حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ – وَاللَّفْظُ لِسَعِيدٍ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ:
يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ ثُمَّ بَكَى حَتَّى بَلَّ دَمْعُهُ الْحَصَى . فَقُلْتُ يَا ابْنَ عَبَّاسٍ وَمَا يَوْمُ الْخَمِيسِ قَالَ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ . فَقَالَ ” ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدِي ” . فَتَنَازَعُوا وَمَا يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ . وَقَالُوا مَا شَأْنُهُ أَهَجَرَ اسْتَفْهِمُوهُ . قَالَ ” دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ أُوصِيكُمْ بِثَلاَثٍ أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ ” . قَالَ وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَهَا فَأُنْسِيتُهَا
قَالَ أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الْحَدِيثِ
இப்னு அப்பாஸ் (ரலி), “அது ஒரு வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று கேட்டுவிட்டு, (நிலத்தில் கிடந்த) பொடிக்கற்கள் நனையுமளவுக்குக் கண்ணீர்விட்டு அழுதார்கள். நான் “இப்னு அப்பாஸ் அவர்களே! அது எந்த வியாழக்கிழமை?” என்று கேட்டேன். இப்னு அப்பாஸ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை (அன்று) கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (ஓர் ஏட்டைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். எனக்குப் பிறகு (குறிப்பிட்ட அந்த விஷயங்களில்) நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், இறைத்தூதர் அருகில் சச்சரவிட்டுக்கொள்வது தகாத செயலாகும்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சுய நினைவோடு பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். என்னை விட்டுவிடுங்கள்.” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், “மூன்று விஷயங்களை நான் எனது மரண சாஸனமாக வலியுறுத்துகின்றேன்: அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை அப்புறப்படுத்துங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினரை நான் உபசரித்து, கண்ணியப் படுத்தியதைப் போன்று நீங்களும் கண்ணியப் படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
குறிப்பு :
“எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) மூன்றாவதைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள் அல்லது அதை அவர்கள் கூறியிருக்க, நான் அதை மறந்துவிட்டேன்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.