அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2508

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏قَامَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ نَاسًا أَعْمَى اللَّهُ قُلُوبَهُمْ كَمَا أَعْمَى أَبْصَارَهُمْ يُفْتُونَ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏يُعَرِّضُ بِرَجُلٍ فَنَادَاهُ فَقَالَ إِنَّكَ لَجِلْفٌ جَافٍ فَلَعَمْرِي لَقَدْ كَانَتْ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏تُفْعَلُ عَلَى عَهْدِ إِمَامِ الْمُتَّقِينَ ‏ ‏يُرِيدُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏فَجَرِّبْ بِنَفْسِكَ فَوَاللَّهِ لَئِنْ فَعَلْتَهَا لَأَرْجُمَنَّكَ بِأَحْجَارِكَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏خَالِدُ بْنُ الْمُهَاجِرِ بْنِ سَيْفِ اللَّهِ ‏ ‏أَنَّهُ بَيْنَا هُوَ جَالِسٌ عِنْدَ ‏ ‏رَجُلٍ ‏ ‏جَاءَهُ رَجُلٌ فَاسْتَفْتَاهُ فِي ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏فَأَمَرَهُ بِهَا فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيُّ ‏ ‏مَهْلًا قَالَ مَا هِيَ وَاللَّهِ لَقَدْ فُعِلَتْ فِي عَهْدِ إِمَامِ الْمُتَّقِينَ قَالَ ‏ ‏ابْنُ أَبِي عَمْرَةَ ‏ ‏إِنَّهَا كَانَتْ رُخْصَةً فِي أَوَّلِ الْإِسْلَامِ لِمَنْ اضْطُرَّ إِلَيْهَا كَالْمَيْتَةِ وَالدَّمِ وَلَحْمِ الْخِنْزِيرِ ثُمَّ أَحْكَمَ اللَّهُ الدِّينَ وَنَهَى عَنْهَا


‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏رَبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ ‏ ‏قَدْ كُنْتُ ‏ ‏اسْتَمْتَعْتُ ‏ ‏فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي عَامِرٍ ‏ ‏بِبُرْدَيْنِ أَحْمَرَيْنِ ثُمَّ ‏ ‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَسَمِعْتُ ‏ ‏رَبِيعَ بْنَ سَبْرَةَ ‏ ‏يُحَدِّثُ ذَلِكَ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏وَأَنَا جَالِسٌ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மக்காவில் (ஒருநாள் சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, “அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்; அவர்கள் அல்முத்ஆ திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்” என்று கூறி, ஒருவரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது, (விமர்சிக்கப்பட்டவர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அழைத்து, “நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் அல்முத்ஆ திருமணம் நடைமுறையில் இருந்தது” என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதைத் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர் (அல்முத்ஆ திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல் எறிந்து கொல்வேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அவர்தம் தம்பியான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்புகள் :

என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் ஸைஃபில்லாஹ் (ரஹ்), “நான் ஒருவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து, அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அவர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்ஸாரி (ரலி), “நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், “அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது (அல்முத்ஆ திருமணம்) நடைபெற்றது” என்று கூறினார்.

அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி), “அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும், செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்” என்று கூறினார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

மேலும், “நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், அல்முத்ஆ திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்” என்று ஸப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரலி) கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்) தம்மிடம் தெரிவித்தையும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

மேலும், “ரபீஉ பின் ஸப்ரா (ரஹ்) இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்” என்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

‘அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் மிகச்சில நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் தடை செய்யப்பட்டதை அறியாதவராக அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் தர்க்கித்தவர் இப்னு அப்பாஸ் (ரலி)’ என்று இமாம் நவவீ (ரஹ்) குறிப்பிடுகின்றார் – அல் மின்ஹாஜ்.

Share this Hadith: