அத்தியாயம்: 32, பாடம்: 43, ஹதீஸ் எண்: 3363

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ، – وَنَسَبَهُ غَيْرُ ابْنِ وَهْبٍ فَقَالَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ – أَنَّ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ قَالَ :‏

لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ قَاتَلَ أَخِي قِتَالاً شَدِيدًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَارْتَدَّ عَلَيْهِ سَيْفُهُ فَقَتَلَهُ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ وَشَكُّوا فِيهِ رَجُلٌ مَاتَ فِي سِلاَحِهِ ‏.‏ وَشَكُّوا فِي بَعْضِ أَمْرِهِ ‏.‏ قَالَ سَلَمَةُ فَقَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ خَيْبَرَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي أَنْ أَرْجُزَ لَكَ ‏.‏ فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَعْلَمُ مَا تَقُولُ قَالَ فَقُلْتُ

وَاللَّهِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا

فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ صَدَقْتَ ‏”‏

وَأَنْزِلَنَّ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا وَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا

قَالَ فَلَمَّا قَضَيْتُ رَجَزِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ قَالَ هَذَا ‏”‏ ‏.‏ قُلْتُ قَالَهُ أَخِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَرْحَمُهُ اللَّهُ ‏”‏ ‏.‏ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نَاسًا لَيَهَابُونَ الصَّلاَةَ عَلَيْهِ يَقُولُونَ رَجُلٌ مَاتَ بِسِلاَحِهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَاتَ جَاهِدًا مُجَاهِدًا ‏”‏ ‏.‏


قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ سَأَلْتُ ابْنًا لِسَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَحَدَّثَنِي عَنْ أَبِيهِ مِثْلَ ذَلِكَ غَيْرَ أَنَّهُ قَالَ – حِينَ قُلْتُ إِنَّ نَاسًا يَهَابُونَ الصَّلاَةَ عَلَيْهِ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ كَذَبُوا مَاتَ جَاهِدًا مُجَاهِدًا فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ ‏”‏ ‏.‏ وَأَشَارَ بِإِصْبَعَيْهِ ‏.‏

கைபர் போர் தினத்தன்று என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யூதர்களுக்கு எதிராகக்) கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருடைய வாள் முனை (தவறுதலாக) அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (சிலர்) இது தொடர்பாக(பல விதமாக)ப் பேசிக் கொண்டனர். அவர் (மரணம்) தொடர்பாக சந்தேகம் வெளியிட்டனர். “அவர் தமது ஆயுதத்தாலேயே இறந்துவிட்டவர்” என்றும், அவருடைய நடவடிக்கைகளில் இன்னும் சிலவற்றைக் குறித்தும் சந்தேகமாகப் பேசினர்.

கைபரிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிச் சென்றபோது (அவர்களிடம்) நான், “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காகச் சில கவிதையைப் பாட எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி), “நீ சொல்லவிருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்கள். அப்போது நான் பின்வரும் கவிதை வரிகளைப் பாடினேன்:

“அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்கமாட்டோம்,
தொழுதிருக்கவும் மாட்டோம்”

என்று பாடினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீ உண்மையுரைத்தாய்” என்று கூறினார்கள். பிறகு நான்,

“எங்கள் மீது
அமைதியைப் பொழிவாயாக!
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
இணைவைப்பாளர்கள்
எங்கள்மீது வரம்புமீறிவிட்டார்கள்”

என்று பாடினேன்.

நான் பாடி முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை யாத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நான் “என் (தந்தையின்) சகோதரர்(ஆமிர்)தான்” என்றேன். “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! சிலர், என் சகோதரருக்கு (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர். அவர் தமது ஆயுதத்தாலேயே தற்கொலை செய்துகொண்ட ஒருவர் என்று கூறுகின்றனர்” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவர் துன்பங்களைத் தாங்கி, (இறை வழியில்) அறப்போரும் செய்து இறந்தார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்:

பிறகு நான் ஸலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் மகனார் ஒருவரிடம் (இந்த ஹதீஸைப் பற்றிக்) கேட்டேன். அவரும் தம் தந்தையாரிடமிருந்து இதைப் போன்றே எனக்கு அறிவித்தார்.

ஆனால், “மக்களில் சிலர் ஆமிருக்காக (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர்” என்று நான் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் பொய்யுரைத்துவிட்டனர். அவர் துன்பங்களைத் தாங்கி (இறைவழியில்) அறப்போரும் செய்து இறந்தார். அவருக்கு (நற்செயல் செய்த நன்மை, அறப்போர் செய்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு’ என்று கூறியபடி, தம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்” என்று அவர் கூறினார்.

அத்தியாயம்: 32, பாடம்: 43, ஹதீஸ் எண்: 3362

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ، – وَاللَّفْظُ لاِبْنِ عَبَّادٍ – قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ، – وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَتَسَيَّرْنَا لَيْلاً فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لِعَامِرِ بْنِ الأَكْوَعِ أَلاَ تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ وَكَانَ عَامِرٌ رَجُلاً شَاعِرًا فَنَزَلَ يَحْدُو بِالْقَوْمِ يَقُولُ:‏

اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَاغْفِرْ فِدَاءً لَكَ مَا اقْتَفَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّا إِذَا صِيحَ بِنَا أَتَيْنَا وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا‏

فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَنْ هَذَا السَّائِقُ ‏”‏ ‏.‏ قَالُوا عَامِرٌ ‏.‏ قَالَ ‏”‏ يَرْحَمُهُ اللَّهُ ‏”‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ وَجَبَتْ يَا رَسُولَ اللَّهِ لَوْلاَ أَمْتَعْتَنَا بِهِ ‏.‏ قَالَ فَأَتَيْنَا خَيْبَرَ فَحَصَرْنَاهُمْ حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ ثُمَّ قَالَ ‏”‏ إِنَّ اللَّهَ فَتَحَهَا عَلَيْكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَلَمَّا أَمْسَى النَّاسُ مَسَاءَ الْيَوْمِ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذِهِ النِّيرَانُ عَلَى أَىِّ شَىْءٍ تُوقِدُونَ ‏”‏ ‏.‏ فَقَالُوا عَلَى لَحْمٍ ‏.‏ قَالَ ‏”‏ أَىُّ لَحْمٍ ‏”‏ ‏.‏ قَالُوا لَحْمُ حُمُرِ الإِنْسِيَّةِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَهْرِيقُوهَا وَاكْسِرُوهَا ‏”‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ أَوْ يُهَرِيقُوهَا وَيَغْسِلُوهَا فَقَالَ ‏”‏ أَوْ ذَاكَ ‏”‏ ‏.‏ قَالَ فَلَمَّا تَصَافَّ الْقَوْمُ كَانَ سَيْفُ عَامِرٍ فِيهِ قِصَرٌ فَتَنَاوَلَ بِهِ سَاقَ يَهُودِيٍّ لِيَضْرِبَهُ وَيَرْجِعُ ذُبَابُ سَيْفِهِ فَأَصَابَ رُكْبَةَ عَامِرٍ فَمَاتَ مِنْهُ قَالَ فَلَمَّا قَفَلُوا قَالَ سَلَمَةُ وَهُوَ آخِذٌ بِيَدِي قَالَ فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاكِتًا قَالَ ‏”‏ مَا لَكَ ‏”‏ ‏.‏ قُلْتُ لَهُ فِدَاكَ أَبِي وَأُمِّي زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ قَالَ ‏”‏ مَنْ قَالَهُ ‏”‏ ‏.‏ قُلْتُ فُلاَنٌ وَفُلاَنٌ وَأُسَيْدُ بْنُ حُضَيْرٍ الأَنْصَارِيُّ فَقَالَ ‏”‏ كَذَبَ مَنْ قَالَهُ إِنَّ لَهُ لأَجْرَيْنِ ‏”‏ ‏.‏ وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ ‏”‏ إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ قَلَّ عَرَبِيٌّ مَشَى بِهَا مِثْلَهُ ‏”‏ ‏.‏


وَخَالَفَ قُتَيْبَةُ مُحَمَّدًا فِي الْحَدِيثِ فِي حَرْفَيْنِ وَفِي رِوَايَةِ ابْنِ عَبَّادٍ وَأَلْقِ سَكِينَةً عَلَيْنَا ‏.‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடக்கூடாதா?” என்று கேட்டார்.

ஆமிர் (ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காகப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்:

இறைவா!
நீ இல்லையென்றால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்கமாட்டோம்,
தொழுதிருக்கவுமாட்டோம்.

நாங்கள் செய்துவிட்ட
பாவங்களுக்காக
எங்களை மன்னிப்பாயாக!
உனக்கே நாங்கள் அர்ப்பணம்.

(போர்முனையில் எதிரியை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!

எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! (அறவழியில் செல்ல)
நாங்கள் அழைக்கப்பட்டால்
நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம்
மக்கள் (அபயக்) குரல்
எழுப்பினால்
(உதவிக்கு) ஓடி வருவோம்!

என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார் இந்த ஒட்டகவோட்டி?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ“ என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள்.

அங்கிருந்த மக்களில் ஒருவர், “இறைத்தூதரே! (அவருக்கு வீரமரணமும் சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று, கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உங்களுக்குக் கைபரை வெற்றியாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “எதற்காக இந்த நெருப்பை மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் விடையளித்தனர். “எந்த இறைச்சி?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி“ என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவற்றைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களை உடைத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஒருவர், “இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொள்ளலாமா?” என்று கேட்டார். “சரி, அப்படியே ஆகட்டும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

மக்கள் (அன்றைய தினம் போருக்காக) அணிவகுத்து நின்றபோது, ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. குனிந்து ஒரு யூதனின் காலை அவர்கள் வெட்டப்போனபோது, ஆமிர் அவர்களின் வாளின் மேற்பகுதி அவர்களது முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.

மக்கள் (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கித்) திரும்பியபோது ஸலமா (ரலி)  கூறுகிறார்கள் அமைதியாக இருந்த என்னைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது கையைப் பிடித்துக்கொண்டு, “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் பேசுகின்றனர்” எனத் தெரிவித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைச் சொன்னவர் யார்?” என்று கேட்டார் கள். “இன்னவரும் இன்னவரும் உஸைத் பின் ஹுளைர் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களும் இவ்வாறு கூறினர்” என்று நான் பதிலளித்தேன். “இதைச் சொன்னவர் பொய்யுரைத்து விட்டார். நிச்சயமாக ஆமிருக்கு (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்.

தொடர்ந்து, “அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபியர் மிகவும் அரிதே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) வழி அறிவிப்பில், ஆமிர் (ரலி) கவிதையில், “எங்கள் மீது அமைதியைப் பொழிவாயாக” என்பதைக் குறிக்க ‘வ அல்கியன் ஸகீனத்தன் அலைனா’ என்பதற்குப் பகரமாக ‘வ அல்கீ ஸகீனத்தன் அலைனா’ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 43, ஹதீஸ் எண்: 3361

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ :‏ ‏

لَمَّا أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ قَالَ ‏ “‏ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபருக்கு வந்தபோது, “நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது (அவர்களுக்குக்) கெட்டதாக ஆகிவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 43, ஹதீஸ் எண்: 3360

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ :‏ ‏

كُنْتُ رِدْفَ أَبِي طَلْحَةَ يَوْمَ خَيْبَرَ وَقَدَمِي تَمَسُّ قَدَمَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَأَتَيْنَاهُمْ حِينَ بَزَغَتِ الشَّمْسُ وَقَدْ أَخْرَجُوا مَوَاشِيَهُمْ وَخَرَجُوا بِفُئُوسِهِمْ وَمَكَاتِلِهِمْ وَمُرُورِهِمْ فَقَالُوا مُحَمَّدٌ وَالْخَمِيسَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏”‏ ‏.‏ قَالَ فَهَزَمَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏‏

கைபர் போர் நாளில் நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனது பாதம், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பாதத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் கைபர்வாசிகளிடம் சூரியன் உதிக்கும் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தங்களுடைய கால்நடைகள், கோடரிகள், கூடைகள் மற்றும் மண் வெட்டிகள் ஆகியவற்றுடன் (வயல்வெளிகளை நோக்கி) வந்தனர்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததும்) “முஹம்மதும் அவருடைய (ஐந்து அணிகள் கொண்ட) படையினரும் (வருகின்றனர்)” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது (அவர்களுக்குக்) கெட்டதாக ஆகிவிடும்” என்று கூறினார்கள். அவ்வாறே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களைத் தோற்கடித்தான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 43, ஹதீஸ் எண்: 3359

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنِي ابْنَ عُلَيَّةَ – عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَزَا خَيْبَرَ قَالَ فَصَلَّيْنَا عِنْدَهَا صَلاَةَ الْغَدَاةِ بِغَلَسٍ فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَرَكِبَ أَبُو طَلْحَةَ وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ فَأَجْرَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فِي زُقَاقِ خَيْبَرَ وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم وَانْحَسَرَ الإِزَارُ عَنْ فَخِذِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنِّي لأَرَى بَيَاضَ فَخِذِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ قَالَ ‏ “‏اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ‏”‏ ‏‏ قَالَهَا ثَلاَثَ مِرَارٍ قَالَ وَقَدْ خَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ فَقَالُوا مُحَمَّدٌ – قَالَ عَبْدُ الْعَزِيزِ وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا – وَالْخَمِيسَ قَالَ وَأَصَبْنَاهَا عَنْوَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, கைபருக்கு அருகில் இரவின் இருட்டில் ஸுப்ஹுத் தொழுகையை நாங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது) வாகனத்தில் ஏறி(கைபரை நோக்கி)ப் பயணம் செய்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் தமது வாகனத்தில் ஏறிப் பயணம் செய்தார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் செல்லும் சாலையில் தமது வாகனத்தை (விரைவாகச்) செலுத்தினார்கள். எனது முழங்கால், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டுக்கொண்டி ருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கீழாடை அவர்களது தொடையிலிருந்து விலகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையை நான் பார்த்தேன்.

நகருக்குள் நுழைந்தபோது, “அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது (அவர்களுக்குக்) கெட்டதாக ஆகிவிடும்” என்று மூன்று முறை கூறினார்கள்.

அப்போது (யூத) மக்கள் தம் (அன்றாட) வேலைகளுக்காகப் புறப்பட்டு வந்தனர். (எங்களைப் பார்த்ததும்), “முஹம்மது வந்துவிட்டார்!” என்று கூறினர். நாங்கள் கைபரைப் போர் செய்து கைப்பற்றினோம்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்), “முஹம்மதும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையினரும் வந்துவிட்டனர் என யூதர்கள் பேசிக்கொண்டார்கள்” என என் சகாக்களில் சிலர் கூறினர் என்று குறிப்பிடுகின்றார்.