وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ :
نَادَى فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ انْصَرَفَ عَنِ الأَحْزَابِ “ أَنْ لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الظُّهْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ ” . فَتَخَوَّفَ نَاسٌ فَوْتَ الْوَقْتِ فَصَلُّوا دُونَ بَنِي قُرَيْظَةَ . وَقَالَ آخَرُونَ لاَ نُصَلِّي إِلاَّ حَيْثُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنْ فَاتَنَا الْوَقْتُ قَالَ فَمَا عَنَّفَ وَاحِدًا مِنَ الْفَرِيقَيْنِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அகழ்ப் போரை முடித்துத் திரும்பிய நாளன்று, “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை உங்களில் எவரும் லுஹ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று எங்களிடம் (கூறி, பனூ குறைழா குலத்தாரை நோக்கி விரைவாகப் புறப்படுமாறு) அறிவித்தார்கள்.
அவ்வாறு சென்றவர்கள் (வழியிலேயே அஸ்ருத் தொழுகையின் நேரத்தை அடைந்தனர்) சிலர் (அஸ்ருத் தொழுகையின்) நேரம் தவறிவிடுமோ என அஞ்சினர். எனவே, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை அடைவதற்கு முன்பே தொழுதுவிட்டனர். வேறுசிலர் தொழுகையின் நேரம் நமக்குத் தவறினாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்ட இடத்தை அடைந்தே தொழுவோம் என்று கூறி(த் தொழுகையைத் தாமதப்படுத்தி)னர்.
பின்னர் (இரு பிரிவினர் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) அவ்விரு பிரிவினரில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்பு :
நபி (ஸல்) உத்தரவிட்டபோது லுஹ்ருத் தொழுகையைத் தொழுதவர்களும் லுஹ்ரைத் தொழாதவர்களும் அவ்வணியில் இருந்தனர். லுஹ்ரைத் தொழுதிருந்தவர்கள் அஸ்ருடைய நேரத்தில் அஸ்ரை, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை அடைவதற்கு முன்பே தொழுதுவிட்டனர். மற்றவர்கள் தாமதித்து, நபி (ஸல்) உத்தரவின்படி தொழுதனர்.