قَالَتْ زَيْنَبُ سَمِعْتُ أُمِّي أُمَّ سَلَمَةَ تَقُولُ:
جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدْ اشْتَكَتْ عَيْنُهَا أَفَنَكْحُلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا كُلَّ ذَلِكَ يَقُولُ لَا ثُمَّ قَالَ إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ
قَالَ حُمَيْدٌ قُلْتُ لِزَيْنَبَ
وَمَا تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ فَقَالَتْ زَيْنَبُ كَانَتْ الْمَرْأَةُ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا دَخَلَتْ حِفْشًا وَلَبِسَتْ شَرَّ ثِيَابِهَا وَلَمْ تَمَسَّ طِيبًا وَلَا شَيْئًا حَتَّى تَمُرَّ بِهَا سَنَةٌ ثُمَّ تُؤْتَى بِدَابَّةٍ حِمَارٍ أَوْ شَاةٍ أَوْ طَيْرٍ فَتَفْتَضُّ بِهِ فَقَلَّمَا تَفْتَضُّ بِشَيْءٍ إِلَّا مَاتَ ثُمَّ تَخْرُجُ فَتُعْطَى بَعْرَةً فَتَرْمِي بِهَا ثُمَّ تُرَاجِعُ بَعْدُ مَا شَاءَتْ مِنْ طِيبٍ أَوْ غَيْرِهِ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘வேண்டாம்’ என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் ‘வேண்டாம்’ என்றே கூறினார்கள். பிறகு, ‘(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) ‘இத்தா’க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்கள் மட்டுமே. (ஆனால்,) அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்) ஆண்டின் முடிவில் (‘இத்தா’ நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லை)’ என்றார்கள்” என என் தாயார் உம்மு ஸலமா (ரலி) கூறக் கேட்டுள்ளேன்.
அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி)
குறிப்பு :
ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) கூறியதாவது:
நான் ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி) அவர்களிடம், “ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் (அதன் பொருள்) என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்துகொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். இதுவே (அறியாமைக் காலத்தில்) ‘இத்தா’ முடிந்ததற்கு அடையாளமாகும். பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.