حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :
أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانُوا فى سَفَرٍ فَمَرُّوا بِحَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَلَمْ يُضِيفُوهُمْ . فَقَالُوا لَهُمْ هَلْ فِيكُمْ رَاقٍ فَإِنَّ سَيِّدَ الْحَىِّ لَدِيغٌ أَوْ مُصَابٌ . فَقَالَ رَجُلٌ مِنْهُمْ نَعَمْ فَأَتَاهُ فَرَقَاهُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ الرَّجُلُ فَأُعْطِيَ قَطِيعًا مِنْ غَنَمٍ فَأَبَى أَنْ يَقْبَلَهَا . وَقَالَ حَتَّى أَذْكُرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا رَقَيْتُ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ . فَتَبَسَّمَ وَقَالَ ” وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ ” ثُمَّ قَالَ ”خُذُوا مِنْهُمْ وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ”
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ كِلاَهُمَا عَنْ غُنْدَرٍ، مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ فَجَعَلَ يَقْرَأُ أُمَّ الْقُرْآنِ وَيَجْمَعُ بُزَاقَهُ وَيَتْفُلُ فَبَرَأَ الرَّجُلُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் (பசிக்கு) விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) “உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் யாராவது இருக்கின்றாரா? ஏனெனில், (எங்கள்) குலத் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது” என்று கூறினர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “ஆம்“ என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று, ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தினால் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடைந்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். “நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)” என்று கூறிவிட்டார்.
அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்ஃபாத்திஹா மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்” என்று கூறினார்.
அதைக் கேட்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். மேலும், “அது ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டு விட்டு, “அவர்களிடமிருந்து அ(ந்தச் சன் மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
குறிப்பு :
ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்த நபித்தோழர் ‘குர்ஆனின் அன்னை’ எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (தேள் கொட்டிய இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார்” என்று அபூபிஷ்ரு (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.