அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4521

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِقُتَيْبَةَ – حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ قَالَ :‏

كُنْتُ جَالِسًا فِي حَلْقَةٍ فِي مَسْجِدِ الْمَدِينَةِ – قَالَ – وَفِيهَا شَيْخٌ حَسَنُ الْهَيْئَةِ وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ – قَالَ – فَجَعَلَ يُحَدِّثُهُمْ حَدِيثًا حَسَنًا – قَالَ – فَلَمَّا قَامَ قَالَ الْقَوْمُ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ‏.‏ قَالَ فَقُلْتُ وَاللَّهِ لأَتْبَعَنَّهُ فَلأَعْلَمَنَّ مَكَانَ بَيْتِهِ ‏.‏ قَالَ فَتَبِعْتُهُ فَانْطَلَقَ حَتَّى كَادَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَدِينَةِ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ – قَالَ – فَاسْتَأْذَنْتُ عَلَيْهِ فَأَذِنَ لِي فَقَالَ مَا حَاجَتُكَ يَا ابْنَ أَخِي قَالَ فَقُلْتُ لَهُ سَمِعْتُ الْقَوْمَ يَقُولُونَ لَكَ لَمَّا قُمْتَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ‏.‏ فَأَعْجَبَنِي أَنْ أَكُونَ مَعَكَ قَالَ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْجَنَّةِ وَسَأُحَدِّثُكَ مِمَّ قَالُوا ذَاكَ إِنِّي بَيْنَمَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِي رَجُلٌ فَقَالَ لِي قُمْ ‏.‏ فَأَخَذَ بِيَدِي فَانْطَلَقْتُ مَعَهُ – قَالَ – فَإِذَا أَنَا بِجَوَادَّ عَنْ شِمَالِي – قَالَ – فَأَخَذْتُ لآخُذَ فِيهَا فَقَالَ لِي لاَ تَأْخُذْ فِيهَا فَإِنَّهَا طُرُقُ أَصْحَابِ الشِّمَالِ – قَالَ – فَإِذَا جَوَادُّ مَنْهَجٌ عَلَى يَمِيِنِي فَقَالَ لِي خُذْ هَا هُنَا ‏.‏ فَأَتَى بِي جَبَلاً فَقَالَ لِي اصْعَدْ – قَالَ – فَجَعَلْتُ إِذَا أَرَدْتُ أَنْ أَصْعَدَ خَرَرْتُ عَلَى اسْتِي – قَالَ – حَتَّى فَعَلْتُ ذَلِكَ مِرَارًا – قَالَ – ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى أَتَى بِي عَمُودًا رَأْسُهُ فِي السَّمَاءِ وَأَسْفَلُهُ فِي الأَرْضِ فِي أَعْلاَهُ حَلْقَةٌ فَقَالَ لِيَ ‏.‏ اصْعَدْ فَوْقَ هَذَا ‏.‏ قَالَ قُلْتُ كَيْفَ أَصْعَدُ هَذَا وَرَأْسُهُ فِي السَّمَاءِ – قَالَ – فَأَخَذَ بِيَدِي فَزَجَلَ بِي – قَالَ – فَإِذَا أَنَا مُتَعَلِّقٌ بِالْحَلْقَةِ – قَالَ – ثُمَّ ضَرَبَ الْعَمُودَ فَخَرَّ – قَالَ – وَبَقِيتُ مُتَعَلِّقًا بِالْحَلْقَةِ حَتَّى أَصْبَحْتُ – قَالَ – فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَصَصْتُهَا عَلَيْهِ فَقَالَ ‏ “‏ أَمَّا الطُّرُقُ الَّتِي رَأَيْتَ عَنْ يَسَارِكَ فَهِيَ طُرُقُ أَصْحَابِ الشِّمَالِ – قَالَ – وَأَمَّا الطُّرُقُ الَّتِي رَأَيْتَ عَنْ يَمِينِكَ فَهِيَ طُرُقُ أَصْحَابِ الْيَمِينِ وَأَمَّا الْجَبَلُ فَهُوَ مَنْزِلُ الشُّهَدَاءِ وَلَنْ تَنَالَهُ وَأَمَّا الْعَمُودُ فَهُوَ عَمُودُ الإِسْلاَمِ وَأَمَّا الْعُرْوَةُ فَهِيَ عُرْوَةُ الإِسْلاَمِ وَلَنْ تَزَالَ مُتَمَسِّكًا بِهَا حَتَّى تَمُوتَ ‏”‏ ‏

நான் மதீனாவின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த) அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அங்கு அழகிய தோற்றத்துடன் முதியவர் ஒருவர் இருந்தார். அவர், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி).

