حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ:
جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ وَهُوَ حَلِيفُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْضِعِيهِ قَالَتْ وَكَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் (ரலி) (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். ஸஹ்லா (ரலி), “அவர் (ஸாலிம்) பருவ வயதை அடைந்தவராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தவாறு, “அவர் பருவ வயதை அடைந்தவர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்புகள் :
ஸாலிம் (ரலி), அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையும் வளர்ப்பு மகனும் ஆவார். பெற்ற தந்தையான மஅகில் பெயரால் அறியப்படாமல் வளர்ப்புத் தந்தையும் காப்பாளருமான அபூஹுதைஃபா (ரலி) பெயரால், “ஸாலிம் மவ்லா அபீஹுதைஃபா” என்றே அறியப்பட்டார்.
அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் (ஸாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.
இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.