وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ – قَالَ – فَرَدَّ اللَّهُ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَىْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ ثُمَّ الْمَوْتُ . قَالَ فَالآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الأَحْمَرِ ”
மலக்குல் மவ்த்து (உயிர் பறிக்கும் வானவர்) மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் வானவர் வந்தபோது, மூஸா (அலை) அவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பறித்துவிட்டார்கள். உடனே அந்த வானவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று “மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்!” என்று கூறினார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், “நீர் அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் வைக்கச் சொல்வீராக. (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு என்று சொல்வீராக!” என்றான்.
(அவ்வாறே அந்த வானவர் மூஸா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூஸா (அலை), “இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடித்த) பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். இறைவன் “மரணம்தான்” என்று பதிலளித்தான்.
மூஸா (அலை), “அப்படியென்றால், இப்போதே (என் உயிரை எடுத்துக்கொள்!)” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக, அங்கிருந்து கல்லெறி தூரத்தில் தமது அடக்கத்தலம் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இதை எடுத்துரைத்தபோது), “நான் அந்த இடத்தில் இருந்தால் செம்மணற்குன்றின் கீழே சாலையோரத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்புகள் :
“அ(ந்த வான)வர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை அஞ்சுகின்றனர். மேலும்; தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கின்றார்கள்” எனும் (இறைவசனம் 16:50)க்கு மேற்காணும் அறிவிப்பு முரணாக உள்ளது.
மேலும், மூஸா (அலை) அவர்கள் அடக்கப்பட்டதாகப் பல இடங்கள் குறிப்பிடப்பட்டாலும் ‘சினாய்’ பாலைவனத்திலுள்ள ‘தீஹ்’ என்னும் இடத்தில் மூஸா (அலை) அடக்கப்பட்டார்கள் என்பதுதான் சரியான தகவல் என்று ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பின் விரிவுரையான ‘தக்மிலத்து ஃபத்ஹில் முல்ஹிம்’ நூலில் குறிப்புள்ளது.
“பிறகு என்ன நடக்கும்?“ என்ற மூஸா (அலை) அவர்களின் கேள்விக்கு, மேற்காணும் ஹதீஸ் எண் 4360இல் “மரணம்தான்“ என்று அல்லாஹ் பதிலளித்ததாகவும் இதை அடுத்த 4361 எண்ணுள்ள ஹதீஸில் “மரணம்தான்“ என்று வானவர் பதிலளித்ததாகவும் இடம்பெற்றுள்ளது.
எனவே, 4360 & 4361 ஆகிய இரு ஹதீஸ்களும் மீள்பார்வைக்குரியன.