அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2748

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏إِنَّا لَيْلَةَ الْجُمُعَةِ فِي الْمَسْجِدِ إِذْ جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالَ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَتَكَلَّمَ جَلَدْتُمُوهُ أَوْ قَتَلَ قَتَلْتُمُوهُ وَإِنْ سَكَتَ سَكَتَ عَلَى غَيْظٍ وَاللَّهِ لَأَسْأَلَنَّ عَنْهُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا كَانَ مِنْ الْغَدِ أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَتَكَلَّمَ جَلَدْتُمُوهُ أَوْ قَتَلَ قَتَلْتُمُوهُ أَوْ سَكَتَ سَكَتَ عَلَى غَيْظٍ فَقَالَ اللَّهُمَّ افْتَحْ وَجَعَلَ يَدْعُو فَنَزَلَتْ آيَةُ ‏ ‏اللِّعَانِ وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُمْ شُهَدَاءُ إِلَّا أَنْفُسُهُمْ

‏هَذِهِ الْآيَاتُ فَابْتُلِيَ بِهِ ذَلِكَ الرَّجُلُ مِنْ بَيْنِ النَّاسِ فَجَاءَ هُوَ وَامْرَأَتُهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏فَشَهِدَ الرَّجُلُ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الصَّادِقِينَ ثُمَّ لَعَنَ الْخَامِسَةَ أَنَّ لَعْنَةَ اللَّهِ عَلَيْهِ إِنْ كَانَ مِنْ الْكَاذِبِينَ فَذَهَبَتْ لِتَلْعَنَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَهْ ‏ ‏فَأَبَتْ فَلَعَنَتْ فَلَمَّا أَدْبَرَا قَالَ ‏ ‏لَعَلَّهَا أَنْ تَجِيءَ بِهِ أَسْوَدَ ‏ ‏جَعْدًا ‏ ‏فَجَاءَتْ بِهِ أَسْوَدَ ‏ ‏جَعْدًا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நாங்கள் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து, “ஒரு கணவர், தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்டு, அவர் (அது குறித்துப்) பேசினால் அவருக்கு நீங்கள் (அவதூறுச் சட்டப்படி) சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்றுவிட்டால், (பழிவாங்கல் சட்டப்படி) அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டுமா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்பேன்” என்று சொன்னார்.

மறுநாள் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்து வினவினார். “தம் மனைவியுடன் (அந்நிய) ஆண் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்ட ஒருவர், (அது தொடர்பாகப்) பேசினால் அவருக்கு நீங்கள் சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்றுவிட்டால், நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மௌனமாக இருந்துவிட வேண்டியதுதானா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! (இந்தப் பிரச்சினையில் தெளிவின் வாசலைத்) திறந்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கலானார்கள். அப்போதுதான் “தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்” (24:6-9) என்று தொடங்கும் சுய சாபம் (லிஆன்) வேண்டுதல் தொடர்பான வசனங்கள் அருளப்பெற்றன.

பின்னர் மக்களில் அவரே (தமது சொந்த வாழ்வில்) அந்தப் பிரச்சினையின் மூலம் சோதிக்கப்பட்டார். எனவே, அவரும் அவருடைய மனைவியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, சுய சாபம் (லிஆன்) வேண்டினர். அந்த ஆண், தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு  நான்கு தடவைகள் சாட்சியமளித்தார். பிறகு ஐந்தாவது தடவையில் அவர் “நான் பொய்யனாயிருந்தால் என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சுய சாபமிட்டார்.

பின்னர் அந்தப் பெண் சுய சாபம் (லிஆன்) வேண்ட ஆரம்பித்தபோது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “சற்று பொறு!” என்றார்கள். ஆனால், அவள் ஏற்காமல் சுய சாபம் (லிஆன்) வேண்டும் சொற்களை மொழிந்தாள். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவள் தொங்கும் முடிகள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடும்” என்றார்கள். அவ்வாறே அப்பெண் தொங்கிய முடியுடைய கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith: