حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ: لِمَرْوَانَ أَحْلَلْتَ بَيْعَ الرِّبَا فَقَالَ مَرْوَانُ مَا فَعَلْتُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَحْلَلْتَ بَيْعَ الصِّكَاكِ وَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الطَّعَامِ حَتَّى يُسْتَوْفَى
قَالَ فَخَطَبَ مَرْوَانُ النَّاسَ فَنَهَى عَنْ بَيْعِهَا قَالَ سُلَيْمَانُ فَنَظَرْتُ إِلَى حَرَسٍ يَأْخُذُونَهَا مِنْ أَيْدِي النَّاسِ
அபூஹுரைரா (ரலி), மர்வான் பின் அல்ஹகமிடம், “வட்டித் தொழிலுக்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மர்வான், “இல்லையே!“ என்றார். அதற்கு அபூஹுரைரா (ரலி), “உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகளை (அரசு ஊழியர்கள் பிறருக்கு) விற்பதற்கு அனுமதியளித்துவிட்டீர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உணவு தானியம் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவரிடம்) விற்பதற்குத் தடை விதித்துள்ளார்களே!” என்று கூறினார்கள். பின்னர் மர்வான் மக்களுக்கு உரையாற்றுகையில், உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டையை விற்பதற்குத் தடை விதித்தார்.
உடனே காவலர்கள் மக்களின் கரங்களிலிருந்து அந்த உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகளைப் பறித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)
குறிப்பு :
இறைத் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்கும் கலீஃபாக்கள் நால்வரின் மறைவிற்குப் பின்னரும் ஆட்சிக்கு வந்த உமையா வம்சத்தின் மர்வான் (ரஹ்) காலத்தில் (ஹி 65) அரசு ஊழியர்களுக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கும் உணவுப் பொருள் பங்கீட்டு அடையாள அட்டைகள் அரசால் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் தமக்கான அட்டைகளை மக்களிடம் விற்கத் தலைப்பட்டனர் என்றும் ரேஷன் கார்டு ஸிஸ்டம், 1380 ஆண்டுகளுக்கு முன்னர் (ஹிஜ்ரீ 65இல்) முஸ்லிம் ஆட்சியாளர்களால் அரபு நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது.