அத்தியாயம்: 33, பாடம்: 53, ஹதீஸ் எண்: 3547

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، حَدَّثَنَا عَمِّي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُمَاسَةَ الْمَهْرِيُّ قَالَ :‏

كُنْتُ عِنْدَ مَسْلَمَةَ بْنِ مُخَلَّدٍ وَعِنْدَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ عَلَى شِرَارِ الْخَلْقِ هُمْ شَرٌّ مِنْ أَهْلِ الْجَاهِلِيَّةِ لاَ يَدْعُونَ اللَّهَ بِشَىْءٍ إِلاَّ رَدَّهُ عَلَيْهِمْ ‏.‏ فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ أَقْبَلَ عُقْبَةُ بْنُ عَامِرٍ فَقَالَ لَهُ مَسْلَمَةُ يَا عُقْبَةُ اسْمَعْ مَا يَقُولُ عَبْدُ اللَّهِ ‏.‏ فَقَالَ عُقْبَةُ هُوَ أَعْلَمُ وَأَمَّا أَنَا فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ تَزَالُ عِصَابَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى أَمْرِ اللَّهِ قَاهِرِينَ لِعَدُوِّهِمْ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى تَأْتِيَهُمُ السَّاعَةُ وَهُمْ عَلَى ذَلِكَ ‏”‏ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ أَجَلْ ‏.‏ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا كَرِيحِ الْمِسْكِ مَسُّهَا مَسُّ الْحَرِيرِ فَلاَ تَتْرُكُ نَفْسًا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنَ الإِيمَانِ إِلاَّ قَبَضَتْهُ ثُمَّ يَبْقَى شِرَارُ النَّاسِ عَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ

நான் மஸ்லமா பின் முகல்லத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அங்கு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு அருகில் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “படைப்பினங்களிலேயே மிகவும் தீயவர்கள் மீதுதான் யுக முடிவு நாள் நிகழும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர்களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் அதை அல்லாஹ் நிராகரித்துவிடுவான்” என்று சொன்னார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உக்பா பின் ஆமிர் (ரலி) அங்கு வந்தார்கள். அப்போது மஸ்லமா (ரலி), “உக்பா அவர்களே! அப்துல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்கள். அதற்கு உக்பா (ரலி), “அவர் நன்கறிந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப போராடியவண்ணம் தம் எதிரிகளை அடக்கிவைத்தபடி இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. அவர்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும் நிலையிலேயே யுக முடிவு நாள் ஏற்படும்’ என்று கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “ஆம் (நீங்கள் சொன்னதும் சரியே!) பிறகு கஸ்தூரி போன்ற மணமுடைய ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். அது பட்டுப் போல் மேனியை வருடும். பிறகு, உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ள எந்த உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது. பிறகு மக்களிலேயே மிகவும் தீயவர்களே எஞ்சியிருப்பர். அவர்கள்மீதே யுக முடிவு நாள் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஷுமாஸா அல்மஹ்ரீ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment