அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4467

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيُّ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ الْحُسَيْنِ حَدَّثَهُ :‏

أَنَّهُمْ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رضى الله عنهما لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَىَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا قَالَ فَقُلْتُ لَهُ لاَ ‏.‏ قَالَ لَهُ هَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ وَايْمُ اللَّهِ لَئِنْ أَعْطَيْتَنِيهِ لاَ يُخْلَصُ إِلَيْهِ أَبَدًا حَتَّى تَبْلُغَ نَفْسِي إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ ‏”‏ إِنَّ فَاطِمَةَ مِنِّي وَإِنِّي أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ فَأَحْسَنَ قَالَ ‏”‏ حَدَّثَنِي فَصَدَقَنِي وَوَعَدَنِي فَأَوْفَى لِي وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلاً وَلاَ أُحِلُّ حَرَامًا وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ مَكَانًا وَاحِدًا أَبَدًا ‏”‏

நாங்கள் (எங்கள் தந்தை) ஹுஸைன் பின் அலீ (ரலி) கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) சந்தித்தார்கள்.

அப்போது அவர்கள், “என்னிடம் உங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுவீர்களா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், “அப்படி ஏதுமில்லை” என்று பதிலளித்தேன்.

மிஸ்வர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கின்றீர்களா? ஏனெனில், அந்த(பனூ உமய்யா)க் கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது” என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)

ஃபாத்திமா (ரலி) (மனைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அது குறித்து மக்களிடம் அவர்களது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றபோது, பருவ வயதை அடைந்துவிட்டிருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் ஐயுறுகின்றேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸு குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் (அபுல்ஆஸ் பின் ரபீஆ) பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள். அப்போது அவர்கள், “அவர் என்னிடம் சொன்னதை உண்மைப்படுத்தினார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.

மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன் (அலீ இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை நான் தடுக்க முடியாது).

ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதி(அபூஜஹ்லு) மகளும் ஒரே ஆணிடம் (மனைவியராக) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) வழியாக அலீ பின் அல்ஹுஸைன் (ரஹ்)


குறிப்பு :

பனூ அப்தி ஷம்ஸு குலத்தைச் சேர்ந்த அபுல் ஆஸ் பின் ரபீஆ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி) அவர்களின் கணவராவார்.

Share this Hadith: