அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3325

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَنَابٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ زَكَرِيَّاءَ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى الْبَرَاءِ فَقَالَ أَكُنْتُمْ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ يَا أَبَا عُمَارَةَ فَقَالَ أَشْهَدُ عَلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم مَا وَلَّى وَلَكِنَّهُ انْطَلَقَ أَخِفَّاءُ مِنَ النَّاسِ وَحُسَّرٌ إِلَى هَذَا الْحَىِّ مِنْ هَوَازِنَ وَهُمْ قَوْمٌ رُمَاةٌ فَرَمَوْهُمْ بِرِشْقٍ مِنْ نَبْلٍ كَأَنَّهَا رِجْلٌ مِنْ جَرَادٍ فَانْكَشَفُوا فَأَقْبَلَ الْقَوْمُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ يَقُودُ بِهِ بَغْلَتَهُ فَنَزَلَ وَدَعَا وَاسْتَنْصَرَ وَهُوَ يَقُولُ ‏ “‏ أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ اللَّهُمَّ نَزِّلْ نَصْرَكَ ‏”‏ ‏.‏ قَالَ الْبَرَاءُ كُنَّا وَاللَّهِ إِذَا احْمَرَّ الْبَأْسُ نَتَّقِي بِهِ وَإِنَّ الشُّجَاعَ مِنَّا لَلَّذِي يُحَاذِي بِهِ ‏.‏ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடினீர்களா, அபூஉமாரா?” என்று கேட்டார்.

அதற்கு பராஉ (ரலி) கூறினார்கள்: “நான் அறுதியிட்டுச் சொல்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வாங்கிச் செல்லவில்லை. ஆயினும், மக்களில் அவசரப்பட்டுவந்த சில நிராயுதபாணிகள் (எதிரிகளான) அந்த ஹவாஸின் குலத்தாரை எதிர்கொண்டனர். அவர்களோ வில் வித்தையில் வீரர்களாய் இருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் அம்புக் கூட்டிலிருந்து அம்புகளை எடுத்து எய்தனர்.

அந்த அம்புகள் வெட்டுக்கிளி கூட்டங்களைப் போன்று (பறந்துவந்தன). இதனால், (முஸ்லிம்கள்) சிதறி ஓடினர். பிறகு மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அபூஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டு (நடந்து) வந்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது கழுதையிலிருந்து) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நான் இறைத்தூதர்; (இதில்) பொய் இல்லை; நான் அப்துல் முத்தலிபின் (குடும்பத்துப்) பிள்ளை ஆவேன்’ என்றும், ‘இறைவா! உன் உதவியை இறக்குவாயாக!’ என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்றுகொண்டிருந்தனர்”

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)

Share this Hadith: