அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1852

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏أَبَاكَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ نَعَمْ

“நபி (ஸல்) நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்’ என ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) வாயிலாக செவியுற்றீரா?” என்று நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1472

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَخْرُجُ يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ فَيَبْدَأُ بِالصَّلَاةِ فَإِذَا صَلَّى صَلَاتَهُ وَسَلَّمَ قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ وَهُمْ جُلُوسٌ فِي مُصَلَّاهُمْ فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ ذَكَرَهُ لِلنَّاسِ أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ أَمَرَهُمْ بِهَا وَكَانَ يَقُولُ ‏ ‏تَصَدَّقُوا تَصَدَّقُوا تَصَدَّقُوا وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ ثُمَّ يَنْصَرِفُ ‏

‏فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مَرْوَانُ بْنُ الْحَكَمِ ‏ ‏فَخَرَجْتُ ‏ ‏مُخَاصِرًا ‏ ‏مَرْوَانَ ‏ ‏حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى فَإِذَا ‏ ‏كَثِيرُ بْنُ الصَّلْتِ ‏ ‏قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ فَإِذَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏يُنَازِعُنِي يَدَهُ كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلَاةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ قُلْتُ أَيْنَ ‏ ‏الِابْتِدَاءُ بِالصَّلَاةِ فَقَالَ لَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏قَدْ تُرِكَ مَا تَعْلَمُ قُلْتُ كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள்; அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள்.

(அன்றைய தினம்) அவர்கள், “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.

(முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) அதே நிலை தொடர்ந்து நீடித்தது – மர்வான் பின் அல்ஹகம் (மதீனாவின் ஆளுநராக) வரும்வரை. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் கை கோத்தவர்களாக இணைந்து (பெருநாள் ஒன்றில்) தொழும் திடலுக்கு வந்தபோது, அங்குக் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை (புதிதாகக்) காணப்பட்டது. அதை, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் கட்டியிருந்தார்.

அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த (மாற்றமான) நிலையைக் கண்ட நான், “முதலில் நடைபெறவேண்டிய தொழுகை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு மர்வான், “இல்லை அபூஸயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது” என்று கூறினார். அதற்கு நான், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மறுத்துப் பேசினேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு: “நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மூன்று முறை கூறிவிட்டு, அபூஸயீத் (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1469

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏أَوَّلَ مَا بُويِعَ لَهُ ‏ ‏أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏قَبْلَ الْخُطْبَةِ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1468

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَعَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَا ‏

‏لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلَا يَوْمَ الْأَضْحَى ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ حِينٍ عَنْ ذَلِكَ فَأَخْبَرَنِي قَالَ أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنْ لَا أَذَانَ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ حِينَ يَخْرُجُ الْإِمَامُ وَلَا بَعْدَ مَا يَخْرُجُ وَلَا إِقَامَةَ وَلَا نِدَاءَ وَلَا شَيْءَ لَا نِدَاءَ يَوْمَئِذٍ وَلَا إِقَامَةَ

“நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) தொழுகைக்காக பாங்கு சொல்லப்படவில்லை” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அதாஉ (ரஹ்) அவர்களிடம் அது குறித்து நான் (விபரம்) கேட்டேன். அதற்கு, “நோன்புப் பெருநாள் தொழுகைக்கு இமாம் புறப்பட்டு வரும்போதோ, புறப்பட்டு வந்த பின்போ பாங்கு கிடையாது. அதைப் போன்றே, இகாமத்தோ தொழுகைக்கான அழைப்போ வேறு அறிவிப்புகளோகூட கிடையாது. அன்றைய நாளில் பாங்கோ இகாமத்தோ கிடையாது” என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாக அதாஉ (ரஹ்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : இப்னு அப்பாஸ் (ரலி) & ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1466

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏

‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَزَلَ وَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ ‏ ‏يَتَوَكَّأُ ‏ ‏عَلَى يَدِ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِينَ النِّسَاءُ صَدَقَةً ‏

‏قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لَا وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ بِهَا حِينَئِذٍ تُلْقِي الْمَرْأَةُ ‏ ‏فَتَخَهَا ‏ ‏وَيُلْقِينَ وَيُلْقِينَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏أَحَقًّا عَلَى الْإِمَامِ الْآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ حِينَ يَفْرُغُ فَيُذَكِّرَهُنَّ قَالَ إِي لَعَمْرِي إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ وَمَا لَهُمْ لَا يَفْعَلُونَ ذَلِكَ

நபி (ஸல்) நோன்புப் பெருநாளன்று உரையாற்றுவதற்கு முன் எழுந்து தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) மீது சாய்ந்து நின்றுகொண்டு, பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மப் பொருட்களைப் போட்டனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகிறார்:

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ரு) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை; அப்போதைக்குத் தாமாகவே முன்வந்து தர்மப் பொருட்களை அவர்கள் ஈந்தனர். பெண்கள் தம் மெட்டிகளையும் இன்னும் பிறவற்றையும் போட்டனர்” என்று அதாஉ (ரஹ்) கூறினார்கள்.

மேலும், நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “உரை நிகழ்த்திய பின் பெண்கள் பகுதிக்குச் சென்று உபதேசம் செய்வது இன்றைக்கும் தலைவர்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “நிச்சயம். சத்தியமாக! அது அவர்களுக்குக் கடமைதான். அதை அவர்கள் எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்?” என்று அதாஉ (ரஹ்) கேட்டார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 8

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُا جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلا نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ فَقَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைமுடி கலைந்தவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நெருங்கி வந்தபோதுதான் அவர் இஸ்லாத்(தின் அடிப்படைக் கடமைகள் யாவை என்ப)தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “(ஒரு நாளின்) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது)” என்று அவருக்கு பதிலளித்தார்கள். உடனே அவர் “இவற்றைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமைத் தொழுகைகள்) உள்ளதா?” என்று கேட்க “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து, “ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளதா?” என்று கேட்க, “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) ஏதுமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ‘ஜகாத்’ (செலுத்துவது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான தானம்) உண்டா?” எனக் கேட்க, “நீயாக விரும்பி(வழங்கி)டுவதைத் தவிரக் கூடுதலாக(க் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதை (விடக்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறித் திரும்பிச் சென்றார். “அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)