அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4493

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ‏”‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏”‏ ‏.‏ قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ‏”‏ اللَّهُ سَمَّاكَ لِي ‏”‏ ‏.‏ قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களுக்கு (குர்ஆனின் 98ஆவது அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று சொன்னார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி), “அல்லாஹ், என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்;) அல்லாஹ்தான் உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4492

حَدَّثَنِي أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ :‏

قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ مَنْ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا زَيْدٍ ‏

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யாவர்?” என்று கேட்டேன்.

“அவர்கள் நால்வர்: 1. உபை பின் கஅப். 2. முஆத் பின் ஜபல். 3. ஸைத் பின் ஸாபித். 4. அன்ஸாரிகளில் ஸைத் எனப்படும் ஒருவர்” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4491

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ :‏

سَمِعْتُ أَنَسًا يَقُولُ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُو زَيْدٍ ‏.‏ قَالَ قَتَادَةُ قُلْتُ لأَنَسٍ مَنْ أَبُو زَيْدٍ قَالَ أَحَدُ عُمُومَتِي ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்ஸாரிகள் ஆவர். 1. முஆத் பின் ஜபல் 2. உபை பின் கஅப் 3. ஸைத் பின் ஸாபித் 4. அபூஸைத் (ரலி) ஆகியோர்தான் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அபூஸைத் என்பவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4490

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ قَالَ :‏

ذَكَرُوا ابْنَ مَسْعُودٍ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنِ ابْنِ مَسْعُودٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ ‏”‏ ‏


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ قَالَ شُعْبَةُ بَدَأَ بِهَذَيْنِ لاَ أَدْرِي بِأَيِّهِمَا بَدَأَ ‏

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களுக்கு அருகில் மக்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “அவர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின்  தூதர் (ஸல்), இப்னு மஸ்ஊத், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான ஸாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என்றென்றும் அவரை நேசிக்கலானேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக  மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், இறுதியில் சொல்லப்பட்ட இருவரையும் அம்ரு பின் முர்ரா (ரஹ்) முதலில் குறிப்பிட்டார்கள். “அவ்விருவரில் முதலில் யாரைக் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்று ஷுஅபா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4489

 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالُوا حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ :‏

كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَذَكَرْنَا حَدِيثًا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، فَقَالَ إِنَّ ذَاكَ الرَّجُلَ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ سَمِعْتُهُ يَقُولُ ‏ “‏ اقْرَءُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةِ نَفَرٍ مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ – فَبَدَأَ بِهِ – وَمِنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَمِنْ سَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَمِنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ‏”‏ ‏.‏ وَحَرْفٌ لَمْ يَذْكُرْهُ زُهَيْرٌ قَوْلُهُ يَقُولُهُ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِ جَرِيرٍ وَوَكِيعٍ فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَدَّمَ مُعَاذًا قَبْلَ أُبَىٍّ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ أُبَىٌّ قَبْلَ مُعَاذٍ

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِهِمْ وَاخْتَلَفَا عَنْ شُعْبَةَ، فِي تَنْسِيقِ الأَرْبَعَةِ

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அருகில் (ஒரு நாள்) இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “அவர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு அப்தின் மகன் (இப்னு மஸ்ஊத்), உபை பின் கஅப், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான ஸாலிம், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, இப்னு மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதை நான் கேட்டேன். அப்போதிருந்து அவரை என்றென்றும் நேசித்துக் கொண்டிருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக  மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், உபை பின் கஅபுக்கு முன் முஆத் பின் ஜபல் பெயர் இடம்பெற்றுள்ளது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், முஆத் பின் ஜபல் அவர்களுக்குமுன் உபை பின் கஅப் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.

இப்னு அபீஅதீ (ரஹ்), முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்புகளில் அந்நால்வரை ஷுஅபா (ரஹ்), வரிசைப்படுத்திக் கூறியது தொடர்பாக வித்தியாசமாக அறிவித்துள்ளனர்.

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4488

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ :‏

كُنَّا نَأْتِي عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو فَنَتَحَدَّثُ إِلَيْهِ – وَقَالَ ابْنُ نُمَيْرٍ عِنْدَهُ – فَذَكَرْنَا يَوْمًا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ لَقَدْ ذَكَرْتُمْ رَجُلاً لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ – فَبَدَأَ بِهِ – وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ ‏”‏ ‏

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் சென்று அவர்களுடன்  -அல்லது – அவர்களுக்கு அருகில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

ஒரு நாள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினோம். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “நீங்கள் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். (அவர் எத்தகையவரென்றால்,) அல்லாஹ்வின்  தூதர் (ஸல்), (1) “உம்மு அப்தின் மகன்  (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்), (2) முஆத் பின் ஜபல், (3) உபை பின் கஅப், (4) அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான ஸாலிம் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்“ என்று சொல்லும்போது, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களையே முதலாவதாகக் குறிப்பிட்டர்கள். நான் அதைக் கேட்ட பிறகு அவரை என்றென்றும் நேசித்துக்கொண்டிருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4487

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا قُطْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ مَا مِنْ كِتَابِ اللَّهِ سُورَةٌ إِلاَّ أَنَا أَعْلَمُ حَيْثُ نَزَلَتْ وَمَا مِنْ آيَةٍ إِلاَّ أَنَا أَعْلَمُ فِيمَا أُنْزِلَتْ وَلَوْ أَعْلَمُ أَحَدًا هُوَ أَعْلَمُ بِكِتَابِ اللَّهِ مِنِّي تَبْلُغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ

எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணை! அல்லாஹ்வின் வேதத்திலுள்ள ஒவ்வோர் அத்தியாயமும் எங்கே அருளப்பெற்றது என்பதை நான் நன்கு அறிவேன்; ஒவ்வொரு வசனமும் எது தொடர்பாக அருளப்பெற்றது என்பதையும் நான் நன்கு அறிவேன்.

என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர் யாரேனும், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால், நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டுவிடுவேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4486

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ: ‏

‏{‏ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ‏}‏ ثُمَّ قَالَ عَلَى قِرَاءَةِ مَنْ تَأْمُرُونِي أَنْ أَقْرَأَ فَلَقَدْ قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِضْعًا وَسَبْعِينَ سُورَةً وَلَقَدْ عَلِمَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَعْلَمُهُمْ بِكِتَابِ اللَّهِ وَلَوْ أَعْلَمُ أَنَّ أَحَدًا أَعْلَمُ مِنِّي لَرَحَلْتُ إِلَيْهِ ‏.‏ قَالَ شَقِيقٌ فَجَلَسْتُ فِي حَلَقِ أَصْحَابِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَمَا سَمِعْتُ أَحَدًا يَرُدُّ ذَلِكَ عَلَيْهِ وَلاَ يَعِيبُهُ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “(உலகில்) மோசடி செய்கின்றவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்” எனும் (3:161) இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, “யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகின்றீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும்) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்” என்று கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4485

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا قُطْبَةُ، هُوَ ابْنُ عَبْدِ الْعَزِيزِ عَنِ الأَعْمَشِ، عَنْ مَالِكِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي الأَحْوَصِ قَالَ :‏

كُنَّا فِي دَارِ أَبِي مُوسَى مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ عَبْدِ اللَّهِ وَهُمْ يَنْظُرُونَ فِي مُصْحَفٍ فَقَامَ عَبْدُ اللَّهِ فَقَالَ أَبُو مَسْعُودٍ مَا أَعْلَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ بَعْدَهُ أَعْلَمَ بِمَا أَنْزَلَ اللَّهُ مِنْ هَذَا الْقَائِمِ ‏.‏ فَقَالَ أَبُو مُوسَى أَمَا لَئِنْ قُلْتَ ذَاكَ لَقَدْ كَانَ يَشْهَدُ إِذَا غِبْنَا وَيُؤْذَنُ لَهُ إِذَا حُجِبْنَا ‏‏


وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، – هُوَ ابْنُ مُوسَى – عَنْ شَيْبَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مَالِكِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي الأَحْوَصِ، قَالَ أَتَيْتُ أَبَا مُوسَى فَوَجَدْتُ عَبْدَ اللَّهِ وَأَبَا مُوسَى ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ حُذَيْفَةَ وَأَبِي مُوسَى وَسَاقَ الْحَدِيثَ وَحَدِيثُ قُطْبَةَ أَتَمُّ وَأَكْثَرُ ‏

நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் சிலருடன் அபூமூஸா (ரலி) அவர்களுடைய இல்லத்தில் இருந்தோம். அப்போது அம்மாணவர்கள் (இப்னு மஸ்ஊத் (ரலி) நபி (ஸல்) அவர்களிமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) குர்ஆன் பிரதியொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) எழுந்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமக்குப்பின் இதோ நிற்கிறாரே இவரைவிட, அல்லாஹ் இறக்கிய(வேதத்)தை நன்கு அறிந்த ஒருவரை விட்டுச்செல்லவில்லை” என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி), “நீங்கள் இவ்வாறு கூறினால், அது சரிதான். (ஏனெனில்,) நாம் (நபியவர்களுடன்) இல்லாதபோது இவர் (நபியவர்களுடன்) இருந்துவந்தார். நாம் திரையிடப்பட்டு (நபியின் இல்லத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது இவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அபுல் அஹ்வஸ் (ரஹ்)


குறிப்பு :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அபூமூஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அங்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகிய இருவரையும் கண்டேன்…” என்று காணப்படுகிறது.

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் ஹுதைஃபா (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன் …” என்று ஸைத் பின் வஹ்பு (ரஹ்) கூறியதாக ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், முந்தைய ஹதீஸே கூடுதல் தகவல் உள்ளதும் முழுமையானதுமாகும்.

அத்தியாயம்: 44, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4484

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَبَا الأَحْوَصِ قَالَ :‏

شَهِدْتُ أَبَا مُوسَى وَأَبَا مَسْعُودٍ حِينَ مَاتَ ابْنُ مَسْعُودٍ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ أَتُرَاهُ تَرَكَ بَعْدَهُ مِثْلَهُ فَقَالَ إِنْ قُلْتَ ذَاكَ إِنْ كَانَ لَيُؤْذَنُ لَهُ إِذَا حُجِبْنَا وَيَشْهَدُ إِذَا غِبْنَا ‏

இப்னு மஸ்ஊத் (ரலி) இறந்தபோது, நான் அபூமூஸா (ரலி), அபூமஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம், “இப்னு மஸ்ஊத் (ரலி) தமக்குப்பின் தம்மைப் போன்ற ஒருவரை விட்டுச்சென்றுள்ளார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு மற்றவர், “அவ்வாறு (யாரையும் அவர் விட்டுச்செல்லவில்லை என்று) நீங்கள் சொன்னால், (அது தவறாகாது. ஏனெனில்,) நாம் திரையிடப்பட்டு (நபியவர்களின் இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது, அவர் (மட்டுமே) உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தார். நாம் வெளியூரிலிருந்தபோது அவர் (உள்ளூரில் நபியவர்களுக்கு) அருகில் இருந்தார்” என்று சொன்னார்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அபுல்அஹ்வஸ்


குறிப்பு :

அறிவிப்பாளர் அபுல் அஹ்வஸ் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அவ்ஃபு பின் மாலிக்  (ரஹ்) என்பதாகும்.