அத்தியாயம்: 44, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4472

حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الْقَيْسِيُّ، كِلاَهُمَا عَنِ الْمُعْتَمِرِ، – قَالَ ابْنُ حَمَّادٍ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، – قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ قَالَ :‏

لاَ تَكُونَنَّ إِنِ اسْتَطَعْتَ أَوَّلَ مَنْ يَدْخُلُ السُّوقَ وَلاَ آخِرَ مَنْ يَخْرُجُ مِنْهَا فَإِنَّهَا مَعْرَكَةُ الشَّيْطَانِ وَبِهَا يَنْصِبُ رَايَتَهُ ‏

قَالَ وَأُنْبِئْتُ أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ أَتَى نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ – قَالَ – فَجَعَلَ يَتَحَدَّثُ ثُمَّ قَامَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم لأُمِّ سَلَمَةَ ‏ “‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ أَوْ كَمَا قَالَ قَالَتْ هَذَا دِحْيَةُ – قَالَ – فَقَالَتْ أُمُّ سَلَمَةَ ايْمُ اللَّهِ مَا حَسِبْتُهُ إِلاَّ إِيَّاهُ حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم يُخْبِرُ خَبَرَنَا أَوْ كَمَا قَالَ قَالَ فَقُلْتُ لأَبِي عُثْمَانَ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏.‏

ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), “உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கின்றான்” என்று கூறினார்கள்.

“மேலும் (பின்வருமாறும்) எனக்குச் செய்தி எட்டியது” என்று (அறிவிப்பாளர்) அபூஉஸ்மான் (ரஹ்) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் மனைவி) உம்முஸலமா (ரலி) இருந்தபோது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) (ஒரு மனிதரின் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எழுந்து (சென்று)விட்டார்கள்.

அப்போது நபி (ஸல்) உம்முஸலமா (ரலி) அவர்களிடம் “இவர் யார் (தெரியுமா)?” என்றோ, அது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்முஸலமா (ரலி), “இவர் (உங்களுடைய தோழர்) திஹ்யா” என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் ஏதும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்கள்).

“அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பேசிக்கொண்ட விஷயம் குறித்து (மக்களிடையே) நபி (ஸல்) நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை அ(ப்போது வந்த)வர் திஹ்யா என்றே நினைத்திருந்தேன்” என்று உம்முஸலமா (ரலி) கூறினார்கள்:

(அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்:

நான் (இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த) அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை நீங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)