அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4418

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، عَنْ إِسْرَائِيلَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ قَالَ :‏ ‏

كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سِتَّةَ نَفَرٍ فَقَالَ الْمُشْرِكُونَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اطْرُدْ هَؤُلاَءِ لاَ يَجْتَرِئُونَ عَلَيْنَا ‏.‏ قَالَ وَكُنْتُ أَنَا وَابْنُ مَسْعُودٍ وَرَجُلٌ مِنْ هُذَيْلٍ وَبِلاَلٌ وَرَجُلاَنِ لَسْتُ أُسَمِّيهِمَا فَوَقَعَ فِي نَفْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ اللَّهُ أَنْ يَقَعَ فَحَدَّثَ نَفْسَهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَلاَ تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ‏}‏

நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள்மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது” என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னும் இருவரும் அந்த அறுவருள் அடங்குவோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனத்தில் அல்லாஹ் நாடிய ஒரு சலனம் ஏற்பட்டது.

உடனே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டிவிடாதீர்…” (6:52) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4417

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ :‏ ‏

فِيَّ نَزَلَتْ ‏{‏ وَلاَ تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ‏}‏ قَالَ نَزَلَتْ فِي سِتَّةٍ أَنَا وَابْنُ مَسْعُودٍ مِنْهُمْ وَكَانَ الْمُشْرِكُونَ قَالُوا لَهُ تُدْنِي هَؤُلاَءِ ‏

என் விஷயத்திலேயே, “(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும், மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டிவிடாதீர்” எனும் (6:52) இறைவசனம் அருளப்பெற்றது.

ஆறு பேர் தொடர்பாகவே மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது. அவர்களில் நானும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அடங்குவோம். இணைவைப்பாளர்(களில் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டவர்)கள் நபி (ஸல்) அவர்களிடம், “இ(ந்தச் சாமானிய எளிய)வர்களையா நீர் நெருக்கத்தில் வைத்திருக்கின்றீர்?” என்று கேட்டனர்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4416

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي مُصْعَبُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ نَزَلَتْ فِيهِ آيَاتٌ مِنَ الْقُرْآنِ – قَالَ :‏ ‏

حَلَفَتْ أُمُّ سَعْدٍ أَنْ لاَ تُكَلِّمَهُ أَبَدًا حَتَّى يَكْفُرَ بِدِينِهِ وَلاَ تَأْكُلَ وَلاَ تَشْرَبَ ‏.‏ قَالَتْ زَعَمْتَ أَنَّ اللَّهَ وَصَّاكَ بِوَالِدَيْكَ وَأَنَا أُمُّكَ وَأَنَا آمُرُكَ بِهَذَا ‏.‏ قَالَ مَكَثَتْ ثَلاَثًا حَتَّى غُشِيَ عَلَيْهَا مِنَ الْجَهْدِ فَقَامَ ابْنٌ لَهَا يُقَالُ لَهُ عُمَارَةُ فَسَقَاهَا فَجَعَلَتْ تَدْعُو عَلَى سَعْدٍ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الْقُرْآنِ هَذِهِ الآيَةَ ‏{‏ وَوَصَّيْنَا الإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا‏}‏ ‏{‏ وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي‏}‏ وَفِيهَا ‏{‏ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا‏}‏ قَالَ وَأَصَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَنِيمَةً عَظِيمَةً فَإِذَا فِيهَا سَيْفٌ فَأَخَذْتُهُ فَأَتَيْتُ بِهِ الرَّسُولَ صلى الله عليه وسلم فَقُلْتُ نَفِّلْنِي هَذَا السَّيْفَ فَأَنَا مَنْ قَدْ عَلِمْتَ حَالَهُ ‏.‏ فَقَالَ ‏”‏ رُدُّهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ ‏”‏ ‏.‏ فَانْطَلَقْتُ حَتَّى إِذَا أَرَدْتُ أَنْ أُلْقِيَهُ فِي الْقَبَضِ لاَمَتْنِي نَفْسِي فَرَجَعْتُ إِلَيْهِ فَقُلْتُ أَعْطِنِيهِ ‏.‏ قَالَ فَشَدَّ لِي صَوْتَهُ ‏”‏ رُدُّهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ ‏”‏ ‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ‏}‏ قَالَ وَمَرِضْتُ فَأَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَانِي فَقُلْتُ دَعْنِي أَقْسِمْ مَالِي حَيْثُ شِئْتُ ‏.‏ قَالَ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالنِّصْفَ ‏.‏ قَالَ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالثُّلُثَ ‏.‏ قَالَ فَسَكَتَ فَكَانَ بَعْدُ الثُّلُثُ جَائِزًا ‏.‏ قَالَ وَأَتَيْتُ عَلَى نَفَرٍ مِنَ الأَنْصَارِ وَالْمُهَاجِرِينَ فَقَالُوا تَعَالَ نُطْعِمْكَ وَنَسْقِيكَ خَمْرًا ‏.‏ وَذَلِكَ قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ – قَالَ – فَأَتَيْتُهُمْ فِي حَشٍّ – وَالْحَشُّ الْبُسْتَانُ – فَإِذَا رَأْسُ جَزُورٍ مَشْوِيٌّ عِنْدَهُمْ وَزِقٌّ مِنْ خَمْرٍ – قَالَ – فَأَكَلْتُ وَشَرِبْتُ مَعَهُمْ – قَالَ – فَذُكِرَتِ الأَنْصَارُ وَالْمُهَاجِرُونَ عِنْدَهُمْ فَقُلْتُ الْمُهَاجِرُونَ خَيْرٌ مِنَ الأَنْصَارِ – قَالَ – فَأَخَذَ رَجُلٌ أَحَدَ لَحْيَىِ الرَّأْسِ فَضَرَبَنِي بِهِ فَجَرَحَ بِأَنْفِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيَّ – يَعْنِي نَفْسَهُ – شَأْنَ الْخَمْرِ ‏{‏ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنْصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ‏}‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ أُنْزِلَتْ فِيَّ أَرْبَعُ آيَاتٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ زُهَيْرٍ عَنْ سِمَاكٍ وَزَادَ فِي حَدِيثِ شُعْبَةَ قَالَ فَكَانُوا إِذَا أَرَادُوا أَنْ يُطْعِمُوهَا شَجَرُوا فَاهَا بِعَصًا ثُمَّ أَوْجَرُوهَا ‏.‏ وَفِي حَدِيثِهِ أَيْضًا فَضَرَبَ بِهِ أَنْفَ سَعْدٍ فَفَزَرَهُ وَكَانَ أَنْفُ سَعْدٍ مَفْزُورًا

நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று (என் தாய்) உம்மு ஸஅத் சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர், “உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்படவேண்டும்)” என்று கூறினார்.

இவ்வாறு என் தாயார் மூன்று நாள்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமடைந்துவிட்டார். அப்போது அவருடைய மகன் உமாரா எழுந்து வந்து அவருக்குக் குடிப்பதற்கு நீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், “மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தொடங்கி, “உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்து கொள்” எனும் (31:14,15) வசனங்களை அருளினான்.

அடுத்து (ஒரு போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் போர்ச் செல்வங்கள் கிடைத்தன. அவற்றில் வாள் ஒன்றும் இருந்தது. அதை நான் எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இந்த வாளை எனக்குப் போர்ச் செல்வத்தின் சிறப்புப் பரிசாகத் தாருங்கள். எனது நிலை குறித்து நீங்கள் அறிவீர்கள்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “அதை எடுத்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடு!” என்று சொன்னார்கள். நான் சென்று போர்ச் செல்வக் குவியலில் அதை வைக்க முற்பட்டபோது, என் மனம் என்னை இடித்துப் பேசியது. அதை (அங்கு வைக்காமல்) மறுபடியும் நானே எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடுமையான குரலில் என்னிடம், “எடுத்த இடத்திலேயே மறுபடியும் அதை வைத்துவிடு!” என்று சொன்னார்கள்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (நபியே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் …” என்று தொடங்கும் (8:1) வசனத்தை அருளினான்.

அடுத்து (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினேன். அவர்கள் என்னிடம் வந்தபோது நான், “என் செல்வங்கள் முழுவதையும் நான் நாடிய விதத்தில் (அறவழியில்) பங்கிட்டுவிட என்னை அனுமதியுங்கள்” என்று வேண்டினேன்.

நபி (ஸல்) (வேண்டாமென்று) மறுத்துவிட்டார்கள். “அவ்வாறாயின், (அதில்) பாதியையாவது (தர்மம் செய்கிறேன்)?” என்று நான் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) மறுத்து விட்டார்கள். “அவ்வாறாயின், மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்துவிடுகிறேன்)?” என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்)  அமைதியாக இருந்(து அரை மனத்துடன் சம்மதித்)தார்கள். அதன் பின்னரே மூன்றில் ஒரு பகுதி(யை மரண சாசனம் செய்வது) அனுமதிக்கப்பட்டது.

அடுத்து (ஒரு முறை) நான் அன்ஸாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருவோம்” என்று கூறினர். – இது மது தடை செய்யப்படுவதற்குமுன் நடைபெற்ற நிகழ்வாகும் – அவ்வாறே நான் ஒரு தோட்டத்திலிருந்த அவர்களிடம் சென்றேன்.

அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.

அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான், “அன்ஸாரிகளைவிட முஹாஜிர்களே சிறந்தவர்கள்” என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்து, எனது மூக்கில் காயமேற்படுத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக, “இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டுவைக்கப்பட்ட(சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும் …” என்று தொடங்கும் (5:90) வசனத்தை அருளினான்.

அவை, என் பொருட்டு அருளப்பட்ட வசனங்களாகும்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பு “என் தொடர்பாக நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன…” என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாக ஆரம்பமாகின்றது. மேலும், “மக்கள் என் தாயாருக்கு உணவளிக்க விரும்பினால், ஒரு குச்சியை அவரது வாய்க்குள் நுழைத்து (அவரை வாய் மூடாமல் தடுத்து) அதில் உணவைப் போடுவார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

மேலும், “(தோட்ட விருந்தின் போது என்மீது கோபமுற்றவர் ஒட்டகத்) தாடை எலும்பை எடுத்து எனது மூக்கில் அடித்து மூக்கைக் கிழித்துவிட்டார்” என்று ஸஅத் (ரலி) கூறியதாகவும், “ஸஅத் (ரலி) அவர்களின் மூக்கு பிளவுற்றதாகவே இருந்தது” என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4415

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ – عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ لَهُ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ ‏.‏ قَالَ كَانَ رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ قَدْ أَحْرَقَ الْمُسْلِمِينَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي ‏”‏ ‏.‏ قَالَ فَنَزَعْتُ لَهُ بِسَهْمٍ لَيْسَ فِيهِ نَصْلٌ فَأَصَبْتُ جَنْبَهُ فَسَقَطَ فَانْكَشَفَتْ عَوْرَتُهُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى نَظَرْتُ إِلَى نَوَاجِذِهِ

நபி (ஸல்) உஹுதுப் போரின் போது எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து(அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். இணைவைப்பாளர்களில் ஒருவன் முஸ்லிம்களை, தீப்பிழம்பாகச் சுழன்று தாக்கிக்கொண்டிருந்தான். அப்போது நபி (ஸல்) என்னிடம், “அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறி(உற்சாகமூட்டி)னார்கள்.

நான் முனை பொருத்தப்படாத அம்பொன்றை எடுத்து அவனது விலாப்புறத்தில் தாக்கினேன். அவன் கீழே விழுந்தான். அவனது (ஆடை விலகி) மறைவிடங்கள் வெளியே தெரிந்தன. (எதிரி வீழ்த்தப்பட்டதைக் கண்ட) நபி (ஸல்), தம் கடை வாய்ப்பற்கள் தெரிய சிரித்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4414

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ يَحْيَى، – وَهُوَ ابْنُ سَعِيدٍ – عَنْ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ :‏ ‏

لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ ‏


حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، كِلاَهُمَا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ

உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து (“அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி(போரிட உற்சாக மூட்டி)னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4413

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ سَعْدٍ – عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ :‏ ‏

مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدِ بْنِ مَالِكٍ فَإِنَّهُ جَعَلَ يَقُولُ لَهُ يَوْمَ أُحُدٍ ‏ “‏ ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي ‏”‏ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ح حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ الْحَنْظَلِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، كُلُّهُمْ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து ஸஅத் பின் மாலிக் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்காகவும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதில்லை. ஏனெனில், உஹுதுப் போர் நாளில் “ஸஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று ஸஅத் (ரலி) அவர்களிடம் கூறலானார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4412

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

سَهِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقْدَمَهُ الْمَدِينَةَ لَيْلَةً فَقَالَ ‏”‏ لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ سَمِعْنَا خَشْخَشَةَ سِلاَحٍ فَقَالَ ‏”‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا جَاءَ بِكَ ‏”‏ ‏.‏ قَالَ وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجِئْتُ أَحْرُسُهُ ‏.‏ فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَامَ ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ فَقُلْنَا مَنْ هَذَا


حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ أَرِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), “இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!” என்று கூறினார்கள்.

அப்போது ஆயுதத்தின் ஓசையை நாங்கள் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார்?” என்று கேட்டார்கள். வந்தவர், “(நான்) ஸஅத் பின் அபீவக்காஸ்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எதற்காக வந்தீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடக்கூடும் என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “யார்? என்று நாங்கள் கேட்டோம்” எனக் காணப்படுகிறது.

அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உறங்காமல்) கண் விழித்திருந்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4411

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

أَرِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏.‏ قَالَتْ وَسَمِعْنَا صَوْتَ السِّلاَحِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَحْرُسُكَ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர், “இரவில் என்னைக் காவல் காப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் வேண்டுமே?” என்று கேட்டார்கள்.

அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஒலியைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார்?” என்று கேட்டார்கள். வந்தவர், “அல்லாஹ்வின் தூதரே! (நான்) ஸஅத் பின் அபீவக்காஸ், உங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நான் அவர்களது குறட்டைச் சப்தத்தைக் கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)