அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1888

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏
‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏قَزَعَةُ ‏ ‏قَالَ ‏
‏أَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ ‏ ‏مَكْثُورٌ عَلَيْهِ ‏ ‏فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّي لَا أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلَاءِ عَنْهُ سَأَلْتُهُ عَنْ الصَّوْمِ فِي السَّفَرِ فَقَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏وَنَحْنُ صِيَامٌ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُمْ قَدْ دَنَوْتُمْ مِنْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَكَانَتْ رُخْصَةً فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ ثُمَّ نَزَلْنَا مَنْزِلًا آخَرَ فَقَالَ إِنَّكُمْ مُصَبِّحُو عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوا وَكَانَتْ عَزْمَةً فَأَفْطَرْنَا ثُمَّ قَالَ لَقَدْ رَأَيْتُنَا نَصُومُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ ذَلِكَ فِي السَّفَرِ

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களைச் சுற்றி அதிகமானோர் குழுமியிருந்தனர். மக்கள் கலைந்துசென்றதும் நான், “அவர்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறிவிட்டு, பயணத்தில் நோன்பு நோற்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) மக்காவுக்குப் பயணம் செய்தோம். அப்போது நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். (வழியில்) ஓரிடத்தில் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் எதிரிகளை நெருங்கிவிட்டீர்கள். இந்நிலையில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுச் சேர்க்கும்” என்று கூறினார்கள். இது ஒரு சலுகையாகவே இருந்தது. எனவே, எங்களில் சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பை விட்டுவிட்டனர். பிறகு மற்றோர் இடத்தில் நாங்கள் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது நபி (ஸல்), “நீங்கள் (நாளைக்) காலையில் எதிரிகளைச் சந்திக்கப்போகின்றீர்கள்கள். இந்நிலையில் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுச் சேர்க்கும். எனவே, நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். இது ஒரு கட்டளையாகவே இருந்தது. ஆகவே, நாங்கள் நோன்பை விட்டுவிட்டோம். அதற்குப் பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக கஸஆ பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1887

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏مُوَرِّقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَصَامَ بَعْضٌ وَأَفْطَرَ بَعْضٌ فَتَحَزَّمَ الْمُفْطِرُونَ وَعَمِلُوا وَضَعُفَ الصُّوَّامُ عَنْ بَعْضِ الْعَمَلِ قَالَ فَقَالَ فِي ذَلِكَ ‏ ‏ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அவர்களுடனிருந்த) சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பு நோற்கவில்லை. நோன்பு நோற்காதவர்கள் மும்முரமாகப் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றிருந்தவர்கள் ஒரு சில வேலைகளை(க் கூட)ச் செய்ய முடியாமல் பலவீனமடைந்தனர். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மைகளைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1886

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوَرِّقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فِي يَوْمٍ حَارٍّ أَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ الْكِسَاءِ وَمِنَّا مَنْ يَتَّقِي الشَّمْسَ بِيَدِهِ قَالَ فَسَقَطَ الصُّوَّامُ وَقَامَ الْمُفْطِرُونَ فَضَرَبُوا الْأَبْنِيَةِ وَسَقَوْا ‏ ‏الرِّكَابَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன(ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)