حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُصُّ يَقُولُ فِي قَصَصِهِ مَنْ أَدْرَكَهُ الْفَجْرُ جُنُبًا فَلَا يَصُمْ فَذَكَرْتُ ذَلِكَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ لِأَبِيهِ فَأَنْكَرَ ذَلِكَ فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ وَانْطَلَقْتُ مَعَهُ حَتَّى دَخَلْنَا عَلَى عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَسَأَلَهُمَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ ذَلِكَ قَالَ فَكِلْتَاهُمَا قَالَتْ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ حُلُمٍ ثُمَّ يَصُومُ
قَالَ فَانْطَلَقْنَا حَتَّى دَخَلْنَا عَلَى مَرْوَانَ فَذَكَرَ ذَلِكَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ فَقَالَ مَرْوَانُ عَزَمْتُ عَلَيْكَ إِلَّا مَا ذَهَبْتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَرَدَدْتَ عَلَيْهِ مَا يَقُولُ قَالَ فَجِئْنَا أَبَا هُرَيْرَةَ وَأَبُو بَكْرٍ حَاضِرُ ذَلِكَ كُلِّهِ قَالَ فَذَكَرَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَهُمَا قَالَتَاهُ لَكَ قَالَ نَعَمْ قَالَ هُمَا أَعْلَمُ ثُمَّ رَدَّ أَبُو هُرَيْرَةَ مَا كَانَ يَقُولُ فِي ذَلِكَ إِلَى الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ ذَلِكَ مِنْ الْفَضْلِ وَلَمْ أَسْمَعْهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَرَجَعَ أَبُو هُرَيْرَةَ عَمَّا كَانَ يَقُولُ فِي ذَلِكَ قُلْتُ لِعَبْدِ الْمَلِكِ أَقَالَتَا فِي رَمَضَانَ قَالَ كَذَلِكَ كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ حُلُمٍ ثُمَّ يَصُومُ
அபூஹுரைரா (ரலி), “பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவருக்கு நோன்பு இல்லை (அது செல்லாது)” என்று அறிவிப்பதை நான் செவியுற்றேன். இதை (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் அவர்களிடம் சொன்னேன். அதை அவர்கள் மறுத்தார்கள். பின்னர் (நபியவர்களின் துணைவியரான) ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகியோரின் இல்லம் நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். அவ்விருவரிடம் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அதைப் பற்றி அவர்களிடம் என் தந்தை கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “நபி (ஸல்) உறக்க ஸ்கலிதத்தினால் அல்லாமல் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்” என்று கூறினர்.
எனவே, நாங்கள் இருவரும் (மதீனாவின் ஆட்சியராயிருந்த) மர்வான் பின் அல்ஹகமிடம் சென்றோம். அபூஹுரைரா (ரலி) அறிவித்துவந்த விஷயத்தையும் அதற்கு மாறாக ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான், மர்வான் பின் அல்ஹகமிடம் எடுத்துரைத்தார்கள். உடனே மர்வான், “நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று, அவர் அறிவித்துவருவதற்கு மறுப்புத் தெரிவித்துத்தான் ஆகவேண்டும்” என்று கூறினார். அவ்வாறே நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். இந்த நிகழ்ச்சி முழுவதிலும் நானும் அங்கிருந்தேன். நடந்தவற்றை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் கூறினார்கள். இதைக் கேட்ட அபூஹுரைரா (ரலி), “(ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸலமா (ரலி) ஆகிய) அவ்விருவருமா உம்மிடம் இவ்வாறு கூறினார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தை) அப்துர் ரஹ்மான், “ஆம்” என்றார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அவர்கள் இருவரும் (இது குறித்து என்னைவிட) நன்கறிந்தவர்கள்” என்று சொன்னார்கள்.
பின்னர் அபூஹுரைரா (ரலி) தாம் இதுவரை ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறியதையே அறிவித்துவந்ததாகக் கூறிவிட்டு, “இதை நான் ஃபள்லிடமிருந்தே செவியுற்றேன்; (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை” என்று சொன்னார்கள். பின்னர் இது தொடர்பாகத் தாம் கூறிவந்த கருத்தை அபூஹுரைரா (ரலி) திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)
குறிப்பு : நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அப்துல் மலிக் பின் அபீபக்ரு (ரஹ்) அவர்களிடம், “ரமளான் மாதத்தில் (நபி (ஸல்) அவ்வாறு செய்ததாக) ஆயிஷாவும் உம்மு ஸலமாவும் கூறினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம்) அவ்வாறுதான். நபி (ஸல்) உறக்க ஸ்கலிதத்தினால் அல்லாமல் குளிப்புக் கடமையான நிலையில் வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பைத் தொடருவார்கள் என்று கூறினர்” என்றார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகின்றார்.