அத்தியாயம்: 53, பாடம்: 17, ஹதீஸ் எண்: 5093

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ الْهُذَلِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، قَالَ قَالَ أَنَسٌ كُنْتُ مَعَ عُمَرَ ح وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

كُنَّا مَعَ عُمَرَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَتَرَاءَيْنَا الْهِلاَلَ وَكُنْتُ رَجُلاً حَدِيدَ الْبَصَرِ فَرَأَيْتُهُ وَلَيْسَ أَحَدٌ يَزْعُمُ أَنَّهُ رَآهُ غَيْرِي – قَالَ – فَجَعَلْتُ أَقُولُ لِعُمَرَ أَمَا تَرَاهُ فَجَعَلَ لاَ يَرَاهُ – قَالَ – يَقُولُ عُمَرُ سَأَرَاهُ وَأَنَا مُسْتَلْقٍ عَلَى فِرَاشِي ‏.‏ ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا عَنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُرِينَا مَصَارِعَ أَهْلِ بَدْرِ بِالأَمْسِ يَقُولُ ‏”‏ هَذَا مَصْرَعُ فُلاَنٍ غَدًا إِنْ شَاءَ اللَّهُ ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا أَخْطَئُوا الْحُدُودَ الَّتِي حَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم – قَالَ – فَجُعِلُوا فِي بِئْرٍ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَهَى إِلَيْهِمْ فَقَالَ ‏”‏ يَا فُلاَنَ بْنَ فُلاَنٍ وَيَا فُلاَنَ بْنَ فُلاَنٍ هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمُ اللَّهُ وَرَسُولُهُ حَقًّا فَإِنِّي قَدْ وَجَدْتُ مَا وَعَدَنِيَ اللَّهُ حَقًّا ‏”‏ ‏.‏ قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُكَلِّمُ أَجْسَادًا لاَ أَرْوَاحَ فِيهَا قَالَ ‏”‏ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ أَنْ يَرُدُّوا عَلَىَّ شَيْئًا ‏”‏

நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தின்போது) மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே (ஓரிடத்தில்) இருந்தோம். அப்போது (வானில்) பிறை தென்படுகிறதா என நாங்கள் பார்த்தோம். நான் கூர்மையான பார்வையுடையவனாக இருந்தேன். எனவே, நான் பிறையைப் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர பிறையைப் பார்த்ததாகக் கூற வேறெவரும் இருக்கவில்லை. அப்போது நான் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன். அதைத் தாம் பார்க்கவில்லை என அவர்கள் கூறினார்கள். “நான் எனது படுக்கையில் இருக்கும்போது அதைப் பார்ப்பேன்” என்றும் கூறலானார்கள். பிறகு உமர் (ரலி) பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள்.

பத்ருப் போருக்கு முந்தைய நாள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். “அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்” என்று குறிப்பிட்டார்கள். சத்திய(மாக்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் ஒவ்வொருவரும் மாண்டு கிடந்தனர்.

பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கிணற்றில் ஒருவர்பின் ஒருவராகப் போடப்பட்டனர். பிறகு அவர்க(ளின் சடலங்க)ளை நோக்கிச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (அவற்றைப் பார்த்து), “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா? ஏனெனில், அல்லாஹ் எனக்கு வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டுகொண்டேன்” என்று கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் எப்படிப் பேசுகின்றீர்கள்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் எனக்குப் பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith: