அத்தியாயம்: 44, பாடம்: 27, ஹதீஸ் எண்: 4503

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ كِنَانَةَ بْنِ نُعَيْمٍ عَنْ أَبِي بَرْزَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي مَغْزًى لَهُ فَأَفَاءَ اللَّهُ عَلَيْهِ فَقَالَ لأَصْحَابِهِ ‏”‏ هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ ‏”‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏”‏ لَكِنِّي أَفْقِدُ جُلَيْبِيبًا فَاطْلُبُوهُ ‏”‏ ‏.‏ فَطُلِبَ فِي الْقَتْلَى فَوَجَدُوهُ إِلَى جَنْبِ سَبْعَةٍ قَدْ قَتَلَهُمْ ثُمَّ قَتَلُوهُ فَأَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَقَفَ عَلَيْهِ فَقَالَ ‏”‏ قَتَلَ سَبْعَةً ثُمَّ قَتَلُوهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ ‏”‏ ‏.‏ قَالَ فَوَضَعَهُ عَلَى سَاعِدَيْهِ لَيْسَ لَهُ إِلاَّ سَاعِدَا النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَحُفِرَ لَهُ وَوُضِعَ فِي قَبْرِهِ 


وَلَمْ يَذْكُرْ غَسْلاً ‏

நபி (ஸல்) ஒரு போர்ப் பயணத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் போர்ச் செல்வங்களை வழங்கினான். அப்போது நபி (ஸல்) தம் தோழர்களிடம், “யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “ஆம்; இன்னவரையும், இன்னவரையும், இன்னவரையும் (காணாமல் தேடுகின்றோம்)” என்று கூறினார்கள்.

பிறகு (மீண்டும்), “யாரையேனும் காணாமல் தேடுகின்றீர்களா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். தோழர்கள், “ஆம்; இன்னவரையும், இன்னவரையும், இன்னவரையும் (காணாமல் தேடுகின்றோம்)” என்று கூறினர்.

பிறகு (மூன்றாவது முறையாக) “யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இல்லை (எல்லாரும் கிடைத்துவிட்டனர்)” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்), “நான் ஜுலைபீபைக் காணாமல் தேடுகின்றேன். நீங்களும் அவரைத் தேடுங்கள்” என்று கூறினார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர் தேடப்பட்டார். (எதிரிகளில்) ஏழு பேரின் உடல்களுக்கு அருகில் அவரது உடலைக் கண்டனர். ஜுலைபீப் அந்த எழுவரையும் கொன்றிருந்தார்; அவர்களும் ஜுலைபீபைக் கொன்றுவிட்டிருந்தனர்.

நபி (ஸல்) வந்து ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று, “இவர் (எதிரிகளில்) எழுவரைக் கொன்றார். அவர்களும் இவரைக் கொன்றுவிட்டனர். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார்; நான் இவரைச் சேர்ந்தவன் ஆவேன். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார்; நான் இவரைச் சேர்ந்தவர் ஆவேன்” என்று கூறினார்கள்.

பிறகு அவரைத் தமது (முன்)கையில் வைத்துத் தூக்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கைகளைத் தவிர (கட்டிலாக) வேறெதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிறகு குழி தோண்டப்பட்டு அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)


குறிப்பு :

இந்த அறிவிப்பில், அவர் குளிப்பாட்டப்பட்டாரா, இல்லையா என்பது பற்றிய குறிப்பு இல்லை.