அத்தியாயம்: 32, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3329

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَاوَرَ حِينَ بَلَغَهُ إِقْبَالُ أَبِي سُفْيَانَ قَالَ فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ تَكَلَّمَ عُمَرُ فَأَعْرَضَ عَنْهُ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ إِيَّانَا تُرِيدُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لأَخَضْنَاهَا وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا – قَالَ – فَنَدَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا وَوَرَدَتْ عَلَيْهِمْ رَوَايَا قُرَيْشٍ وَفِيهِمْ غُلاَمٌ أَسْوَدُ لِبَنِي الْحَجَّاجِ فَأَخَذُوهُ فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُونَهُ عَنْ أَبِي سُفْيَانَ وَأَصْحَابِهِ ‏.‏ فَيَقُولُ مَا لِي عِلْمٌ بِأَبِي سُفْيَانَ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَشَيْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ ‏.‏ فَإِذَا قَالَ ذَلِكَ ضَرَبُوهُ فَقَالَ نَعَمْ أَنَا أُخْبِرُكُمْ هَذَا أَبُو سُفْيَانَ ‏.‏ فَإِذَا تَرَكُوهُ فَسَأَلُوهُ فَقَالَ مَا لِي بِأَبِي سُفْيَانَ عِلْمٌ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ فِي النَّاسِ ‏.‏ فَإِذَا قَالَ هَذَا أَيْضًا ضَرَبُوهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي فَلَمَّا رَأَى ذَلِكَ انْصَرَفَ قَالَ ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَضْرِبُوهُ إِذَا صَدَقَكُمْ وَتَتْرُكُوهُ إِذَا كَذَبَكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَذَا مَصْرَعُ فُلاَنٍ ‏”‏ ‏.‏ قَالَ وَيَضَعُ يَدَهُ عَلَى الأَرْضِ هَا هُنَا وَهَا هُنَا قَالَ فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அபூஸுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.

அபூபக்ரு (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.

அப்போது (அன்ஸாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் ஸஅத் பின் உபாதா (ரலி) எழுந்து, “எங்(கள் அன்ஸாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) ‘பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களைப் புறப்படச் சொன்னார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று ‘பத்ரு’ எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.

நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூஸுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூஸுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூஸுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்” என்று (பொய்) சொன்னான்.

அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால், “அபூஸுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கு) நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கின்றீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இது இன்னவர் மாண்டு விழும் இடம்” என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் … இவ்விடத்தில்” என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: