَجِئْنَا لِتُؤَمِّرَنَا عَلَى بَعْضِ هَذِهِ الصَّدَقَاتِ فَنُؤَدِّيَ إِلَيْكَ كَمَا يُؤَدِّي النَّاسُ وَنُصِيبَ كَمَا يُصِيبُونَ قَالَ فَسَكَتَ طَوِيلًا حَتَّى أَرَدْنَا أَنْ نُكَلِّمَهُ قَالَ وَجَعَلَتْ ‏ ‏زَيْنَبُ ‏ ‏تُلْمِعُ ‏ ‏عَلَيْنَا مِنْ وَرَاءِ الْحِجَابِ أَنْ لَا تُكَلِّمَاهُ قَالَ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ الصَّدَقَةَ لَا ‏ ‏تَنْبَغِي لِآلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ ادْعُوَا لِي ‏ ‏مَحْمِيَةَ ‏ ‏وَكَانَ عَلَى الْخُمُسِ ‏ ‏وَنَوْفَلَ بْنَ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏قَالَ فَجَاءَاهُ فَقَالَ ‏ ‏لِمَحْمِيَةَ ‏ ‏أَنْكِحْ هَذَا الْغُلَامَ ابْنَتَكَ ‏ ‏لِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏فَأَنْكَحَهُ وَقَالَ ‏ ‏لِنَوْفَلِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنْكِحْ هَذَا الْغُلَامَ ابْنَتَكَ لِي فَأَنْكَحَنِي وَقَالَ ‏ ‏لِمَحْمِيَةَ ‏ ‏أَصْدِقْ عَنْهُمَا مِنْ الْخُمُسِ كَذَا وَكَذَا ‏

‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَلَمْ يُسَمِّهِ لِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ الْهَاشِمِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّ أَبَاهُ ‏ ‏رَبِيعَةَ بْنَ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏وَالْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏قَالَا ‏ ‏لِعَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ ‏ ‏وَلِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏ائْتِيَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَقَالَ فِيهِ فَأَلْقَى ‏ ‏عَلِيٌّ ‏ ‏رِدَاءَهُ ثُمَّ اضْطَجَعَ عَلَيْهِ وَقَالَ أَنَا ‏ ‏أَبُو حَسَنٍ الْقَرْمُ ‏ ‏وَاللَّهِ لَا أَرِيمُ مَكَانِي حَتَّى يَرْجِعَ إِلَيْكُمَا ابْنَاكُمَا بِحَوْرِ مَا بَعَثْتُمَا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ ‏ ‏لِمُحَمَّدٍ ‏ ‏وَلَا لِآلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَقَالَ أَيْضًا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ ‏ ‏ادْعُوَا لِي ‏ ‏مَحْمِيَةَ بْنَ جَزْءٍ ‏ ‏وَهُوَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي أَسَدٍ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَعْمَلَهُ عَلَى الْأَخْمَاسِ

ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி-என் தந்தை) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்லு பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) “இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு அமர்த்தப்பட்டால்,) மக்கள் வழங்குகின்ற(ஸகாத்)தை இவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) பிறருக்குக் கிடைக்கின்ற (பரிசுப்) பொருள் போல இவர்களுக்கும் கிடைக்கும்” என்று பேசிக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை அலீ (ரலி) அவர்களிடம் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி), “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நீங்கள் சொல்வதுபோல் செய்யமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி), அலீ (ரலி) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் சொல்கின்றீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (மகளை மணந்து) மருமகன் உறவானீர்கள். அதனால் நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!” என்று கூறினர். அலீ (ரலி), “அவர்களிருவரையும் அனுப்பிப் பாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) (அங்கேயே) சாய்ந்து படுத்துக்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் நாங்கள் (இருவரும்) முந்திக் கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பேசுமாறு சொல்லிக் கொண்டிருந்தோம்.

இறுதியாக, எங்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகைக் குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக் கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, தான-தர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நியமிக்குமாறு கேட்டு உங்களிடம் நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குப் பரிசாக) பிறர் பெற்றுக்கொள்வதைப் போன்று நாங்களும் பெற்றுக்கொள்வோம்”’ என்று கூறினார்.

இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் (மீண்டும்) பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) திரைக்கு அப்பாலிருந்து ‘பேச வேண்டாம்’ என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்” என்று கூறிவிட்டு, “(பனூ அஸத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி), போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான குமுஸ் நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்).

அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், “இந்த (ஃபள்லு பின் அப்பாஸ்) இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), “இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) எனக்கு(த் தம் மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் “இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக் கொடையாக (மஹர்) கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்புகள் : இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்), “அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) (அந்த) மஹர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை” என்று கூறினார்கள்.

யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பு “என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறியதாகத் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும் அதில், அலீ (ரலி) தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். மேலும், “நான் ஹஸனின் தந்தை ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டு வரும்வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்” என்று அலீ (ரலி) கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

கூடுதலாக,

எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்தத் தர்மப் பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். மேலும், “மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்றார்கள். அவர் பனூ அஸத் குலத்தைச் சேர்ந்தவராவார். போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை நியமித்திருந்தார்கள் என்றும் காணப்படுகிறது:

Share this Hadith:

Leave a Comment