அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3828

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، الْقَيْسِيُّ كُلُّهُمْ عَنِ الْمُعْتَمِرِ، – وَاللَّفْظُ لاِبْنِ مُعَاذٍ – حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ قَالَ أَبِي حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ :‏

أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا نَاسًا فُقَرَاءَ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَرَّةً ‏ “‏ مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَلاَثَةٍ وَمَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ أَرْبَعَةٍ فَلْيَذْهَبْ بِخَامِسٍ بِسَادِسٍ ‏”‏ ‏.‏ أَوْ كَمَا قَالَ ‏.‏ وَإِنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ وَانْطَلَقَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِعَشَرَةٍ وَأَبُو بَكْرٍ بِثَلاَثَةٍ – قَالَ – فَهُوَ وَأَنَا وَأَبِي وَأُمِّي – وَلاَ أَدْرِي هَلْ قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَ بَيْتِنَا وَبَيْتِ أَبِي بَكْرٍ – قَالَ وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ ثُمَّ لَبِثَ حَتَّى صُلِّيَتِ الْعِشَاءُ ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى نَعَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ قَالَتْ لَهُ امْرَأَتُهُ مَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ – أَوْ قَالَتْ – ضَيْفِكَ قَالَ أَوَمَا عَشَّيْتِهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ قَدْ عَرَضُوا عَلَيْهِمْ فَغَلَبُوهُمْ – قَالَ – فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ وَقَالَ يَا غُنْثَرُ ‏.‏ فَجَدَّعَ وَسَبَّ وَقَالَ كُلُوا لاَ هَنِيئًا ‏.‏ وَقَالَ وَاللَّهِ لاَ أَطْعَمُهُ أَبَدًا – قَالَ – فَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا – قَالَ – حَتَّى شَبِعْنَا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ ‏.‏ قَالَ لاِمْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لاَ وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلاَثِ مِرَارٍ – قَالَ – فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ – يَعْنِي يَمِينَهُ – ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً ثُمَّ حَمَلَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ – قَالَ – وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ فَمَضَى الأَجَلُ فَعَرَّفْنَا اثْنَا عَشَرَ رَجُلاً مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ إِلاَّ أَنَّهُ بَعَثَ مَعَهُمْ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ ‏‏ أَوْ كَمَا قَالَ ‏.‏

திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்), “யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ அவர், மூன்றாம(வராகத் தோழர்களில் ஒரு)வரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது பேரை அழைத்துச் செல்லட்டும்” என்று அல்லது அதைப் போலக் கூறினார்கள்.

(என் தந்தை) அபூபக்ரு (ரலி) மூன்று பேரை அழைத்துவந்தார்கள். நபி (ஸல்) பத்துப் பேருடன் (தம் வீட்டுக்குச்) சென்றார்கள். அபூபக்ரு (ரலி) மூன்று பேருடன் வந்தபோது, வீட்டில் நானும் என் தந்தையும் என் தாயார் (உம்முரூமான்) அவர்களும்தாம் இருந்தோம்(*).

அபூபக்ரு (ரலி) (விருந்தினருக்கு உணவளிக்குமாறு என்னிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு உண்டார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷாத் தொழுகை தொழும்வரை (அவர்களுடன்) தங்கினார்கள். நபி (ஸல்) உறங்கச் செல்லும்வரை அவர்களுடன் இருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய நேரம் கழிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள்.

அப்போது அவர்களுடைய துணைவியான என் தாயார், “உங்கள் விருந்தாளிகளை / உங்கள் விருந்தாளியை உபசரிக்க நீங்கள் வராமல் தாமாதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அபூபக்ரு (ரலி), “அவர்களுக்கு நீ இரவு உணவு அளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்குத் துணைவியார், “நீங்கள் வராமல் உண்ண முடியாதென அவர்கள் மறுத்து விட்டனர். நாங்கள் (உண்ணும்படி) கேட்டுக் கொண்டபோதும் (அவர்கள் உடன்படாமல்) எங்களை மிகைத்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.

நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், “தடியா!“ என்று (கோபத்துடன்) அழைத்து, “உன் மூக்கறுந்து போக!” என்று (என்னை) ஏசினார்கள்.

(விருந்தாளிகளை நோக்கி) “சூழல் மகிழும்படி இல்லை; நீங்கள் உண்ணுங்கள்!” என்று கூறினார்கள். (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே விருந்தாளிகளுக்குச் சிரமம் கொடுத்து விட்டீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகியது. இறுதியில் நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அது முன்பிருந்த அளவிலோ, அல்லது அதைவிடக் கூடுதலாகவோ மாறியிருப்பதைக் கண்ட அபூபக்ரு (ரலி) தம் துணைவியாரிடம், “பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?” என்று (வியப்புடன்) கேட்க, என் தாயார், “என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது!” என்று சொன்னார்.

பிறகு அபூபக்ரு (ரலி) (தமது வீண் சத்தியத்தை முறித்துவிட்டு) அதிலிருந்து உண்டார்கள். மேலும், “அது (நான் சத்தியம் செய்தது) ஷைத்தானால் ஏற்பட்டடதே” என்று கூறிவிட்டு, பிறகு அதிலிருந்து மேலும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள்.

பிறகு அந்த உணவு நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு கூட்டத்தாருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவுக்கும் வந்தது. (இனி அவர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்காக) நபி (ஸல்) எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி ஒவ்வொருவருடனும் சில வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொரு தளபதியுடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், அப்படையினருக்கு அந்த உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

(*) “என் மனைவியும் எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ரு (ரலி) அவர்களின் வீட்டிற்கும் சேர்ந்து பணிபுரிந்துவந்த பணிப் பெண்ணும் வீட்டிலிருந்தனர் …” என அப்துர்ரஹ்மான் (ரலி) குறிப்பிட்டார்களா என எனக்கு நினைவில்லை என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment