அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4527

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ حَسَّانُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِي أَبِي سُفْيَانَ قَالَ ‏ “‏ كَيْفَ بِقَرَابَتِي مِنْهُ ‏”‏ ‏.‏ قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْخَمِيرِ ‏.‏ فَقَالَ حَسَّانُ وَإِنَّ سَنَامَ الْمَجْدِ مِنْ آلِ هَاشِمٍ بَنُو بِنْتِ مَخْزُومٍ وَوَالِدُكَ الْعَبْدُ قَصِيدَتَهُ هَذِهِ


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَبَا سُفْيَانَ وَقَالَ بَدَلَ الْخَمِيرِ الْعَجِينِ ‏.‏

ஹஸ்ஸான் (ரலி), (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அபூஸுஃப்யானுக்கு எதிராக (அவருடைய வசைக் கவிகளுக்குப் பதிலடி கொடுக்க) எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்), “(அவரோடு பின்னிக்கிடக்கும்) என்னுடைய வமிசாவளியை அவரிடமிருந்து எப்படி(பிரித்து)ப் பாடுவீர்?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), “உங்களை மேன்மைப்படுத்தியுள்ள(இறை)வன் மீதாணையாக! (அவர்களைப் பற்றி நான் எதிர்க் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்கள்.

“ஹாஷிம் கிளையின்
மக்ஸூம் குலமகளின் மக்களுக்கே
மேன்மையின் சிகரம் உரியது.
ஆனால்,
(அபூஸுஃப்யானே!) உமது தந்தை,
(அப்து மனாஃபின்)
அடிமையாவார்”

என்பதே அவரது அந்தக் கவிதையாகும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்தது (ரஹ்) வழி அறிவிப்பு, “ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (குறைஷி) இணைவைப்பாளர்களைத் தாக்கி (எதிர்க் கவி) பாட அனுமதி கேட்டார்கள்” என்றே ஆரம்பமாகிறது. “அபூஸுஃப்யானுக்கெதிராக” எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4526

حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ قَالَ :‏

دَخَلْتُ عَلَى عَائِشَةَ وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ فَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ فَقَالَتْ لَهُ عَائِشَةُ لَكِنَّكَ لَسْتَ كَذَلِكَ ‏.‏ قَالَ مَسْرُوقٌ فَقُلْتُ لَهَا لِمَ تَأْذَنِينَ لَهُ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ قَالَ اللَّهُ ‏{‏ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ‏}‏ فَقَالَتْ فَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى إِنَّهُ كَانَ يُنَافِحُ أَوْ يُهَاجِي عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

حَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ وَقَالَ قَالَتْ كَانَ يَذُبُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ حَصَانٌ رَزَانٌ ‏.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு முறை) சென்றபோது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷா (ரலி) அவர்களைப்) பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள்.

“நீங்கள் பத்தினி;
அறிவாளி;
சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.
(அவதூறு பேசுவதன்மூலம்)
பேதைப் பெண்களின்
மாமிசங்களைப் புசித்துவிடாமல்
பட்டினியோடு காலையில் எழுபவர்”

என்று ஹஸ்ஸான் (ரலி) (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து) கவிதை பாடினார்கள்.

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி), “ஆனாலும், நீங்கள் அப்படியல்லவே? (என்னைப் பற்றி அவதூறு பேசியவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்)” என்று கூறினார்கள்.

அப்போது நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இவரை உங்கள் இல்லத்துக்கு வர ஏன் அனுமதிக்கின்றீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்) ‘அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்குக் கடினமான வேதனையுண்டு’ (24:11) எனக் கூறுகின்றானே?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), “பார்வையை, கண் இழப்பதைவிடக் கொடிய வேதனை ஏது?” என்று கூறிவிட்டு, “அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சார்பாக (எதிரிகளைத் தாக்கி) பதில் கவி / வசைக்கவி பாடுபவராக இருந்தார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ நீங்கள் பத்தினி; அறிவாளி… என்று தொடங்கும் கவிதை இடம்பெறவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (கவிதையால்) பதிலடி கொடுக்கக் கூடியவராக இருந்தார்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4528

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ اهْجُوا قُرَيْشًا فَإِنَّهُ أَشَدُّ عَلَيْهَا مِنْ رَشْقٍ بِالنَّبْلِ ‏”‏‏.‏ فَأَرْسَلَ إِلَى ابْنِ رَوَاحَةَ فَقَالَ ‏”‏ اهْجُهُمْ ‏”‏ ‏.‏ فَهَجَاهُمْ فَلَمْ يُرْضِ فَأَرْسَلَ إِلَى كَعْبِ بْنِ مَالِكٍ ثُمَّ أَرْسَلَ إِلَى حَسَّانَ بْنِ ثَابِتٍ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ حَسَّانُ قَدْ آنَ لَكُمْ أَنْ تُرْسِلُوا إِلَى هَذَا الأَسَدِ الضَّارِبِ بِذَنَبِهِ ثُمَّ أَدْلَعَ لِسَانَهُ فَجَعَلَ يُحَرِّكُهُ فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَفْرِيَنَّهُمْ بِلِسَانِي فَرْىَ الأَدِيمِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تَعْجَلْ فَإِنَّ أَبَا بَكْرٍ أَعْلَمُ قُرَيْشٍ بِأَنْسَابِهَا – وَإِنَّ لِي فِيهِمْ نَسَبًا – حَتَّى يُلَخِّصَ لَكَ نَسَبِي ‏”‏ ‏.‏ فَأَتَاهُ حَسَّانُ ثُمَّ رَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ لَخَّصَ لِي نَسَبَكَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَسَّانَ ‏”‏ إِنَّ رُوحَ الْقُدُسِ لاَ يَزَالُ يُؤَيِّدُكَ مَا نَافَحْتَ عَنِ اللَّهِ وَرَسُولِهِ ‏”‏ ‏.‏ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ هَجَاهُمْ حَسَّانُ فَشَفَى وَاشْتَفَى ‏”‏ ‏.‏ قَالَ حَسَّانُ هَجَوْتَ مُحَمَّدًا فَأَجَبْتُ عَنْهُ وَعِنْدَ اللَّهِ فِي ذَاكَ الْجَزَاءُ هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا تَقِيًّا رَسُولَ اللَّهِ شِيمَتُهُ الْوَفَاءُ فَإِنَّ أَبِي وَوَالِدَهُ وَعِرْضِي لِعِرْضِ مُحَمَّدٍ مِنْكُمْ وِقَاءُ ثَكِلْتُ بُنَيَّتِي إِنْ لَمْ تَرَوْهَا تُثِيرُ النَّقْعَ مِنْ كَنَفَىْ كَدَاءِ يُبَارِينَ الأَعِنَّةَ مُصْعِدَاتٍ عَلَى أَكْتَافِهَا الأَسَلُ الظِّمَاءُ تَظَلُّ جِيَادُنَا مُتَمَطِّرَاتٍ تُلَطِّمُهُنَّ بِالْخُمُرِ النِّسَاءُ فَإِنْ أَعْرَضْتُمُو عَنَّا اعْتَمَرْنَا وَكَانَ الْفَتْحُ وَانْكَشَفَ الْغِطَاءُ وَإِلاَّ فَاصْبِرُوا لِضِرَابِ يَوْمٍ يُعِزُّ اللَّهُ فِيهِ مَنْ يَشَاءُ وَقَالَ اللَّهُ قَدْ أَرْسَلْتُ عَبْدًا يَقُولُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ وَقَالَ اللَّهُ قَدْ يَسَّرْتُ جُنْدًا هُمُ الأَنْصَارُ عُرْضَتُهَا اللِّقَاءُ لَنَا فِي كُلِّ يَوْمٍ مِنْ مَعَدٍّ سِبَابٌ أَوْ قِتَالٌ أَوْ هِجَاءُ فَمَنْ يَهْجُو رَسُولَ اللَّهِ مِنْكُمْ وَيَمْدَحُهُ وَيَنْصُرُهُ سَوَاءُ وَجِبْرِيلٌ رَسُولُ اللَّهِ فِينَا وَرُوحُ الْقُدْسِ لَيْسَ لَهُ كِفَاءُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஹுதைபியா பயணத்தின்போது) “குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடுங்கள். ஏனெனில், அது ஈட்டியைவிட பலமாக அவர்களைத் தாக்கக்கூடியதாகும்” என்று கூறினார்கள். “அவர்களுக்கெதிராக வசைக்கவி பாடுங்கள்” என்று அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களுக்குக் கூறியனுப்பினார்கள். அவ்வாறே, அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடினார்கள். ஆனால், அது நபியவர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. எனவே, கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள்.

பிறகு ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) வந்தபோது, “தனது வாலை(ச் சுழற்றி) அடிக்கும் இந்தச் சிங்கத்திடம் ஆளனுப்ப இப்போதுதான் உங்களுக்கு நேரம் வந்திருக்கிறது!” என்று கூறிவிட்டுத் தமது நாவை வெளியே நீட்டி அதைச் சுழற்றத் தொடங்கினார்கள். (நபி (ஸல்) அவர்களை நோக்கி) “உங்களைச் சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீதாணையாக! தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களை(அவர்களது குலப் பெருமையை)க் கிழித்தெறிவேன்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவசரப்படாதீர்! அபூபக்ரு, குறைஷியரின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குறைஷியரோடு எனது வமிசமும் பிணைந்துள்ளது. உம்மிடம் எனது வமிசாவளியை அபூபக்ருத் தனியாகப் பிரித்தறிவிப்பார்” என்று கூறினார்கள்.

ஆகவே, ஹஸ்ஸான் (ரலி) அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, (குறைஷி வமிசாவளி பற்றி கேட்டுத்) திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு (ரலி) உங்களது வமிசாவளியை எனக்குப் பிரித்தறிவித்தார்கள். உங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று அவர்களிடமிருந்து உங்களை நான் உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் சார்பாகவும் அவன் தூதர் சார்பாகவும் பதிலடி கொடுக்கும்வரை ‘ரூஹுல் குதுஸ்’ (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) உம்மோடு உறுதுணையாக இருந்துகொண்டிருப்பார்” என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்), “குறைஷியருக்கெதிராக ஹஸ்ஸான் வசைக்கவி பாடினார். நம்மையும் திருப்திப்படுத்தினார். தாமும் திருப்திகொண்டார்” என்று கூறினார்கள்.

ஹஸ்ஸான் (ரலி) (ஹுதைபியாவில்) பாடிய கவி வருமாறு:

நீ, முஹம்மது (ஸல்) அவர்களை
இகழ்ந்து வசைக்கவி பாடுகிறாய்.
நான் அவர் சார்பாக
எதிர்க்கவி பாடுகிறேன்.
அதற்காக அல்லாஹ்விடமே
நற்பலன் உண்டு (எனக்கு).
நீ
தயாள மனத்தவரும்
இறை பக்தியாளருமான
இறைத்தூதர் முஹம்மதை இகழ்ந்து
வசைக்கவி பாடுகிறாய்!
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதே
அவர்தம் பண்பு.
என் தந்தையும்
என் தந்தையின் தந்தையும்
எந்தன் மானமரியாதையும்
உங்களிடமிருந்து
முஹம்மத் (ஸல்) அவர்களைக்
காக்கும் கேடயம்.
‘கதா’ மலைக்குன்றின்
இரு மருங்கிலிருந்தும்
புழுதி கிளப்பும்
குதிரைகளை நீங்கள் காணாவிட்டால்
என் மகள்
இறந்துபோகட்டும்!
(விறைப்பிலும் வலுவிலும்)
கடிவாளங்களுக்குப் போட்டி போடும்
அக்குதிரைகளின் முதுகுகளில்
(இரத்த) தாகம் கொண்ட
ஈட்டிகளே வீற்றிருக்கும்.
அக்குதிரைகள்
ஒன்றையொன்றை முந்திக்கொண்டு
உங்களை முன்னோக்கி
விரைந்தோடி வரும்.
எங்கள் மங்கையர்
தம் முக்காட்டுத் துணிகளால்
அவற்றுக்கு
முகம் துடைத்துவிடுவர்.
நாங்கள்
(மக்காவுக்குள்) நுழையும்போது
கண்டுகொள்ளாமல்
நீங்கள் விட்டுவிட்டால்
நாங்கள் உம்ரா வழிபாட்டை
நன்கே நிறைவேற்றுவோம்.
அதுவே
எங்களுக்கு வெற்றியாக மாறும்;
திரையும் விலகும்.
இல்லாவிட்டால்
அல்லாஹ், தான் நாடியவர்களை
கண்ணியப்படுத்தும் போர்த் தினத்துக்காக
நீங்கள் பொறுமையோடு காத்திருங்கள்!
“உண்மையை
ஒளிவு மறைவின்றிப் பேசும்
அடியார் ஒருவரை
நான் அனுப்பியுள்ளேன்”
என்று அல்லாஹ் சொன்னான்.
“நான் ஒரு படையைத்
தயாரித்துள்ளேன்;
அவர்களே அன்ஸாரிகள்;
எதிரிகளைச் சந்திப்பதே
அவர்தம் இலக்கு”
என்றும் அல்லாஹ் சொன்னான்.
நாங்கள்
அனுதினமும்
‘மஅத்’ (குறைஷி) குலத்தாரிடமிருந்து
வசை மொழியும்
போர் முனையும்
வசைக் கவியும்
சந்திப்பதுண்டு.
உங்களில்
அல்லாஹ்வின் தூதரை
இகழ்ந்து பாடுபவர் யார்?
அவரைப் புகழ்ந்து
அவருக்கு உதவுபவர் யார்?
அவரைப் பொருத்தவரை
(இருவரும்) சமமே!
இறையின் தூதர் ஜிப்ரீல்
எம்மிடையே உள்ளார்.
அந்தத் தூய ஆத்மாவிற்கு
நிகர் யாருமில்லை (இங்கு).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4525

