அத்தியாயம்: 43, பாடம்: 46, ஹதீஸ் எண்: 4370

حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ – حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ :‏

قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ لَيْسَ هُوَ مُوسَى صَاحِبَ الْخَضِرِ عَلَيْهِ السَّلاَمُ ‏.‏ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ سَمِعْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ قَامَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ ‏.‏ قَالَ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ مُوسَى أَىْ رَبِّ كَيْفَ لِي بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَحَيْثُ تَفْقِدُ الْحُوتَ فَهُوَ ثَمَّ ‏.‏ فَانْطَلَقَ وَانْطَلَقَ مَعَهُ فَتَاهُ وَهُوَ يُوشَعُ بْنُ نُونٍ فَحَمَلَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ حُوتًا فِي مِكْتَلٍ وَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ يَمْشِيَانِ حَتَّى أَتَيَا الصَّخْرَةَ فَرَقَدَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَفَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمِكْتَلِ حَتَّى خَرَجَ مِنَ الْمِكْتَلِ فَسَقَطَ فِي الْبَحْرِ – قَالَ – وَأَمْسَكَ اللَّهُ عَنْهُ جِرْيَةَ الْمَاءِ حَتَّى كَانَ مِثْلَ الطَّاقِ فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا فَانْطَلَقَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتِهِمَا وَنَسِيَ صَاحِبُ مُوسَى أَنْ يُخْبِرَهُ فَلَمَّا أَصْبَحَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا – قَالَ – وَلَمْ يَنْصَبْ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ ‏.‏ قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا ‏.‏ قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا ‏.‏ قَالَ يَقُصَّانِ آثَارَهُمَا حَتَّى أَتَيَا الصَّخْرَةَ فَرَأَى رَجُلاً مُسَجًّى عَلَيْهِ بِثَوْبٍ فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى ‏.‏ فَقَالَ لَهُ الْخَضِرُ أَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ إِنَّكَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ ‏.‏ قَالَ لَهُ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا ‏.‏ قَالَ لَهُ الْخَضِرُ فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ فَانْطَلَقَ الْخَضِرُ وَمُوسَى يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ فَكَلَّمَاهُمْ أَنْ يَحْمِلُوهُمَا فَعَرَفُوا الْخَضِرَ فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ثُمَّ خَرَجَا مِنَ السَّفِينَةِ فَبَيْنَمَا هُمَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ إِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَاقْتَلَعَهُ بِيَدِهِ فَقَتَلَهُ ‏.‏ فَقَالَ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَاكِيَةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ وَهَذِهِ أَشَدُّ مِنَ الأُولَى ‏.‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ ‏.‏ يَقُولُ مَائِلٌ ‏.‏ قَالَ الْخَضِرُ بِيَدِهِ هَكَذَا فَأَقَامَهُ ‏.‏ قَالَ لَهُ مُوسَى قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا لَوْ شِئْتَ لَتَخِذْتَ عَلَيْهِ أَجْرًا ‏.‏ قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا ‏”‏ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى لَوَدِدْتُ أَنَّهُ كَانَ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَخْبَارِهِمَا ‏”‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ كَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا ‏”‏ ‏.‏ قَالَ ‏”‏ وَجَاءَ عُصْفُورٌ حَتَّى وَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ ثُمَّ نَقَرَ فِي الْبَحْرِ ‏.‏ فَقَالَ لَهُ الْخَضِرُ مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ مِنَ الْبَحْرِ ‏”‏ 


قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَكَانَ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا ‏.‏ وَكَانَ يَقْرَأُ وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا ‏

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(களிர் (அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா, இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பெற்ற மூஸா (அலை) அல்லர்; அவர் வேறு ஒரு மூஸா என்று நவ்ஃபு அல்பிகாலீ கூறுகின்றாரே?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இறைவனின் விரோதி(யான அவர்) பொய்யுரைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைத் தாம் கேட்டதாக உபை பின் கஅப் (ரலி) பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்” :

மூஸா (அலை), பனூ இஸ்ராயீல் மக்களிடையே (ஒரு முறை) நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு மூஸா (அலை) “இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (கூறியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு) கூறாமல்.“(என்னைப் பொறுத்தவரையில்) நானே நன்கறிந்தவன்” என்று கூறிவிட்டார்கள்.

இதனால் அல்லாஹ், மூஸா (அலை) அவர்களைக் கண்டித்து, “இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கின்றார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அவர்களுக்கு (வஹீ) அறிவித்தான்.

அதற்கு மூஸா (அலை), “என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?” என்று கேட்டார்கள். “நீங்கள் ஒரு கூடையில் ஒரு மீனை எடுத்துக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகின்றீர்களோ அங்குதான் அவர் இருப்பார்” என்று அல்லாஹ் சொன்னான்.

மூஸா (அலை) அவர்களும் (அவ்வாறே) அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் நடந்தனர். மூஸா (அலை) ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு தம் உதவியாளருடன் நடந்து (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) அந்தப் பாறைக்கு வந்து சேர்ந்து, அங்கு இருவரும் உறங்கினர்.

கூடையிலிருந்த அந்த மீன், கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. அப்போது மீனுக்காக நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிடவே, மீனைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது. அது, அந்த மீனுக்குச் சுரங்கம் போல் ஆனது. அது மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய உதவியாளருக்கும் பெரும் வியப்பாக இருந்தது.

பிறகு எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் இருவரும் நடந்தனர். மூஸா (அலை) அவர்களின் (பயணத்) தோழர் மீனைப் பற்றி மூஸா (அலை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார்.

(இரண்டாம் இரவு முடிந்து) காலை வேளையானபோது மூஸா (அலை) தம் உதவியாளரிடம், “நமது காலை உணவைக் கொண்டுவருக! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்பு அடைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள் (18:62).

தமக்குக் கட்டளையிடப்பட்ட இடத்தைக் கடக்கும்வரை மூஸா (அலை) அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. யூஷஉ பின் நூன், “நாம் அப்பாறையில் ஒதுங்கியபோது கவனித்தீர்களா? (அங்கு தான்) நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களிடம்) கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கடித்துவிட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமான முறையில் அமைத்துக்கொண்டது” என்று கூறினார் (18:63).

அதற்கு மூஸா (அலை), “அதுதான் நாம் தேடிவந்த இடம்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பினார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள்.

அங்குத் தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக்கொண்டிருந்த ஒருவரை(களிரை)க் கண்டார்கள். அவருக்கு மூஸா (அலை) முகமன் கூற, அவர், “உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) ஸலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?” என்று கேட்டார்.

அதற்கு மூஸா (அலை), “நான்தான் மூஸா” என்று பதிலளித்தார்கள். அவர், “இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூஸாவா?” என்று கேட்டார். மூஸா (அலை) “ஆம்“ என்று பதிலளித்தார்கள். அவர், “அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை), “உமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள நல்லறிவை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின்பற்றி வரலாமா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு அவர், “என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் முடியாது; உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?” என்று கேட்டார்.

அதற்கு மூஸா (அலை), “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர். உமது எந்தக் கட்டளைக்கும் நான் மாறு செய்யமாட்டேன்” என்று உறுதி கூறினார்கள்.

அதற்குக் களிர் அவர்கள், “நீங்கள் என்னைப் பின்தொடர்வதானால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாக உங்களுக்குச் சொல்லாதவரையில் நீங்கள் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கக் கூடாது” என்று சொன்னார். மூஸா (அலை) “ஆம் (அப்படியே செய்கிறேன்)” என்று (சம்மதம்) தெரிவித்தார்கள்.

பிறகு களிர் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் கடலோரமாக நடந்தனர். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்துசென்றது. அப்போது அவர்கள் இருவரும் தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, கட்டணம் ஏதுமின்றி அவர்களிருவரையும் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டனர்.

(அவர்களிருவரும் ஏறியமர்ந்ததும்) களிர் அவர்களின் கவனம் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை நோக்கிச் சென்றது. உடனே அதைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சி ஒன்றை அறைந்து)விட்டார்கள்.

உடனே மூஸா (அலை), “கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டை போடுகிறீர்களே? இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரியதோர் (அபாயமான) காரியத்தைச் செய்துவிட்டீர்கள்!” என்று கூறினார்கள்.

அதற்கு களிர் “என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை), “நான் மறந்துவிட்டேன். (அதற்காக) என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து இறங்கி, கடலோரமாக நடந்துகொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் மற்றச் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். உடனே களிர் (அலை) அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் தமது கரத்தால் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூஸா (அலை) களிர் அவர்களிடம், “எந்த உயிரையும் கொல்லாத, ஒரு பாவமும் அறியாத உயிரைக் கொன்றுவிட்டீரே! தகாத காரியத்தைச் செய்துவிட்டீரே!” என்று கூறினார்கள்.

அதற்கு களிர், “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களிடம் நான் கூறவில்லையா?” என்று கேட்டார்.

– இம்முறை களிர் (அலை) கூறியது, முதல் முறை சொன்னதைவிடக் கடுமையானதாக இருந்தது – என்று (அறிவிப்பாளர் ஸயீத் பின் ஜுபைர் கூறுகின்றார்).

பிறகு மூஸா (அலை), “இதற்குப் பிறகு நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம். நான் கூறிய சமாதானத்தை (இரு முறை) ஏற்றுக் கொண்டுவிட்டீர்” என்று சொன்னார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்து, முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்விருவருக்கும் உணவளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அங்கு, கீழே விழுந்துவிடும் அளவுக்கு சாய்ந்த நிலையில் இருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அவர் தமது கரத்தால் அதை(த் தூக்கி) நிறுத்தினார்.

அப்போது மூஸா (அலை), “இவர்களிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் இவர்கள் நம்மை உபசரிக்கவில்லை; உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் விழவிருந்த அவர்களது சுவரைத் தூக்கி நிறுத்திவிட்டீர்கள்) நீங்கள் நினைத்திருந்தால் இதற்குக் கூலி பெற்றிருக்கலாமே!” என்றார்கள்.

களிர் (அலை), “இதுவே நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) செயல்களுக்கான விளக்கத்தை உங்களுக்கு (இப்போது) கூறுவேன்” என்று கூறினார்கள்.

– (இந்நிகழ்ச்சியை கூறிக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். அவர் பொறுமையாக இருந்திருப்பாரானால், அவ்விருவர் பற்றிய (இன்னும்) பல தகவல்கள் நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே என்று நான் ஆசைப்பட்டதுண்டு” என்று கூறினார்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முதல் தடவை மூஸா (அலை) பொறுமையிழந்தது மறதியினாலாகும்” என்றும் கூறினார்கள் –

(தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக்) கூறினார்கள்:

சிட்டுக் குருவியொன்று (அப்போது) வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்தது. பிறகு (தனது அலகால்) கடலில் ஒரு முறை கொத்தி(நீர் அருந்தி)யது. அப்போது மூஸா (அலை) அவர்களிடம் களிர், “உம்முடைய அறிவும் என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக் குருவி (தனது அலகால்) இந்தக் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறுகின்றார்:

இப்னு அப்பாஸ் (ரலி), (இந்நிகழ்ச்சி பற்றிக் கூறும் 18:79ஆவது வசனத்தின் மூலத்தை) “வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல ஸஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா” என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னனால் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லாத நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தை) “வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன் (அச்சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்)” என்று ஓதுவார்கள்.

Share this Hadith:

Leave a Comment