அத்தியாயம்: 54, பாடம்: 12, ஹதீஸ் எண்: 5134

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ :‏

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ – قَالَ – فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم قَوْمٌ مِنْ قِبَلِ الْمَغْرِبِ عَلَيْهِمْ ثِيَابُ الصُّوفِ فَوَافَقُوهُ عِنْدَ أَكَمَةٍ فَإِنَّهُمْ لَقِيَامٌ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ – قَالَ – فَقَالَتْ لِي نَفْسِي ائْتِهِمْ فَقُمْ بَيْنَهُمْ وَبَيْنَهُ لاَ يَغْتَالُونَهُ – قَالَ – ثُمَّ قُلْتُ لَعَلَّهُ نَجِيٌّ مَعَهُمْ ‏.‏ فَأَتَيْتُهُمْ فَقُمْتُ بَيْنَهُمْ وَبَيْنَهُ – قَالَ – فَحَفِظْتُ مِنْهُ أَرْبَعَ كَلِمَاتٍ أَعُدُّهُنَّ فِي يَدِي قَالَ ‏ “‏ تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّالَ فَيَفْتَحُهُ اللَّهُ ‏”‏ ‏


قَالَ فَقَالَ نَافِعٌ يَا جَابِرُ لاَ نَرَى الدَّجَّالَ يَخْرُجُ حَتَّى تُفْتَحَ الرُّومُ ‏.‏

நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்துகொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) நின்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது என் மனம், ‘நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்று கொள். அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிடக் கூடாது‘ என்று சொன்னது. பின்னர், ‘அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதேனும் இரகசியம் பேசிக்கொண்டிருக்கலாம்‘ என்று நினைத்தேன். என்றாலும், அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன். அப்போது என் கைவிரல்களால் எண்ணிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய நான்கு விஷயங்களை மனனமிட்டுக்கொண்டேன்:

  1. நீங்கள் அரபு தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
  2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
  3. பிறகு ரோம(பைஸாந்திய)ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
  4. பிறகு நீங்கள் (மகா குழப்பவாதியான) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

அறிவிப்பாளர் : நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஜாபிர் பின் ஸமுரா (ரலி) கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் உத்பா (ரலி), “ஜாபிரே! ரோமர்கள் வெற்றி கொள்ளப்படாத வரை தஜ்ஜால் வருவான் என நாங்கள் கருதவில்லை” என்றார்கள்.