அத்தியாயம்: 34, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3574

حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ:‏

بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ ثَلاَثُمِائَةِ رَاكِبٍ وَأَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ نَرْصُدُ عِيرًا لِقُرَيْشٍ فَأَقَمْنَا بِالسَّاحِلِ نِصْفَ شَهْرٍ فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الْخَبَطَ فَسُمِّيَ جَيْشَ الْخَبَطِ فَأَلْقَى لَنَا الْبَحْرُ دَابَّةً يُقَالُ لَهَا الْعَنْبَرُ فَأَكَلْنَا مِنْهَا نِصْفَ شَهْرٍ وَادَّهَنَّا مِنْ وَدَكِهَا حَتَّى ثَابَتْ أَجْسَامُنَا – قَالَ – فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ فَنَصَبَهُ ثُمَّ نَظَرَ إِلَى أَطْوَلِ رَجُلٍ فِي الْجَيْشِ وَأَطْوَلِ جَمَلٍ فَحَمَلَهُ عَلَيْهِ فَمَرَّ تَحْتَهُ قَالَ وَجَلَسَ فِي حَجَاجِ عَيْنِهِ نَفَرٌ قَالَ وَأَخْرَجْنَا مِنْ وَقْبِ عَيْنِهِ كَذَا وَكَذَا قُلَّةَ وَدَكٍ – قَالَ – وَكَانَ مَعَنَا جِرَابٌ مِنْ تَمْرٍ فَكَانَ أَبُو عُبَيْدَةَ يُعْطِي كُلَّ رَجُلٍ مِنَّا قَبْضَةً قَبْضَةً ثُمَّ أَعْطَانَا تَمْرَةً تَمْرَةً فَلَمَّا فَنِيَ وَجَدْنَا فَقْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப் பிரிவில் வாகனங்களில் அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) எங்கள் (படைக்குத்) தளபதியாக இருந்தார்கள்.

நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையில் அரை மாதம் தங்கினோம். (இந்நாட்களில் உணவுப் பற்றாக் குறையால்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எனவே, நாங்கள் கருவேல மரத்தின் இலைகளைப் புசித்தோம். ஆகவேதான், அந்தப் படைப் பிரிவு ‘கருவேல இலை படைப் பிரிவு’ எனப் பெயர் பெற்றது.

இந்த (இக்கட்டான சூழ்)நிலையில் கடல், எங்களுக்கு ‘அல்அம்பர்’ (கொழுப்புத் தலைத் திமிங்கலம்) எனப்படும் உயிரினத்தை ஒதுக்கியது. நாங்கள் அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அ(ந்த மீனைப் புசித்த)தனால் எங்கள் உடல்களுக்கு வலிமை திரும்பக் கிடைத்தது.

அபூஉபைதா (ரலி) அந்த மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுப் பிறகு, படையிலிருந்த உயரமான மனிதரையும், உயரமான ஒட்டகம் ஒன்றையும் கண்டு(பிடித்து), அவரை அந்த ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப, அவர் அந்த எலும்பிற்குக் கீழே (தலை முட்டாமல்) கடந்து சென்றார்.

அந்த மீனுடைய கண்ணின் கூட்டுக்குள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அதன் விழிக் கூட்டிலிருந்து நாங்கள் இப்படி, இப்படி பெரிய பாத்திரத்தில் கொழுப்பை எடுத்தோம்.

(அந்தப் பயணத்தின் துவக்கத்தில்) எங்களுடன் ஒரு பை நிறைய பேரீச்சம் பழங்கள் இருந்தன. அபூஉபைதா (ரலி), எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப் பிடி பேரீச்சம் பழம் கொடுத்துவந்தார்கள். பிறகு (நாட்கள் செல்லச் செல்ல) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தந்தார்கள். அதுவும் தீர்ந்து விட்டபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment