அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3156

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، – وَهُوَ ابْنُ سَعِيدٍ – عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ – قَالَ يَحْيَى وَحَسِبْتُ قَالَ – وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُمَا قَالاَ:‏

خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا هُنَالِكَ ثُمَّ إِذَا مُحَيِّصَةُ يَجِدُ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَتِيلاً فَدَفَنَهُ ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ قَبْلَ صَاحِبَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”كَبِّر‏”‏ ‏.‏ الْكُبْرَ فِي السِّنِّ فَصَمَتَ فَتَكَلَّمَ صَاحِبَاهُ وَتَكَلَّمَ مَعَهُمَا فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَقْتَلَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ فَقَالَ لَهُمْ ‏”أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا فَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ‏”‏ ‏ أَوْ ‏”قَاتِلَكُمْ‏”‏ ‏‏ قَالُوا وَكَيْفَ نَحْلِفُ وَلَمْ نَشْهَدْ قَالَ ‏”‏فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا‏”‏ قَالُوا وَكَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى عَقْلَهُ ‏.‏

அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) பயணம் சென்றபோது, கைபரில் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் (அவருடைய சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) வயதில் சிறியவராக இருந்தார். அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) தம்முடன் வந்த(வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச முனைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பெரியவர்களைப் பேசவிடு” என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசினார்கள்.

அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அப்துல்லாஹ் பின் ஸஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் (உயிரிழந்த) உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை, அல்லது உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை எடுத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “நாங்கள் (கொலை நடந்த இடத்தில்)  இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (‘நாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை’ என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?” என்று கேட்டார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) & ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

Share this Hadith: