அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 29

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاسْتُخْلِفَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بَعْدَهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي ‏ ‏عِقَالًا ‏ ‏كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ ‏
‏فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ரு (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஜகாத் செலுத்த) மறுத்து நின்றனர்.

(அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ரு (ரலி) அவர்கள் ஆயத்தமானபோது) உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ரு (ரலி) அவர்களிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர், அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஜகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக!, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜகாத்தாகச்) செலுத்திய ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் செலுத்த மறுத்தால்கூட, அதை மறுத்தவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

இது குறித்து உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரு (ரலி) அவர்களின் இதயத்தை, (ஜகாத்தை மறுத்தவர்களுக்கு எதிராகப்) போர் தொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ரு (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

முஸ்லிம்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் போக மீந்துள்ள சொத்துகளுக்கு 2.5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை ஜகாத் என்னும் வளவரி செலுத்த வேண்டும். இது முஸ்லிமான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொதுவான கடைமையாகும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஜகாத்தை அரசிடம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யா எனும் கப்பம் கட்டுதல் கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஓராண்டுக்கான ஜிஸ்யா ஒரு தீனாராகவும் உமையாக்களின் ஆட்சியின்போது நான்கு தீனார்களாகவும் இருந்தது. முஸ்லிமல்லாத சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் ஆண்களில் மூத்த குடிமக்கள் மீதும் ஜிஸ்யா கடமையில்லை. போர் செய்ய வலுவுள்ள முஸ்லிமல்லாத ஆண்கள் மீது மட்டுமே ஜிஸ்யா கடமையாகும்.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்ற அல்லாஹ்வின் தூதரது கூற்றில் உள்ள “இந்த மக்களுடன்” என்ற குறிப்பாகு சுட்டுப் பெயர், இஸ்லாமிய அரசின்கீழ் மதீனாவில் வாழ்ந்த, ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிப்பாகச் சுட்டுவதாகும்.

மேற்காணும் 29ஆவது ஹதீஸில் ஜகாத்தை மறுத்த முஸ்லிம்கள் ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிமல்லாதோருடன் ஒப்பு நோக்கப் பட்டிருப்பதும் “இஸ்லாமிய மார்க்கத்தில் (இணைவதில்) வற்புறுத்தல் ஏதுமில்லை … (002:256) என்ற அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் கூற்றும் இங்குப் பொருந்திப் பார்க்கத் தக்கன.