அத்தியாயம்: 44, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4537

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ – وَاللَّفْظُ لأَبِي عَامِرٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

لَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حُنَيْنٍ بَعَثَ أَبَا عَامِرٍ عَلَى جَيْشٍ إِلَى أَوْطَاسٍ فَلَقِيَ دُرَيْدَ بْنَ الصِّمَّةِ فَقُتِلَ دُرَيْدٌ وَهَزَمَ اللَّهُ أَصْحَابَهُ فَقَالَ أَبُو مُوسَى وَبَعَثَنِي مَعَ أَبِي عَامِرٍ – قَالَ – فَرُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ رَمَاهُ رَجُلٌ مِنْ بَنِي جُشَمٍ بِسَهْمٍ فَأَثْبَتَهُ فِي رُكْبَتِهِ فَانْتَهَيْتُ إِلَيْهِ فَقُلْتُ يَا عَمِّ مَنْ رَمَاكَ فَأَشَارَ أَبُو عَامِرٍ إِلَى أَبِي مُوسَى فَقَالَ إِنَّ ذَاكَ قَاتِلِي تَرَاهُ ذَلِكَ الَّذِي رَمَانِي ‏.‏ قَالَ أَبُو مُوسَى فَقَصَدْتُ لَهُ فَاعْتَمَدْتُهُ فَلَحِقْتُهُ فَلَمَّا رَآنِي وَلَّى عَنِّي ذَاهِبًا فَاتَّبَعْتُهُ وَجَعَلْتُ أَقُولُ لَهُ أَلاَ تَسْتَحْيِي أَلَسْتَ عَرَبِيًّا أَلاَ تَثْبُتُ فَكَفَّ فَالْتَقَيْتُ أَنَا وَهُوَ فَاخْتَلَفْنَا أَنَا وَهُوَ ضَرْبَتَيْنِ فَضَرَبْتُهُ بِالسَّيْفِ فَقَتَلْتُهُ ثُمَّ رَجَعْتُ إِلَى أَبِي عَامِرٍ فَقُلْتُ إِنَّ اللَّهَ قَدْ قَتَلَ صَاحِبَكَ ‏.‏ قَالَ فَانْزِعْ هَذَا السَّهْمَ فَنَزَعْتُهُ فَنَزَا مِنْهُ الْمَاءُ فَقَالَ يَا ابْنَ أَخِي انْطَلِقْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْرِئْهُ مِنِّي السَّلاَمَ وَقُلْ لَهُ يَقُولُ لَكَ أَبُو عَامِرٍ اسْتَغْفِرْ لِي ‏.‏ قَالَ وَاسْتَعْمَلَنِي أَبُو عَامِرٍ عَلَى النَّاسِ وَمَكَثَ يَسِيرًا ثُمَّ إِنَّهُ مَاتَ فَلَمَّا رَجَعْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ فِي بَيْتٍ عَلَى سَرِيرٍ مُرْمَلٍ وَعَلَيْهِ فِرَاشٌ وَقَدْ أَثَّرَ رِمَالُ السَّرِيرِ بِظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَنْبَيْهِ فَأَخْبَرْتُهُ بِخَبَرِنَا وَخَبَرِ أَبِي عَامِرٍ وَقُلْتُ لَهُ قَالَ قُلْ لَهُ يَسْتَغْفِرْ لِي ‏.‏ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ ‏”‏ ‏.‏ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ أَوْ مِنَ النَّاسِ ‏”‏ ‏.‏ فَقُلْتُ وَلِي يَا رَسُولَ اللَّهِ فَاسْتَغْفِرْ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ذَنْبَهُ وَأَدْخِلْهُ يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلاً كَرِيمًا ‏”‏ ‏.‏ قَالَ أَبُو بُرْدَةَ إِحْدَاهُمَا لأَبِي عَامِرٍ وَالأُخْرَى لأَبِي مُوسَى ‏

ஹுனைன் போர் முடிந்த பின்னர் நபி (ஸல்), அபூஆமிர் (ரலி) அவர்களின் தலைமையில் ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். அப்போது அபூஆமிர் (ரலி) (கவிஞன்) ‘துரைத் பின் அஸ்ஸிம்மா’வை(ப் போரில்) எதிர்கொண்டார்கள்.

துரைத் (போரில்) கொல்லப்பட்டான்; அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் அவர்களுடன் என்னையும் நபி (ஸல்) (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்கால்மீது  அம்பு (வந்து) பாய்ந்தது. ‘பனூ ஜுஷம்’ குலத்தைச் சேர்ந்தவன் அந்த அம்பை அவர்களது முழங்காலில் எய்தினான்.

உடனே நான் அபூஆமிர் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “அதோ அங்கே தெரிகின்றானே அவன்தான் என்மீது அம்பெய்தவன்” என்று எனக்குச் சைகை செய்து காட்டினார்கள். நான் அவனைக் குறி வைத்து நேராக அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். “புறமுதுகிட்டு ஓடுகிறாயே உனக்கு வெட்கமில்லையா? நீ ஓர் அரபியன் இல்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று அவனிடம் கேட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக்கொண்டான்.

பிறகு நானும் அவனும் நேருக்குநேர் சந்தித்து, வாளால் மாறி மாறித் தாக்கிக்கொண்டோம். அவனை நான் வாளால் வெட்டிக் கொன்றேன். பிறகு அபூஆமிர் அவர்களிடம் திரும்பி வந்து, “உங்களைக் கொல்ல முயன்றவனை அல்லாஹ் கொன்றொழித்துவிட்டான்” என்று சொன்னேன். பிறகு “(எனது முழங்காலில் தைத்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கி எடுங்கள்” என்று அபூஆமிர் (ரலி) கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது.

அப்போது அபூஆமிர் அவர்கள், “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு என் ஸலாம் கூறி, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கூறியதாகச் சொல்வீராக!” என்றார்கள்.

பிறகு அபூஆமிர் (ரலி) என்னை மக்களுக்குத் தளபதியாக நியமித்துவிட்டுச் சிறிது நேரத்திற்குப்பின் இறந்துவிட்டார்கள்.

நான் (அங்கிருந்து) திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் (பேரீச்ச நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும், கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும் விலாப் புறங்களிலும் அடையாளம் பதிந்திருந்தது.

அப்போது அவர்களிடம் எங்கள் (படையினர் பற்றிய) செய்தியையும் அபூஆமிர் (ரலி) அவர்களது செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி அபூஆமிர் வேண்டியது பற்றியும் கூறினேன்.

உடனே நபி (ஸல்) நீர் கொண்டுவரும்படி கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினங்களில் / மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! (அபூமூஸா) அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியமான இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூபுர்தா (ரஹ்) கூறுகின்றார்: (நபி (ஸல்) செய்த) இரு பிரார்த்தனைகளில் முந்தியது அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் இரண்டாவது (என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

அத்தியாயம்: 44, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4536

حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ ‏”‏ إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا ‏”‏ ‏.‏ فَقَالاَ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ ‏”‏ اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا ‏”‏ ‏.‏ فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلاَ لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا ‏.‏ فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً

நபி (ஸல்) மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன்; அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசியொருவர் வந்து, “முஹம்மதே! நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “நற்செய்தியைப் பெற்றுக்கொள்!” என்று சொன்னார்கள். அதற்கு அவர் “நற்செய்தியைப் பெற்றுக்கொள் என்று என்னிடம் பலமுறை சொல்லிவிட்டீர்களே!” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி கோபத்திலுள்ள ஒருவரைப் போன்று திரும்பி, “இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

நாங்கள் இருவரும் “நாங்கள் ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். பிறகு நபி (ஸல்), நீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவி, அந்தப் பாத்திரத்திற்குள் உமிழ்ந்தார்கள். பிறகு “நீங்கள் இருவரும் இதில் சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள். நாங்கள் அந்தப் பாத்திரத்தை எடுத்து நபியவர்கள் கூறியதைப் போன்றே செய்தோம்.

அப்போது இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, “உங்கள் அன்னைக்காகவும் (அதாவது எனக்காகவும்) அதிலிருந்து சிறிது நீரை மீதி வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அதில் சிறிது நீரை மீதி வைத்தோம்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)