حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ :
أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُنْطَلِقٌ إِلَى بَنِي الْمُصْطَلِقِ فَأَتَيْتُهُ وَهُوَ يُصَلِّي عَلَى بَعِيرِهِ فَكَلَّمْتُهُ فَقَالَ لِي بِيَدِهِ هَكَذَا وَأَوْمَأَ زُهَيْرٌ بِيَدِهِ ثُمَّ كَلَّمْتُهُ فَقَالَ لِي هَكَذَا فَأَوْمَأَ زُهَيْرٌ أَيْضًا بِيَدِهِ نَحْوَ الْأَرْضِ وَأَنَا أَسْمَعُهُ يَقْرَأُ يُومِئُ بِرَأْسِهِ فَلَمَّا فَرَغَ قَالَ مَا فَعَلْتَ فِي الَّذِي أَرْسَلْتُكَ لَهُ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أُكَلِّمَكَ إِلَّا أَنِّي كُنْتُ أُصَلِّي
قَالَ زُهَيْرٌ وَأَبُو الزُّبَيْرِ جَالِسٌ مُسْتَقْبِلَ الْكَعْبَةِ فَقَالَ بِيَدِهِ أَبُو الزُّبَيْرِ إِلَى بَنِي الْمُصْطَلِقِ فَقَالَ بِيَدِهِ إِلَى غَيْرِ الْكَعْبَةِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பனூ முஸ்தலிக் குலத்தாரின் இடம் நோக்கிப் பயணம் செய்தபோது, வேறொரு வேலையாக என்னை அனுப்பியிருந்தார்கள். நான் (என் வேலையை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள். பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “நான் உங்களை அனுப்பிவைத்த வேலை என்ன ஆயிற்று?” என்று கேட்டுவிட்டு, “நான் தொழுது கொண்டிருந்ததுதான் உங்களிடம் பேசமுடியாமல் என்னைத் தடுத்தது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒவ்வொரு அசைவும் நபித்தோழர்கள் வழியாக அவர்கள்தம் மாணவத் தோழர்களுக்கு அசைத்துக் காட்டப் பட்டது. வழிவழியாக அந்த அசைவுகள் அண்ணலாரை நேரில் பார்த்து, அவர்கள் கூறுவதைச் செவியுறுவதுபோலவே உள்வாங்கப்பட்டன.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, “அல்லாஹ்வின் தூதர் இவ்வாறு சைகை செய்தார்கள்” என நபித்தோழர் ஜாபிர் (ரலி) காட்டிய சைகையைப் போலவே தமது கரத்தால் “இவ்வாறு” என சைகை செய்து காட்டினார். இரண்டாவது முறை சைகையை, வாகனத்தில் இருக்கும் ஒருவர் தரையில் நிற்கும் ஒருவருக்குச் செய்யும் சைகையைப்போல் கீழ்நோக்கி சைகை செய்து காட்டினார்.
இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அறிவிக்கும்போது, இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார். அப்போது (கஅபா அல்லாத திசையான) பனூ முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்திசையை நோக்கி சைகை செய்து காட்டினார்.