அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4429

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي طَائِفَةٍ مِنَ النَّهَارِ لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ حَتَّى جَاءَ سُوقَ بَنِي قَيْنُقَاعَ ثُمَّ انْصَرَفَ حَتَّى أَتَى خِبَاءَ فَاطِمَةَ فَقَالَ ‏”‏ أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ ‏”‏ ‏.‏ يَعْنِي حَسَنًا فَظَنَنَّا أَنَّهُ إِنَّمَا تَحْبِسُهُ أُمُّهُ لأَنْ تُغَسِّلَهُ وَتُلْبِسَهُ سِخَابًا فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ يَسْعَى حَتَّى اعْتَنَقَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحْبِبْ مَنْ يُحِبُّهُ ‏”‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பகல் வேளையில் சென்றுகொண்டிருந்தேன். ‘பனூ கைனுகா’ கடைவீதி வரை அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேசவில்லை. (மௌனமாகவே நடந்தோம்).

பிறகு அங்கிருந்து திரும்பி (தம் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் குடிசைக்கு வந்து, “இங்கே அந்தப் பொடியன் (ஹஸன்) இருக்கின்றானா? இங்கே அந்தப் பொடியன் இருக்கின்றானா?” என்று கேட்டார்கள்.

ஹஸனின் தாயார், அவரை நீராட்டி நறுமண மாலையை அணிவிப்பதற்காகவே தாமதப்படுத்துகிறார் என்றே நாங்கள் எண்ணினோம். நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் குழந்தை (ஹஸன்) ஓடிவந்தார். உடனே நபியவர்களும் அவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நான் இவரை நேசிக்கின்றேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)