و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَ حَرْمَلَةُ حَدَّثَنَا و قَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ:
يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ فِي بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تَرْجِينَ النِّكَاحَ إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي
قَالَ ابْنُ شِهَابٍ فَلَا أَرَى بَأْسًا أَنْ تَتَزَوَّجَ حِينَ وَضَعَتْ وَإِنْ كَانَتْ فِي دَمِهَا غَيْرَ أَنْ لَا يَقْرَبُهَا زَوْجُهَا حَتَّى تَطْهُرَ
என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்), உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி ஸுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) (கேட்டறிந்து, என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:
ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி), பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த ஸஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார். அப்போது ஸுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் (ரலி) இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) ஸுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து ஸுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக்காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) ஸுபைஆவிடம் வந்து, “திருமணம் செய்யும் ஆசையில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய ‘இத்தா’க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது” என்று சொன்னார்கள்.
ஸுபைஆ (ரலி) கூறுகின்றார்கள்:
இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து மாலை நேரத்தில் நான் (வெளிச் செல்லும்) எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்” என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்” என உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்)
குறிப்புகள் :
“(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவுடன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (உடலுறவுக்காக) நெருங்கக் கூடாது” என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘இத்தா‘ என்பது கரு அறியக் காத்திருக்கும் காலமாகும். கணவன் இறந்துவிட்ட, கருவுறாத பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் ‘இத்தா‘ இருக்கவேண்டும்.
ஒரு மாதக் கருவைச் சுமக்கும் பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் பிரசவிக்கும்வரை – ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் – ‘இத்தா‘ கடைப்பிடிக்க வேண்டும்.
ஒன்பது மாதக் கருவைச் சுமக்கும் பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் பிரசவிக்கும்வரை – ஏறத்தாழ ஒரு மாதம் – ‘இத்தா‘ இருந்தால் போதும் (அல்குர்ஆன் 65:4).