அவர், மக்களுக்கு அழகிய ஹதீஸ் ஒன்றைக் கூறலானார். பிறகு அவர் எழுந்து சென்றபோது மக்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்!” என்று கூறினர். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களது இல்லத்தை நான் அறிந்துகொள்வேன்” என்று (மனத்துள்) கூறிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அவர்கள் நடந்து, மதீனாவைவிட்டு வெளியேறும் தூரத்திற்குச் சென்று தமது இல்லத்திற்குள் நுழைந்தார்கள். பிறகு நான் (சென்று) அவர்களிடம் உள்ளே நுழைய அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.

பிறகு என்னிடம், “என் சகோதரர் மகனே! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர்களிடம் நான், “நீங்கள் எழுந்து சென்றபோது உங்களைப் பற்றி மக்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று கூறியதைக் கேட்டேன். ஆகவே, உங்களுடன் இருப்பதை நான் விரும்பினேன்” என்று சொன்னேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) கூறினார்கள்: சொர்க்கவாசிகளை அல்லாஹ்வே நன்கறிவான். மக்கள் ஏன் இவ்வாறு கூறினர் என உமக்கு நான் தெரிவிக்கிறேன்:

நான் (ஒரு நாள்) உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒருவர் என்னிடம் வந்து, “எழுங்கள்!” என்று சொல்லிவிட்டு, எனது கையைப் பிடித்துக்கொண்டார். அவருடன் நான் நடந்தேன். அப்போது எனக்கு இடப் பக்கத்தில் தெளிவான பல பாதைகளைக் கண்டேன். அதில் நான் செல்ல முயன்றேன். அப்போது அந்த மனிதர் என்னிடம், “அவற்றில் நீங்கள் செல்லாதீர்கள். இவை இடப் புறத்தினவரின் (நரகவாசிகளின்) பாதைகள்” என்று கூறினார்.

எனக்கு வலப் பக்கத்தில் பல நேரான பாதைகள் இருந்தன. அப்போது அந்த மனிதர், “இதில் செல்லுங்கள்” என்று கூறினார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஒரு மலை அருகே சென்றார். “இதில் ஏறுங்கள்” என்று கூறினார். அதில் நான் ஏற முயன்றபோது மல்லாந்து விழலானேன். இவ்வாறு பல முறை விழுந்தேன்.

பிறகு அவர் என்னை ஒரு தூண் அருகே அழைத்துச் சென்றார். அதன் மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் கீழ்ப்பகுதி தரையில் இருந்தது. அத்தூணுக்கு மேலே வளையம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம், “இதற்கு மேலே ஏறுங்கள்” என்று கூறினார். நான், “இதில் எப்படி ஏறுவேன்? அதன் மேற்பகுதி வானத்தில் இருக்கிறதே!” என்று கேட்டேன். உடனே அவர் என்னைப் பிடித்து மேலே வீசினார். உடனே நான் அந்த வளையத்தைப் பிடித்துத் தொங்கினேன்.

பிறகு அவர் அந்தத் தூணை அடித்தார். அது கீழே விழுந்துவிட்டது. அப்போதும் நான் அந்த வளையத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன். விடிந்தவுடன் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அந்த என் கனவைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன்.

அப்போது நபி (ஸல்), “உங்களுக்கு இடப் பக்கத்தில் நீங்கள் கண்ட பாதைகள் இடப் புறக்காரர்களின் (நரகவாசிகளின்) பாதைகளாகும். உங்களுக்கு வலப் பக்கத்திலிருந்த பாதைகள் வலப் புறக்காரர்களின் (சொர்க்கவாசிகளின்) பாதைகளாகும். அந்த மலை, உயிர்த் தியாகிகளின் இருப்பிடமாகும். அதை உங்களால் ஒருகாலும் அடைய முடியாது. அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி (வளையம்) இஸ்லாத்தின் பிடியாகும். நீங்கள் இறக்கும்வரை எப்போதும் அதைப் பலமாகப் பற்றிக்கொண்டே இருப்பீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக கரஷா பின் அல்ஹுர்ரு (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4520

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ قَالَ قَيْسُ بْنُ عُبَادٍ :‏

كُنْتُ فِي حَلْقَةٍ فِيهَا سَعْدُ بْنُ مَالِكٍ وَابْنُ عُمَرَ فَمَرَّ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَالُوا هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏.‏ فَقُمْتُ فَقُلْتُ لَهُ إِنَّهُمْ قَالُوا كَذَا وَكَذَا ‏.‏ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا كَانَ يَنْبَغِي لَهُمْ أَنْ يَقُولُوا مَا لَيْسَ لَهُمْ بِهِ عِلْمٌ إِنَّمَا رَأَيْتُ كَأَنَّ عَمُودًا وُضِعَ فِي رَوْضَةٍ خَضْرَاءَ فَنُصِبَ فِيهَا وَفِي رَأْسِهَا عُرْوَةٌ وَفِي أَسْفَلِهَا مِنْصَفٌ – وَالْمِنْصَفُ الْوَصِيفُ – فَقِيلَ لِيَ ارْقَهْ ‏.‏ فَرَقِيتُ حَتَّى أَخَذْتُ بِالْعُرْوَةِ فَقَصَصْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَمُوتُ عَبْدُ اللَّهِ وَهُوَ آخِذٌ بِالْعُرْوَةِ الْوُثْقَى ‏”‏

நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த ஓர்) அவையில் இருந்தேன். அதில் ஸஅத் பின் மாலிக் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் இருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) (எங்களைக்) கடந்து சென்றார்கள்.

அப்போது அ(ங்கிருந்த)வர்கள், “இவர் சொக்கவாசிகளில் ஒருவர்” என்று கூறினர். உடனே நான் (அங்கிருந்து) எழுந்து அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களிடம் (சென்று), “மக்கள் இப்படி இப்படிக் கூறுகின்றனர்” என்று சொன்னேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி), “அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாததைச் சொல்வது எவருக்கும் தகாது. (அவர்கள் இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு:) நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பசுமையான பூங்காவில் தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின்பு அது அங்கு நாட்டப்பட்டது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் ‘மின்ஸஃப்’ ஒருவர் இருந்தார். – மின்ஸஃப் என்பதற்கு ஊழியர் என்பது பொருள் –

அப்போது என்னிடம் ‘இதில் ஏறு’ என்று சொல்லப்பட்டது. நான் அதில் ஏறி அந்தப் பிடியைப் பற்றினேன். பிறகு அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அப்துல்லாஹ், பலமான பிடி(யான இஸ்லாமிய நெறி)யைப் பற்றிய நிலையில் இறப்பார்’ என்று கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக கைஸ் பின் உபாத் (ரஹ்).

அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4519

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ قَالَ :‏

كُنْتُ بِالْمَدِينَةِ فِي نَاسٍ فِيهِمْ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ فِي وَجْهِهِ أَثَرٌ مِنْ خُشُوعٍ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏.‏ فَصَلَّى رَكْعَتَيْنِ يَتَجَوَّزُ فِيهِمَا ثُمَّ خَرَجَ فَاتَّبَعْتُهُ فَدَخَلَ مَنْزِلَهُ وَدَخَلْتُ فَتَحَدَّثْنَا فَلَمَّا اسْتَأْنَسَ قُلْتُ لَهُ إِنَّكَ لَمَّا دَخَلْتَ قَبْلُ قَالَ رَجُلٌ كَذَا وَكَذَا قَالَ سُبْحَانَ اللَّهِ مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ مَا لاَ يَعْلَمُ وَسَأُحَدِّثُكَ لِمَ ذَاكَ رَأَيْتُ رُؤْيَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَصَصْتُهَا عَلَيْهِ رَأَيْتُنِي فِي رَوْضَةٍ – ذَكَرَ سَعَتَهَا وَعُشْبَهَا وَخُضْرَتَهَا – وَوَسْطَ الرَّوْضَةِ عَمُودٌ مِنْ حَدِيدٍ أَسْفَلُهُ فِي الأَرْضِ وَأَعْلاَهُ فِي السَّمَاءِ فِي أَعْلاَهُ عُرْوَةٌ ‏.‏ فَقِيلَ لِي ارْقَهْ ‏.‏ فَقُلْتُ لَهُ لاَ أَسْتَطِيعُ ‏.‏ فَجَاءَنِي مِنْصَفٌ – قَالَ ابْنُ عَوْنٍ وَالْمِنْصَفُ الْخَادِمُ – فَقَالَ بِثِيَابِي مِنْ خَلْفِي – وَصَفَ أَنَّهُ رَفَعَهُ مِنْ خَلْفِهِ بِيَدِهِ – فَرَقِيتُ حَتَّى كُنْتُ فِي أَعْلَى الْعَمُودِ فَأَخَذْتُ بِالْعُرْوَةِ فَقِيلَ لِيَ اسْتَمْسِكْ ‏.‏ فَلَقَدِ اسْتَيْقَظْتُ وَإِنَّهَا لَفِي يَدِي فَقَصَصْتُهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ تِلْكَ الرَّوْضَةُ الإِسْلاَمُ وَذَلِكَ الْعَمُودُ عَمُودُ الإِسْلاَمِ وَتِلْكَ الْعُرْوَةُ عُرْوَةُ الْوُثْقَى وَأَنْتَ عَلَى الإِسْلاَمِ حَتَّى تَمُوتَ ‏”‏ ‏.‏ قَالَ وَالرَّجُلُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ‏

நான் மதீனத்து(ப் பள்ளிவாசலில்) சிலருடன் இருந்தேன். அவர்களில் நபித்தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது ஒருவர் வந்தார். அவரது முகத்தில் ஸஜ்தாவின் அடையாளம் இருந்தது. மக்களில் சிலர், “இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்; இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்” என்று சொன்னார்கள். அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர் தமது இல்லத்திற்குள் நுழைந்தபோது நானும் நுழைந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் சகஜ நிலைக்கு வந்தபோது, “நீங்கள் சற்று முன்னர் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்த சமயம், ஒருவர் இப்படி (நீங்கள் சொர்க்கவாசி என்று) சொன்னார்” என அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: “ஸுப்ஹானல்லாஹ்! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையாகாது. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பதைப் போன்று கண்டேன். – அதன் விசாலத்தையும் புற்பூண்டுகளையும் பசுமையையும் வர்ணித்தார் – பூங்காவின் நடுவே இரும்பாலான தூண் ஒன்று இருந்தது. அதன் அடிப்பகுதி தரையிலும் மேற்பகுதி வானிலும் இருந்தது. அதற்கும் மேலே கைப்பிடி ஒன்று இருந்தது. என்னிடம், “இதில் ஏறு” என்று சொல்லப்பட்டது. நான் “என்னால் இயலாதே!” என்று சொன்னேன்.

அப்போது என்னிடம் ‘மின்ஸஃப்’ ஒருவர் வந்தார் அவர் என் ஆடையைப் பிடித்துப் பின்பக்கமாக என்னை இவ்வாறு தூக்கிவிட்டார். – அதைச் சைகையால் செய்து காட்டுகிறார் -. உடனே நான் அந்தத் தூணில் ஏறிவிட்டேன். இறுதியில் அதன் உச்சிக்கு நான் சென்று அந்தப் பிடியைப் பற்றினேன். அப்போது என்னிடம், “நன்கு பற்றிப் பிடித்துக் கொள்” என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றிக்கொண்டேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க, (திடுக்கிட்டு) நான் விழித்துவிட்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, ‘அந்தப் பூங்காதான் இஸ்லாம். அந்தத் தூண் இஸ்லாத்தின் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறைநம்பிக்கை எனும்) பிடியாகும். ஆகவே, நீங்கள் இறக்கும்வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்’ என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்”.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக கைஸ் பின் உபாத் (ரஹ்).


குறிப்பு :

‘மின்ஸஃப்’ என்பதற்கு ஊழியர் என்பது பொருள் என அறிவிப்பாளர் இப்னு அவ்னு குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4518

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ :‏

مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَىٍّ يَمْشِي أَنَّهُ فِي الْجَنَّةِ إِلاَّ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர பூமியின்மீது நடமாடும் எவரையும் “இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)