அத்தியாயம்: 47, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4808

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي أَبُو شُرَيْحٍ، أَنَّ أَبَا الأَسْوَدِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ :‏ ‏

قَالَتْ لِي عَائِشَةُ يَا ابْنَ أُخْتِي بَلَغَنِي أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو مَارٌّ بِنَا إِلَى الْحَجِّ، فَالْقَهُ فَسَائِلْهُ، فَإِنَّهُ قَدْ حَمَلَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم عِلْمًا كَثِيرًا – قَالَ – فَلَقِيتُهُ فَسَاءَلْتُهُ عَنْ أَشْيَاءَ يَذْكُرُهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ عُرْوَةُ فَكَانَ فِيمَا ذَكَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ اللَّهَ لاَ يَنْتَزِعُ الْعِلْمَ مِنَ النَّاسِ انْتِزَاعًا وَلَكِنْ يَقْبِضُ الْعُلَمَاءَ فَيَرْفَعُ الْعِلْمَ مَعَهُمْ وَيُبْقِي فِي النَّاسِ رُءُوسًا جُهَّالاً يُفْتُونَهُمْ بِغَيْرِ عِلْمٍ فَيَضِلُّونَ وَيُضِلُّونَ ‏”‏ ‏.‏ قَالَ عُرْوَةُ فَلَمَّا حَدَّثْتُ عَائِشَةَ بِذَلِكَ أَعْظَمَتْ ذَلِكَ وَأَنْكَرَتْهُ قَالَتْ أَحَدَّثَكَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا قَالَ عُرْوَةُ حَتَّى إِذَا كَانَ قَابِلٌ قَالَتْ لَهُ إِنَّ ابْنَ عَمْرٍو قَدْ قَدِمَ فَالْقَهُ ثُمَّ فَاتِحْهُ حَتَّى تَسْأَلَهُ عَنِ الْحَدِيثِ الَّذِي ذَكَرَهُ لَكَ فِي الْعِلْمِ – قَالَ – فَلَقِيتُهُ فَسَاءَلْتُهُ فَذَكَرَهُ لِي نَحْوَ مَا حَدَّثَنِي بِهِ فِي مَرَّتِهِ الأُولَى ‏.‏ قَالَ عُرْوَةُ فَلَمَّا أَخْبَرْتُهَا بِذَلِكَ قَالَتْ مَا أَحْسِبُهُ إِلاَّ قَدْ صَدَقَ أَرَاهُ لَمْ يَزِدْ فِيهِ شَيْئًا وَلَمْ يَنْقُصْ

என்னிடம் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி), “என் சகோதரி மகனே! (நபித்தோழர்) அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நம்மைக் கடந்து ஹஜ்ஜுக்குச் செல்லவிருக்கின்றார் என எனக்குச் செய்தி வந்துள்ளது. எனவே, அவரைச் சந்தித்து அவரிடம் (மார்க்க விளக்கங்களைக்) கே(ட்டுத் தெரிந்துகொ)ள். ஏனெனில், அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான கல்வியறிவைப் பெற்றுள்ளார்” என்று கூறினார்கள்.

ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர் அறிந்த பல்வேறு செய்திகள் குறித்துக் கேட்டேன். அவற்றில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்:

நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மனிதர்களி(ன் மனங்களி)லிருந்து ஒரேயடியாக மார்க்கக் கல்வியறிவைப் பறித்துவிடமாட்டான். மாறாக, மார்க்கக் கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வான். பின்னர் மக்களிடையே அறிவீனர்களான தலைவர்களையே அல்லாஹ் விட்டுவைப்பான். அவர்கள் மார்க்க அறிவின்றி மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன்மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்”

பிறகு நான் இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதை ஆயிஷா (ரலி) மிகையெனக் கருதி மறுத்தார்கள். “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அம்ரு உன்னிடம் சொன்னாரா?” என்று கேட்டார்கள்.

அடுத்த ஆண்டு ஆனபோதும் என்னிடம் ஆயிஷா (ரலி), “அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) ஹஜ்ஜுக்கு வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்து, முன்பு உன்னிடம் அவர் சொன்ன கல்வி தொடர்பான அந்த ஹதீஸைப் பற்றி அவரிடம் கேள்” என்றார்கள். அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் கேட்டேன். முதல் முறை என்னிடம் அறிவித்ததைப் போன்றே (எந்த மாற்றமுமின்றி) என்னிடம் அறிவித்தார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தபோது, “அவர் உண்மையே கூறியிருக்கின்றார் என்று நான் கருதுகிறேன்; சிறிதும் கூட்டவோ குறைக்கவோ  இல்லை என்றே நான் கருதுகின்றேன்”என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

Share this Hadith: