அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3335

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَأَحْمَدُ بْنُ جَنَابٍ الْمِصِّيصِيُّ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ :‏

لَمَّا أُحْصِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ الْبَيْتِ صَالَحَهُ أَهْلُ مَكَّةَ عَلَى أَنْ يَدْخُلَهَا فَيُقِيمَ بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلَهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ السَّيْفِ وَقِرَابِهِ ‏.‏ وَلاَ يَخْرُجَ بِأَحَدٍ مَعَهُ مِنْ أَهْلِهَا وَلاَ يَمْنَعَ أَحَدًا يَمْكُثُ بِهَا مِمَّنْ كَانَ مَعَهُ ‏.‏ قَالَ لِعَلِيٍّ ‏”‏ اكْتُبِ الشَّرْطَ بَيْنَنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الْمُشْرِكُونَ لَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ تَابَعْنَاكَ وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏.‏ فَأَمَرَ عَلِيًّا أَنْ يَمْحَاهَا فَقَالَ عَلِيٌّ لاَ وَاللَّهِ لاَ أَمْحَاهَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَرِنِي مَكَانَهَا ‏”‏ ‏.‏ فَأَرَاهُ مَكَانَهَا فَمَحَاهَا وَكَتَبَ ‏”‏ ابْنُ عَبْدِ اللَّهِ ‏”‏ ‏.‏ فَأَقَامَ بِهَا ثَلاَثَةَ أَيَّامٍ فَلَمَّا أَنْ كَانَ يَوْمُ الثَّالِثِ قَالُوا لِعَلِيٍّ هَذَا آخِرُ يَوْمٍ مِنْ شَرْطِ صَاحِبِكَ فَأْمُرْهُ فَلْيَخْرُجْ ‏.‏ فَأَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ فَخَرَجَ ‏.‏ وَقَالَ ابْنُ جَنَابٍ فِي رِوَايَتِهِ مَكَانَ تَابَعْنَاكَ بَايَعْنَاكَ

நபி (ஸல்) இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, ‘முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக் கூடாது’ ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.

நபி (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம், “நமக்கிடையிலான சமாதான உடன்படிக்கையின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:

“அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதிக்கொண்ட உடன்படிக்கைப் பத்திரம்..” என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், “நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்பற்றி இருப்போமே! மாறாக, அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி), “மாட்டேன், அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை (தமது கரத்தால்) அழித்துவிட்டார்கள். மேலும், ‘அப்துல்லாஹ்வின் மகன்’ என்று எழுதச் செய்தார்கள்.

(அடுத்த ஆண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாவது நாளானபோது மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம், “உம்முடைய தோழர் நிபந்தனையில் குறிப்பிட்டிருந்த இறுதிநாள் இதுதான். எனவே, அவரை இந்நகரைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்” என்று கூறினர். அலீ (ரலி) இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது “ஆம்“ என்று கூறி விட்டு நபி (ஸல்) புறப்பட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

அஹ்மது பின் ஜனாப் அல் மிஸ்ஸீஸீ (ரஹ்) வழி அறிவிப்பில், (“உம்மை நாங்கள் பின்பற்றி இருப்போமே!’ என்பதற்குப் பகரமாக) “நாங்கள் (இஸ்லாத்தை ஏற்பதாக) உம்மிடம் உறுதிமொழி அளித்திருப்போமே!“ என்று (மக்காவாசிகள் கூறினார்கள் என) இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: