அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2165

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏
‏كَلَّمَا ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حِينَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏لِقِتَالِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَا لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ فَإِنَّا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ بَيْنَ النَّاسِ قِتَالٌ يُحَالُ بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ ‏ ‏فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ حِينَ حَالَتْ كُفَّارُ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏بَيْنَهُ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً فَانْطَلَقَ حَتَّى أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏فَلَبَّى بِالْعُمْرَةِ ثُمَّ قَالَ إِنْ خُلِّيَ سَبِيلِي قَضَيْتُ عُمْرَتِي وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ ثُمَّ تَلَا ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ بِظَهْرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْعُمْرَةِ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْحَجِّ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجَّةً مَعَ عُمْرَةٍ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏ابْتَاعَ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏هَدْيًا ‏ ‏ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ لَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ مِنْهُمَا بِحَجَّةٍ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَرَادَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏الْحَجَّ حِينَ نَزَلَ الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ وَكَانَ يَقُولُ مَنْ جَمَعَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ كَفَاهُ طَوَافٌ وَاحِدٌ وَلَمْ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், “இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மக்களிடையே (உள் நாட்டுப்) போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படக் கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினர்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, அவர்களைக் குறைஷி இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு புறப்பட்டு ‘துல்ஹுலைஃபா’விற்குச் சென்றதும் உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். மேலும், “கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் நான் உம்ராச் செய்து முடிப்பேன். அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

தொடர்ந்து பயணம் செய்து ‘பைதாஉ’ எனும் இடத்தை அடைந்தபோது, “உம்ராவிற்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவது, ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவதைப் போன்றுதான். (உம்ரா, ஹஜ்) அவ்விரண்டின் நிலையும் ஒன்றே; நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்று ‘குதைத்’ எனுமிடத்தில் ஒரு பலிப் பிராணியை விலைக்கு வாங்கினார்கள்.

பிறகு உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தடவை (ஏழு முறை) கஅபாவையும், (ஏழு முறை) ஸஃபா-மர்வாவுக்குமிடையேயும் சுற்றி வந்தார்கள். பின்னர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று ஹஜ்ஜை நிறைவு செய்து, உம்ரா, ஹஜ் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள்” என்று இச்செய்தி துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதன் இறுதியில், “உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்பவருக்கு ஒரு தவாஃபே போதும்” என்று இப்னு உமர் (ரலி) கூறுவார்கள் என்றும், “அவ்விரண்டிலிருந்தும் முழுமையாக விடுபடாத வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதில்லை” என்றும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: