அத்தியாயம்: 49, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4903

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنِي أَنَسٌ – يَعْنِي ابْنَ عِيَاضٍ أَبَا ضَمْرَةَ – عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏”‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ تَعَالَى بِهَا لَعَلَّ اللَّهَ يَفْرُجُهَا عَنْكُمْ ‏

فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَامْرَأَتِي وَلِيَ صِبْيَةٌ صِغَارٌ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا أَرَحْتُ عَلَيْهِمْ حَلَبْتُ فَبَدَأْتُ بِوَالِدَىَّ فَسَقَيْتُهُمَا قَبْلَ بَنِيَّ وَأَنَّهُ نَأَى بِي ذَاتَ يَوْمٍ الشَّجَرُ فَلَمْ آتِ حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مِنْهَا فُرْجَةً فَرَأَوْا مِنْهَا السَّمَاءَ ‏

وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ فَتَعِبْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَجِئْتُهَا بِهَا فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ ‏.‏ فَقُمْتُ عَنْهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً ‏.‏ فَفَرَجَ لَهُمْ ‏‏

وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي ‏.‏ فَعَرَضْتُ عَلَيْهِ فَرَقَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي حَقِّي ‏.‏ قُلْتُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا ‏.‏ فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي ‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ خُذْ ذَلِكَ الْبَقَرَ وَرِعَاءَهَا ‏.‏ فَأَخَذَهُ فَذَهَبَ بِهِ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مَا بَقِيَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مَا بَقِيَ ‏.‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، ح وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، وَمُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا أَبِي وَرَقَبَةُ بْنُ مَسْقَلَةَ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنُونَ ابْنَ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ أَبِي ضَمْرَةَ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ وَزَادُوا فِي حَدِيثِهِمْ ‏”‏ وَخَرَجُوا يَمْشُونَ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ صَالِحٍ ‏”‏ يَتَمَاشَوْنَ ‏”‏ ‏.‏ إِلاَّ عُبَيْدَ اللَّهِ فَإِنَّ فِي حَدِيثِهِ ‏”‏ وَخَرَجُوا ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ بَعْدَهَا شَيْئًا ‏‏

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالَ ابْنُ سَهْلٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى آوَاهُمُ الْمَبِيتُ إِلَى غَارٍ ‏”‏ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ رَجُلٌ مِنْهُمُ ‏”‏ اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ لاَ أَغْبُقُ قَبْلَهُمَا أَهْلاً وَلاَ مَالاً ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ فَجَاءَتْنِي فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ فَارْتَعَجَتْ ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ فَخَرَجُوا مِنَ الْغَارِ يَمْشُونَ

(உங்களுக்கு முன் வாழ்ந்த) மூவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக் குகையொன்றில் ஒதுங்கினார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பாறை, குகைவாசலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல் திணறியபோது ) அவர்கள் (மூவரும்) தமக்குள், “நாம் அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் நம்மை விட்டு இதை அகற்றிவிடக்கூடும்” என்று பேசிக்கொண்டனர்.

எனவே, அவர்களில் ஒருவர் (இறைவனிடம்) வேண்டினார்:

“இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் அவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் கொடுப்பது வழக்கம். ஒருநாள் இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது.

அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்குமுன் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக்கொண்டிந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருந்தோம். வைகறையும் வந்துவிட்டது.

(இறைவா!) நான் இச்செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்”

அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டாமவர் வேண்டினார்:

“இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகளொருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதைவிட மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம், அவளை(எனக்குத் தரும்படி)க் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்து கொடுத்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்துவிட்டாள். நான் கடுமையாக உழைத்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன்.

அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், ‘அல்லாஹ்வின் அடிமையே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறவாதே’ என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டு எழுந்துவிட்டேன்.

(இறைவா!) இதை உனது உவப்பைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்துவாயாக!”

அவ்வாறே அவர்களுக்கு (அல்லாஹ் இன்னும்) சற்றே நகர்த்தினான்.

மூன்றாமவர் வேண்டினார்:

“இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை பணியமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்துவிட்டு, என் உரிமையை (கூலியை)க் கொடு என்று கேட்டார். நான் ஒரு ஃபரக் அளவு நெல்லை அவர்முன் வைத்தபோது அதை அவர் (பெற்றுக்கொள்ளாமல்) புறக்கணித்து(ச் சென்று)விட்டார்.

பின்னர் நான் அதை நிலத்தில் விதைத்துத் தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒரு நாள்) அவர் என்னிடம் வந்து, ‘அல்லாஹ்வை அஞ்சு! எனது உரிமையில் எனக்கு அநீதி இழைக்காதே’ என்று கூறினார்.

அதற்கு நான், ‘அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ சென்று, அவற்றை எடுத்துக்கொள். (அவை உனக்கே உரியவை)’ என்று சொன்னேன். அதற்கவர், ‘அல்லாஹ்வை அஞ்சு! என்னைக் கேலி செய்யாதே’ என்று சொன்னார். நான், ‘உன்னை நான் கேலி செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்’ என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்துக்கொண்டு சென்றார்.

(இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் உவப்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றுவாயாக!”

அவ்வாறே மீதியிருந்த அடைப்பையும் அல்லாஹ் அகற்றி (அவர்களை வெளியேற்றி)விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

மேற்கண்ட ஹதீஸ் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக அறிவிக்கப்படும்போது, (‘அவர்கள் மூவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்’ என்பதைக் குறிக்க) ‘கரஜூ யம்ஷூன’ எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ஸாலிஹ் பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘யத்தமாஷவ்ன’ என்று காணப்படுகிறது.

உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் மட்டும், ‘நடந்து சென்றனர்‘ என்றில்லாமல் ‘புறப்பட்டுச் சென்றனர்‘ என்று இடம்பெற்றுள்ளது.

அபுல் யமான் (ரஹ்), ஷுஐப் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பு, “உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் நடந்து சென்றனர். இறுதியில் இரவு ஓய்வு எடுப்பதற்காக ஒரு குகைக்குள் ஒதுங்கினர்…” என்று ஆரம்பமாகிறது.

அவற்றில், முதலாமவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தார்கள். நான் இரவில் அவர்கள் இருவருக்கும் பால் கறந்து கொடுப்பதற்குமுன் குடும்பத்தாருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை” என்று கூறியதாகவும், இரண்டாமவர், “… அவள் (எனக்கு இணங்க) மறுத்துவிட்டாள். பஞ்சம் நிறைந்த ஓராண்டு வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) அவள் என்னிடம் வந்தாள். (அவளை அடைந்துகொள்வதற்காக) அவளிடம் நான் நூற்று இருபது பொற்காசுகளைக் கொடுத்தேன்…” என்று சொன்னதாகவும், மூன்றாமவர், “… அவரது கூலியை முதலீடாக்கி (நான் விவசாயம் செய்து அதனால் கால்நடைச்) செல்வங்கள் பெருகி, ஆரவாரம் செய்து கொண்டிருந்தன” என்று கூறியதாகவும் காணப்படுகிறது.

“பிறகு அவர்கள் மூவரும் அந்தக் குகையிலிருந்து வெளியேறி நடந்தனர்” என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.