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ :‏

 أَنَّ حَسَّانَ بْنَ ثَابِتٍ، كَانَ مِمَّنْ كَثَّرَ عَلَى عَائِشَةَ فَسَبَبْتُهُ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي دَعْهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏


حَدَّثَنَاهُ عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ ‏

ஆயிஷா (ரலி) அவர்களுக்கெதிராக (அவதூறு கற்பித்து) அதிகமாகப் பேசியவர்களுள் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஒருவராயிருந்தார். ஆகவே, அவரை நான் ஏசினேன். அப்போது ஆயிஷா (ரலி), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அவரை (ஏசாதே) விட்டுவிடு. ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சார்பாக (எதிரிகளைத் தாக்கி) வசைக்கவி பாடுபவராக இருந்தார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4524

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، – وَهُوَ ابْنُ ثَابِتٍ – قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ ‏ “‏ اهْجُهُمْ أَوْ هَاجِهِمْ وَجِبْرِيلُ مَعَكَ ‏”‏ ‏


حَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பனூ குறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், “எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறியதை நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4523

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ :‏

سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ ‏

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அபூ ஹுரைரா! அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றேன்: நபி (ஸல்), ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக எதிரிகளுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக! இறைவா! ரூஹுல் குதுஸ் (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) மூலம் இவருக்கு வலிமையூட்டுவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா, இல்லையா?” என்று கேட்டு சாட்சியம் சொல்ல அழைத்தார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) “ஆம் (செவியுற்றேன்)” என்று (சாட்சியம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) வழியாக அபூஸலமா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4522

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ عُمَرَ، مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ‏.‏ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ أَجِبْ عَنِّي اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏”‏ ‏.‏ قَالَ اللَّهُمَّ نَعَمْ ‏


حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّ حَسَّانَ، قَالَ فِي حَلْقَةٍ فِيهِمْ أَبُو هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ يَا أَبَا هُرَيْرَةَ أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ ‏.‏

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), மஸ்ஜிதுந் நபவீயில் கவி பாடிக்கொண்டிருந்தபோது, அங்கு (கலீஃபா) உமர் (ரலி) வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (பாடாமல் அமைதி காக்கும்படி) சைகை செய்தார்கள்.

ஹஸ்ஸான் (ரலி), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களைவிடச் சிறந்தவர் (நபியவர்கள்) இருந்தபோது கவி பாடிக்கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, என்னை நோக்கித் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ் சாட்சியாக, ஆம்!” என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், ஹஸ்ஸான் (ரலி) ஓர் அவையில் இருந்தார்கள். அதில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரலி), “அபூ ஹுரைரா! அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இவ்வாறு) கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?” என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது.