அத்தியாயம்: 3, பாடம்: 08, ஹதீஸ் எண்: 473

حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏يَعْنِي أَخَاهُ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏
‏كُنْتُ قَائِمًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَاءَ ‏ ‏حِبْرٌ ‏ ‏مِنْ ‏ ‏أَحْبَارِ ‏ ‏الْيَهُودِ ‏ ‏فَقَالَ السَّلَامُ عَلَيْكَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏فَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ مِنْهَا فَقَالَ لِمَ تَدْفَعُنِي فَقُلْتُ أَلَا تَقُولُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الْيَهُودِيُّ إِنَّمَا نَدْعُوهُ بِاسْمِهِ الَّذِي سَمَّاهُ بِهِ أَهْلُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اسْمِي ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏الَّذِي سَمَّانِي بِهِ أَهْلِي فَقَالَ الْيَهُودِيُّ جِئْتُ أَسْأَلُكَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيَنْفَعُكَ شَيْءٌ إِنْ حَدَّثْتُكَ قَالَ أَسْمَعُ بِأُذُنَيَّ ‏ ‏فَنَكَتَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعُودٍ مَعَهُ فَقَالَ سَلْ فَقَالَ الْيَهُودِيُّ أَيْنَ يَكُونُ النَّاسُ ‏‏يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ ‏
‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هُمْ فِي الظُّلْمَةِ دُونَ ‏ ‏الْجِسْرِ ‏ ‏قَالَ فَمَنْ أَوَّلُ النَّاسِ ‏ ‏إِجَازَةً ‏ ‏قَالَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏قَالَ الْيَهُودِيُّ فَمَا ‏ ‏تُحْفَتُهُمْ ‏ ‏حِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَالَ زِيَادَةُ كَبِدِ ‏ ‏النُّونِ ‏ ‏قَالَ فَمَا غِذَاؤُهُمْ عَلَى ‏ ‏إِثْرِهَا ‏ ‏قَالَ يُنْحَرُ لَهُمْ ثَوْرُ الْجَنَّةِ الَّذِي كَانَ يَأْكُلُ مِنْ أَطْرَافِهَا قَالَ فَمَا شَرَابُهُمْ عَلَيْهِ قَالَ مِنْ عَيْنٍ فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا قَالَ صَدَقْتَ قَالَ وَجِئْتُ أَسْأَلُكَ عَنْ شَيْءٍ لَا يَعْلَمُهُ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ إِلَّا نَبِيٌّ أَوْ رَجُلٌ أَوْ رَجُلَانِ قَالَ يَنْفَعُكَ إِنْ حَدَّثْتُكَ قَالَ أَسْمَعُ بِأُذُنَيَّ قَالَ جِئْتُ أَسْأَلُكَ عَنْ الْوَلَدِ قَالَ مَاءُ الرَّجُلِ أَبْيَضُ وَمَاءُ الْمَرْأَةِ أَصْفَرُ فَإِذَا اجْتَمَعَا فَعَلَا مَنِيُّ الرَّجُلِ مَنِيَّ الْمَرْأَةِ أَذْكَرَا بِإِذْنِ اللَّهِ وَإِذَا عَلَا مَنِيُّ الْمَرْأَةِ مَنِيَّ الرَّجُلِ آنَثَا بِإِذْنِ اللَّهِ قَالَ الْيَهُودِيُّ لَقَدْ صَدَقْتَ وَإِنَّكَ لَنَبِيٌّ ثُمَّ انْصَرَفَ فَذَهَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَدْ سَأَلَنِي هَذَا عَنْ الَّذِي سَأَلَنِي عَنْهُ وَمَا لِي عِلْمٌ بِشَيْءٍ مِنْهُ حَتَّى ‏ ‏أَتَانِيَ اللَّهُ بِهِ ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ زَائِدَةُ كَبِدِ ‏ ‏النُّونِ ‏ ‏وَقَالَ أَذْكَرَ وَآنَثَ وَلَمْ يَقُلْ أَذْكَرَا وَآنَثَا ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் (ஒருநாள்) நின்று கொண்டிருந்தபோது யூத அறிஞர் ஒருவர் வந்து, “முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க!” என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்துத் தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், “ஏன் என்னைத் தள்ளுகிறாய்?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் விளிக்கக் கூடாதா(பெயர் கூறி அழைக்கிறீரே)?” என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், “அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது பெயர் முஹம்மத் என்பதுதான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்டப் பெயர்” என்று சொன்னார்கள். அந்த யூதர், “உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காக வந்தேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறும் செய்தி உமக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “நான் செவி மடுப்பேன்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்) “கேளுங்கள்!” என்றார்கள்.

அந்த யூதர், “இந்தப் பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள். அவர், “மக்களிலேயே முதன் முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யாவர்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள்” என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், “அவர்கள் சுவர்க்கத்துக்குள் நுழையும் போது அவர்களுக்கு வழங்கப்படும் உன்னத ஊண் என்ன?” என்று கேட்டார். அதற்கு, “மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு” என்று பதிலளித்தார்கள். “அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன?” என்று அவர் கேட்க, “சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறுக்கப்படும்” என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பின் அவர்கள் அருந்துவது என்னவாக இருக்கும்?” என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்குள்ள ‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்)” என்று பதிலளிக்க, அவர் “நீர் கூறியது உண்மையே” என்று கூறினார்.

பிறகு, “பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறும் செய்தி உமக்குப் பயன் தருமா?” என்று கேட்டார்கள். அவர், “நான் செவி மடுப்பேன்” என்றார். பிறகு அவர், “குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன்)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நாட்டப்படி ஆண் குழந்தையாகப் பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை(விந்து உயிரணுவை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி பெண்குழந்தையாகப் பிறக்கும்” என்று பதிலளித்தார்கள்.

அந்த யூதர், “நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர்தாம்” என்று கூறி விட்டுத் திரும்பிச் சென்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் என்னிடம் கேட்டவவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸ் யஹ்யா பின் ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன்” என்று ஸவ்பான் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது. மேலும் ‘ஸியாதத்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘ஸாயிதத்’ எனும் சொல்லும் “அல்லாஹ்வின் நாட்டப்படி – ஆண் குழந்தை பிறக்கும்; பெண் குழந்தை பிறக்கும்” என்றும் இடம் பெற்றுள்ளது.