அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2742

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ: ‏

‏سُئِلْتُ عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏فِي ‏ ‏إِمْرَةِ ‏ ‏مُصْعَبٍ ‏ ‏أَيُفَرَّقُ بَيْنَهُمَا قَالَ فَمَا دَرَيْتُ مَا أَقُولُ فَمَضَيْتُ إِلَى مَنْزِلِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقُلْتُ لِلْغُلَامِ اسْتَأْذِنْ لِي قَالَ إِنَّهُ ‏ ‏قَائِلٌ ‏ ‏فَسَمِعَ صَوْتِي قَالَ ‏ ‏ابْنُ جُبَيْرٍ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ ادْخُلْ فَوَاللَّهِ مَا جَاءَ بِكَ هَذِهِ السَّاعَةَ إِلَّا حَاجَةٌ فَدَخَلْتُ فَإِذَا هُوَ مُفْتَرِشٌ ‏ ‏بَرْذَعَةً ‏ ‏مُتَوَسِّدٌ وِسَادَةً حَشْوُهَا لِيفٌ قُلْتُ ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏الْمُتَلَاعِنَانِ ‏ ‏أَيُفَرَّقُ بَيْنَهُمَا قَالَ سُبْحَانَ اللَّهِ نَعَمْ إِنَّ أَوَّلَ مَنْ سَأَلَ عَنْ ذَلِكَ فُلَانُ بْنُ فُلَانٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَرَأَيْتَ أَنْ لَوْ وَجَدَ أَحَدُنَا امْرَأَتَهُ عَلَى فَاحِشَةٍ كَيْفَ يَصْنَعُ إِنْ تَكَلَّمَ تَكَلَّمَ بِأَمْرٍ عَظِيمٍ وَإِنْ سَكَتَ سَكَتَ عَلَى مِثْلِ ذَلِكَ قَالَ فَسَكَتَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمْ يُجِبْهُ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَاهُ فَقَالَ إِنَّ الَّذِي سَأَلْتُكَ عَنْهُ قَدْ ابْتُلِيتُ بِهِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَؤُلَاءِ الْآيَاتِ فِي سُورَةِ ‏ ‏النُّورِ”وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ“ ‏

‏فَتَلَاهُنَّ عَلَيْهِ وَوَعَظَهُ وَذَكَّرَهُ وَأَخْبَرَهُ أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ قَالَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا كَذَبْتُ عَلَيْهَا ثُمَّ دَعَاهَا فَوَعَظَهَا وَذَكَّرَهَا وَأَخْبَرَهَا أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ قَالَتْ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنَّهُ لَكَاذِبٌ فَبَدَأَ بِالرَّجُلِ فَشَهِدَ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الصَّادِقِينَ وَالْخَامِسَةُ أَنَّ لَعْنَةَ اللَّهِ عَلَيْهِ إِنْ كَانَ مِنْ الْكَاذِبِينَ ثُمَّ ثَنَّى بِالْمَرْأَةِ فَشَهِدَتْ أَرْبَعَ شَهَادَاتٍ بِاللَّهِ إِنَّهُ لَمِنْ الْكَاذِبِينَ وَالْخَامِسَةُ أَنَّ غَضَبَ اللَّهِ عَلَيْهَا إِنْ كَانَ مِنْ الصَّادِقِينَ ثُمَّ فَرَّقَ بَيْنَهُمَا ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏سُئِلْتُ عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏زَمَنَ ‏ ‏مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏فَلَمْ أَدْرِ مَا أَقُولُ فَأَتَيْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏فَقُلْتُ أَرَأَيْتَ الْمُتَلَاعِنَيْنِ أَيُفَرَّقُ بَيْنَهُمَا ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ

முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆட்சிக் காலத்தில் என்னிடம் “சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பிரித்துவைக்கப்படுவார்களா? (அல்லது லிஆன் பிரமாணத்தை மொழிந்ததும் தானாக மணவிலக்கு ஏற்பட்டுவிடுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நான் (கூஃபாவிலிருந்து) புறப்பட்டு மக்காவிலிருந்த இப்னு உமர் (ரலி) இல்லத்திற்குச் சென்றேன். அவர்களுடைய பணியாளிடம், “எனக்காக (உள்ளே வர) அனுமதி கேள்” என்றேன். “அவர்கள் மதிய ஓய்வில் இருக்கிறார்கள்” என அவர் பதிலளித்தார். எனது குரலைச் செவியுற்ற இப்னு உமர் (ரலி), “இப்னு ஜுபைரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முக்கியத் தேவையொன்றுதான் உங்களை இந்த நேரத்தில் (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

நான் உள்ளே சென்றேன். அப்போது அவர்கள் ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் விரிப்பொன்றை விரித்து, பேரீச்ச நார் நிரப்பப்பட்ட ஒரு தலையணையில் சாய்ந்திருந்தார்கள். நான், “அபூஅப்திர் ரஹ்மான்! பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பிரித்து வைக்கப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) பின்வருமாறு கூறினார்கள்: ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! ஆம் (அவர்கள் லிஆன் செய்த பிறகு பிரித்துவைக்கப்படுவார்கள்); இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) முதன் முதலில் கேட்டவர் இன்னாரின் மகன் இன்னார் ஆவார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவி (அந்நிய ஆடவனுடன்) மானக்கேடான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? (அதை) அவர் (வெளியே) சொன்னால், பாரதூரமான ஒன்றை வெளிப்படுத்தியவர் ஆகிவிடுவார். மௌனமாக இருந்தாலோ, பாரதூரமான ஒன்றில் மௌனம் காத்தவராகிவிடுவாரே?” என்று கேட்டார். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் நபி (ஸல்) அமைதியாக இருந்தார்கள். அதன் பின்னர் அவர் கேட்டது (போன்றே ஒரு நிகழ்ச்சி) நடந்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் எதைப் பற்றித் தங்களிடம் கேட்டேனோ அதன் மூலம் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாம் உண்மையாளர் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்” என்று தொடங்கி, “தன்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாகவும் (கூறவேண்டும்)” (24:6-9) என்பது வரையிலான வசனங்களை அருளினான்.

அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு ஓதிக் காட்டி அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனைகளை) நினைவூட்டினார்கள்; “இம்மையின் தண்டனை, மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அவர் “இல்லை; தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லவில்லை” என்றார்.

பிறகு நபி (ஸல்) அப்பெண்ணை அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனையை) நினைவூட்டினார்கள்; “இம்மையின் தண்டனை, மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அப்பெண், “தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் பொய்யர்” என்று கூறினாள். எனவே, முதலில் அந்த ஆணிடமிருந்து (சுய சாபம் வேண்டும் பிரமாணத்தை) நபியவர்கள் ஆரம்பித்தார்கள். அவர் (தமது குற்றச்சாட்டில்) தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான்கு முறை உறுதிமொழிந்தார். ஐந்தாவது முறையில், (தனது குற்றச்சாட்டில்) தான் பொய்யராக இருந்தால் “அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும்” என்று கூறினார்.

இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்தார்கள். அவள் (தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) “அவர் பொய்யர் ஆவார்” என நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உறுதிமொழிந்தாள். ஐந்தாவதாக “அவர் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளராக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” என்று கூறினாள். பிறகு இருவரையும் நபி (ஸல்) பிரித்துவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


குறிப்பு :

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்ட தம்பதியர் பற்றி முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) (ஆட்சிக்) காலத்தில் என்னிடம் வினவப்பட்டது. அதற்கு என்ன பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை …” என ஹதீஸ் தொடங்குகிறது.

Share this Hadith: