அத்தியாயம்: 32, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3294

وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، يَقُولُ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ حُنَيْنٍ فَلَمَّا الْتَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ ‏.‏ قَالَ فَرَأَيْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ قَدْ عَلاَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ فَاسْتَدَرْتُ إِلَيْهِ حَتَّى أَتَيْتُهُ مِنْ وَرَائِهِ فَضَرَبْتُهُ عَلَى حَبْلِ عَاتِقِهِ وَأَقْبَلَ عَلَىَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ الْمَوْتِ ثُمَّ أَدْرَكَهُ الْمَوْتُ فَأَرْسَلَنِي فَلَحِقْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَا لِلنَّاسِ فَقُلْتُ أَمْرُ اللَّهِ ‏.‏ ثُمَّ إِنَّ النَّاسَ رَجَعُوا وَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ ‏”‏ مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ ‏”‏ ‏.‏ قَالَ فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ مِثْلَ ذَلِكَ فَقَالَ فَقُمْتُ فَقُلْتُ مَنْ يَشْهَدُ لِي ثُمَّ جَلَسْتُ ثُمَّ قَالَ ذَلِكَ الثَّالِثَةَ فَقُمْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا لَكَ يَا أَبَا قَتَادَةَ ‏”‏ ‏.‏ فَقَصَصْتُ عَلَيْهِ الْقِصَّةَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ صَدَقَ يَا رَسُولَ اللَّهِ سَلَبُ ذَلِكَ الْقَتِيلِ عِنْدِي فَأَرْضِهِ مِنْ حَقِّهِ ‏.‏ وَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ لاَهَا اللَّهِ إِذًا لاَ يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسُدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَعَنْ رَسُولِهِ فَيُعْطِيكَ سَلَبَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ صَدَقَ فَأَعْطِهِ إِيَّاهُ ‏”‏ ‏.‏ فَأَعْطَانِي قَالَ فَبِعْتُ الدِّرْعَ فَابْتَعْتُ بِهِ مَخْرَفًا فِي بَنِي سَلِمَةَ فَإِنَّهُ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ ‏.‏


وَفِي حَدِيثِ اللَّيْثِ فَقَالَ أَبُو بَكْرٍ كَلاَّ لاَ يُعْطِيهِ أُضَيْبِعَ مِنْ قُرَيْشٍ وَيَدَعُ أَسَدًا مِنْ أُسُدِ اللَّهِ ‏‏ وَفِي حَدِيثِ اللَّيْثِ لأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ ‏.‏

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنْ أَبِي مُحَمَّدٍ الأَنْصَارِيِّ، وَكَانَ جَلِيسًا لأَبِي قَتَادَةَ قَالَ قَالَ أَبُو قَتَادَةَ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ ‏.‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ قَالَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ

ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (அப்போருக்காக) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் எதிர்கொண்டபோது, (தொடக்கத்தில்) முஸ்லிம்களுக்குத் தோல்வி பயம் இருந்தது.

அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரைக் கொல்ல முயல்வதை நான் கண்டேன். நான் அவனிடம் சுற்றிவந்து, அவனுக்குப் பின்பக்கம் சென்று, அவனது பிடரி நரம்பில் வெட்டினேன்.

உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னைத் தாவியணைத்து ஓர் இறுக்கு இறுக்கினான். எனக்கு மூச்சடைத்தது. பின்னர் மரணம் அவனைப் பிடித்துக்கொள்ளவே அவன் என்னை விட்டுவிட்டான்.

பின்னர் நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்தேன். அப்போது அவர்கள் “மக்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சிதறி ஓடுகிறார்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு நான், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று பதிலளித்தேன். பிறகு (பின்வாங்கி ஓடிய) மக்கள் (போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்).

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்தவாறு, “போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் (உடலில் கிடந்த ஆடை, ஆயுதம் போன்ற) உடைமைகள் உரியவை” என்று கூறினார்கள்.

அப்போது நான் எழுந்து நின்று, “(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?” என்று கேட்டு விட்டு உட்கார்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீண்டும், “போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடைமைகள் உரியவை” என்று) கூறினார்கள்.

உடனே நான் (மறுபடியும்) எழுந்து, “(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?” என்று கேட்டேன்; பிறகு உட்கார்ந்துகொண்டேன். பிறகு, மூன்றாவது தடவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.

உடனே நான் எழுந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னைப் பார்த்து), “உங்களுக்கு என்ன வேண்டும், அபூகத்தாதா?” என்று கேட்டார்கள். நடந்ததை அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன்.

அப்போது மக்களில் ஒருவர், “இவர் சொல்வது உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! (இவரால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. அவர் தமது உரிமையை (எனக்கு) விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

அப்போது அபூபக்ருஸ்ஸித்தீக் (ரலி), “நடக்காது!, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிட்டு (எதிரி ஒருவனை வீழ்த்திவிட்டு) வர, அவரால் கொல்லப்பட்ட எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உனக்குக் கொடுக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , “உண்மைதான். (எதிரியை வீழ்த்திய) இவரிடமே அந்தப் பொருட்களைக் கொடுத்துவிடு” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர் அதை என்னிடம் கொடுத்தார். (அந்த வகையில் எனக்குக் கவச உடையொன்று கிடைத்தது.) அந்தக் கவச உடையை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் அடைந்த முதல் சொத்தாகும்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு :

லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூபக்ரு (ரலி),  ‘நடக்காது!, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு, குறைஷியரில் உள்ள குழிமுயல் குட்டிக்கு அதைக் கொடுக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith: